The side that is not spoken about, generally.

வைணவத்தில் முனைவர் பட்டம் பெற்ற, பழுத்த அனுபவம் உடைய திரு.பார்த்தசாரதி என்னும் வாசகர் ‘நான் இராமானுசன்’ தொடர் பற்றி எழுதியுள்ள கடிதம் இது. சாகித்ய அகாதெமி விருதை விட மேலானது என்று எண்ணுகிறேன். இப்படிப்பட்ட சிறப்பான வாசகர்கள் எதிர்பார்ப்பைக் கெடுக்காத வண்ணம் நான் எழுத, அருமாகடலமுதன் அருள் புரிவானாக.

————————————————————————

அன்புடை நண்பர் ஆமருவி தேவநாதன் அவர்கட்கு ,

நலம்,தங்களின் நலத்தில் நாட்டம் .

தங்களின் “ஆ பக்கங்கள் நான் ராமானுசன்” பகுதிகளைப் படித்து வருகிறேன்.கூகூள் மாமி போன்ற நகைச்சுவை கட்டுரைகளும் சுவையாக உள்ளன.

நான் ராமானுசன் ( ‘அடியேன் ராமானுசன்’ இன்னமும்  பொருத்தமோ! – வைணவத்திற்கே உரித்தான அடியேன் என்ற பதம் கலைஞர் தொலைக்காட்சி மூலம் பலரிடம்  சேர்ந்துள்ளது என்பது ஓரளவு  உண்மை )

நன்றாக அமைந்துள்ளது உங்கள் கைவண்ணம் .வைணவம் சென்னைப் பல்கலை கழகத்தில் படித்து (இளநிலை ,முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று -அத்துணையும் பணி ஒய்வு பெற்றபின் -சென்னைப் பல்கலை கழகத்தின் “முன்னாள் வைணவ மாணாக்கர்கள் குழுமத்தின்”- Alumni Association of Vaishnavism – செயலாளர் என்கின்ற தகுதியிலும் நான் எனது குழுமத்திடம் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களை உங்களிடம் சேர்ப்பிக்க விரும்புகிறேன்.

தங்களின் இப்பணி தொடர எனது அன்புகலந்த வாழ்த்துக்கள் !

இராமானுஜர் தொடர் 50 வது காட்சியைக் கடந்து விட்டது .ஸ்ரீமத் இராமானுஜர் ஓர் அவதார புருஷர் என்பதைப்பற்றி வலியுறுத்தத் தேவை இல்லை.

தன்  வாழ்நாள் முழுவதும் நாத்திகம் பேசுவதுமட்டுமல்லாது ,ஆத்திகர்களின் மனதை

புண்படுத்தியே காலம் கழித்த இதன்  வசனகர்த்தாவின் மனப்போக்கை நாம் அறிவோம்.

.ஆனால் அவரது வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் தனது கடந்த கால வாழ்க்கைக்கு ஒரு பிராயச்சித்தமாகவே இத் தொடரில் தன்னை இணைத்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.

ஓர் ஆத்ம பரிசோதனைக்கு நாம் நம்மையே ஈடுபடுத்திக்கொள்ளுவோம்.

ஸ்ரீ ராமானுஜரின் வைணவத் தொண்டு ,சமூக தொலை நோக்குப்பார்வை, விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மேன்மை இவைகளை நாம் எந்த அளவிற்கு உணர்ந்துள்ளோம்? இவைகளை எந்த அளவிற்கு இதரர்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம்? நாம் தனி மனிதர்கள் -இது நம்மால் இயலுமா என்ற தயக்கம் நம்மிடம் இருக்கலாம்.இன்று நல்ல வசதியோடு இருக்கும் நம் மடங்களின்  பங்கு என்ன?

இந்த தொடர் தொடங்கியதிலிருந்து இத்தொடரைப்பற்றிய விளக்கங்களை என் நண்பர்கள் பலர் (வைணவம் அல்லாத) முக நூல் மூலம் பெற்று ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி அறிவது மட்டுமல்லாது அவரது செயல்களை வியந்து போற்றுகின்றனர்.வைணவம் என்றாலே தமிழ் என்பர். தமிழை வேதத்திற்கு நிகராக்கிய  ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி நம் சிலருக்கே தெரிந்த பல பெருமைகள் பலரிடம் போய்ச் சேர்ந்துள்ளது.

ஸ்ரீ எம்பார் எனப்படும் கோவிந்தரின் திருத்தகப்பனாரை ஒரு நகைச்சுவைப்  பாத்திரமாக   காட்டியிருப்பது ஒரு நெருடல். ஆயினும் ஸ்ரீ  சோமையாஜி, ஸ்ரீ   ,திருமலை நம்பி இவர்களை மிக உயரத்தி சித்தரித்து அந்த நெருடலை சரிசெய்து விட்டனர் எனலாம்.

Leave a comment