The side that is not spoken about, generally.

‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில் மறுபடியும் துயில் எழுப்பும் முயற்சியே தெரிவது பொதுப்பார்வை. இருப்பினும் கண்ணனைத் துயிலெழுப்ப இன்னமும் முயலவில்லை, பிராட்டியையே எழுப்புகிறாள்.

வைஷ்ணவ முறையான ‘இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே’ என்று குருபரம்பரை ஆச்சார்யர்கள், நம்மாழ்வார், திருமகள் என்று இவ்வரிசையில் வேண்டி, இவர்கள் வழியாகப் பெருமாளை அடைவது என்பது காட்டப்படுகிறது.

‘அம்பரமே’ பாசுரத்தில் உள்ள ‘அ’கரம், ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் உள்ள ‘உ’கரம், இன்றைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில் உள்ள ‘ம’ கரம் இவை மூன்றும் ‘அ + உ + ம் = ஓம் ‘ என்று ஓங்காரத்தை உணர்த்திடுவதாகப் பார்த்து மகிழ்வது வைஷ்ணவ காலட்சேப மரபு.

‘உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை’ என்னுமிடத்தில் ‘உன் மணாளனுக்குரிய சேவைகள் செய்து ( விசிறியும், கண்ணாடியும்), அவனது ஸ்வரூப சௌந்தர்யத்தை அவனுக்கு உணர்த்தி, மனங்குளிரச் செய்து, அதனால் எங்களுக்கு மோக்ஷம் தரச் செய்ய வேண்டும் என்று ஆச்சார்ய முகமாக சரணாகதி செய்துகொள்வது என்கிற சித்தாந்தம் பேசப்படுகிறது.

‘இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்’ என்னுமிடத்தில், மோக்ஷம் பின்னர் வேண்டாம், உடனே, இப்போதே வேண்டும். அதற்காகப் பெருமாளிடத்தில் பரிந்துரை செய்க என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘ஸமாச்ரயணம்’, ‘பார-நியாசம்’ முதலியவை உணர்த்தப்படுகின்றன என்பது கற்றறிந்த பெரியோர் பார்வை.

‘முப்பத்து மூவர் அமரர்’ என்று தேவர்கள் உணர்த்தப்படுவது ஏனெனில், அவர்கள் பிறவாப் பேறு பெற்றவர்கள்,
அவர்களுக்கே நீ அருள் மிக செய்தாய். ஆனால் நாங்களோ மானிடர்கள், உன் அடியார்கள். தேவர்கள் போன்ற சக்திகள் இல்லை. உன் சரண் தவிர எங்களுக்குக் கதி இல்லை என்பதாகப் பூரண சரணாகதித் தத்துவம் பேசப்படும் பாடல் இது.

#ஆண்டாள் #திருப்பாவை

Leave a comment