வருத்தம் தணியட்டும் என்று காத்திருந்தேன். இன்று எழுதுகிறேன்.
வேறெந்த நாட்டிலும், மாநிலத்திலும் காலமானவர்களை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள். நடிகர் விவேக் என்னும் உன்னதமான கலைஞனை, அவர் காலமானவுடன், நீத்தார் கடனின் ஒவ்வொரு அங்கமாக ஊடகங்களில் காட்டுகிறார்கள். விட்டால் பூத உடல் எரிவதையுமே கூட காட்டுவார்கள் போல.
காலமானவர்களுக்கு மரியாதை இல்லையா? இப்படித்தான் அல்லோல கல்லோலப் படுத்தி, பூத உடலை எல்லாக் கோணங்களிலும் விடாமல் படம் எடுத்து, அவரே எழுந்து வந்து ‘போதும் கொஞ்சம் நிறுத்தறீங்களா?’ என்று கேட்கும் வரை படம் எடுத்துக்கொண்டே இருப்பதா? உடலுக்கு மரியாதை இல்லையா? என்ன மாதிரியான கொடுமையான சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம்?
எந்தப் பிரபலம் காலமானாலும் இப்படியே கூத்தடிப்பது என்பது என்ன மாதிரியான பத்திரிக்கை தர்மம்? கர்மம். வேறு எந்த நாட்டிலாவது இப்படி ஆடுகிறார்களா? காலமானவர்களை மரியாதையுடன் பெட்டியில் வைத்து, பெட்டிக்குத்தான் மாலை முதலியன செய்கிறார்கள். குடும்பத்தின் தனிமையை மதித்து, அவர்களை விட்டு விலகி நிற்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பாருங்கள், சிங்கப்பூரைப் பாருங்கள் என்று குதிக்கும் எந்த ஊடகமும் இந்த விஷயத்தில் அந்த நாடுகளைப் பார்ப்பதில்லை.
எந்தப் பிரபலத்தின் சாவையும் விட்டு வைக்காமல் அங்குலம் அங்குலமாகக் காட்டிப் பணம் ஈட்டும் கயமை தமிழகத்தில் என்றாவது தீருமா? இவ்வாறு செய்யாத நேர்மையான ஊடகம் ஏதாவது ஒன்று உண்டா தமிழகத்தில்?
இதில் கல் தோன்றி மண்தோன்றாக் காலம் என்று பெருமை பீற்றல் வேறு?
என்ன பகுத்தறிவோ, கண்றாவியோ..சே.. குமட்டுகிறது தமிழகக் காட்சி ஊடகங்களைக் கண்டு..
Leave a reply to mukhilvannan Cancel reply