பூமியில் இருந்து எடுத்த Time Lapse காணொளியின் பின்னணியில் பால் மண்டலம் தெரிகிறது. கார்ல் சேகன் என்னும் அறிவியலாளர் இப்படிச் சொல்கிறார் ‘பூமி என்பது யாது? நினைக்க முடியாத அளவு பெரியதான பிரபஞ்சத்தில், இறந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் நிரந்தரமற்ற ஒளியில் யதேச்சையாக ஒளிரும் சிறு துரும்பு’.
“The aggregate of our joy and suffering, thousands of confident religions, ideologies, and economic doctrines, every hunter and forager, every hero and coward, every creator and destroyer of civilization, every king and peasant, every young couple in love, every mother and father, hopeful child, inventor and explorer, every teacher of morals, every corrupt politician, every “superstar,” every “supreme leader,” every saint and sinner in the history of our species lived there–on a mote of dust suspended in a sunbeam.”
பூமியே அவ்வளவுதான். அதில் நாடு, ஊர், மொழி, மனிதன் இதெல்லாம் என்ன? ஏற்றத்தாழ்வு, வேற்றுமைகள் இவை எல்லாம் என்ன ஒரு பொருட்படுத்தத் தகாத விஷயங்கள் அன்றோ ?
பூமி மட்டுமில்லை. மற்ற எல்லாமே, நாம் அனைவருமே வெடித்துச் சிதறிய ஏதோ ஒரு நட்சத்திரத்தின் ஒரு துகளின் பிள்ளைகள். ஆக மொத்தம் சாம்பல். அவ்வளவுதான்.
‘ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை, பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே’ என்கிறார் குமரகுருபரர்.
பசு மாட்டின் வாலில் உள்ள ஒரு மயிரின் நுனியை நூறில் ஒரு பங்காக்கி, அதில் ஒரு பங்கை எடுத்து அதிலும் நூறில் ஒரு பங்கை எடுத்து, அதை மனதளவில் நூறாக ஆக்கினால் அதில் உள்ள ஒரு பங்கு அளவே ஆத்மாவின் அளவாகும் என்று அஹோபில படம் 44ம் பட்டம் ஶ்ரீமத் அழகியசிங்கர் தனது உபன்யாசத்தில் சொல்கிறார்.
ஶ்ரீமத் அழகியசிங்கர் சொல்வதையும் கார்ல் சேகன் சொல்வதையும் ஒன்றிணைத்துப் பார்ப்பது புதிய திறப்பைத் தருகிறது. கார்ல் சேகன் சொல்வது ‘spec of dust’ என்னும் துரும்பின் ஒரு சிறு பகுதி. ஆத்மா என்பதன் அளவும் அத்தகையதாகவே இருப்பதாகச் சொல்கிறார் ஜீயர் என்று சிந்தித்துப் பார்த்தால் மனிதன் என்னும் மிகச்சிறிய அல்ப வஸ்துவைக் கண்டு கழிவிரக்கமே தோன்றுகிறது.
ஆக, வேதாந்தமும், அறிவியலும், விஞ்ஞானமும் மெய்ஞானகும் ஒரே விஷயத்தை வேறு வேறு மொழிகளில் சொல்கின்றன. இரண்டு முறைகளுமே மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தின் பிரும்மாண்டத்தையும் பூமி மற்றும் அதில் வாழும் உயிர்களின் மிகச் சிறிய, பொருட்படுத்த முடியாத தன்மையையும் ஒருங்கே கூறி வியக்க வைக்கின்றன.
விஞ்ஞானத்தயோ மெய்ஞானத்தையோ முழுதும் அறிந்தவனால் தான் என்னும் அகம்பாவம் கொள்ளவும், ‘நான் பெரியவன், என் வழியே சிறந்தது’ என்று கொள்ள வழியே இல்லை.
உங்கள் கருத்து என்ன ? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் ?
பால்வெளியைப் பின்புலத்தில் கொண்டு, பூமிச் சுழற்சியைக் காட்டும் ஒரு காணொலி.