வாசகர்களுக்கு வணக்கம்.
நேற்றும் இன்றும் மனம் ஒரு நிலையில் இல்லை. சொற்களில் நிதானம் தவறியிருந்தால் மன்னிக்கவும்.
‘செப்டம்பர் 11ற்குப் பதிலாக உலகம் டிசம்பர் 13 பற்றிப் பேசியிருக்கும்’ என்றார் அத்வானி.
இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் பற்றிப் பேசும் போது இதைச் சொன்னார். ‘பயங்கரவாதிகள் உள்ளே வந்திருந்தால், பாரதத்தின் நிர்வாகத் தலைமையும் எதிரணித் தலைமையும், அனேகமாக எல்லா உறுப்பினர்களும் மறைந்திருப்பர்’ என்றார் அத்வானி.
அது போன்ற நிகழ்வே அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான தாக்குதலும்.
தெய்வத் திரூவுருக்களைச் சேதப்படுத்திய கயவனிடம் வெடிப்பொருட்கள் இருந்திருந்தால் ? ஆயிரம் ஆண்டுப் பழமை உள்ள கோவில், இறைத் திருமேனிகள், சிற்பங்கள், நம் பண்பாட்டுச் சின்னங்கள், கோடிக்கணக்கான மக்களின் ஆதர்ச நம்பிக்கைத் தூண்கள், நம் தமிழகத்தின் / பாரதத்தின் மானம் – எல்லாம் காணாமல் ஆகியிருக்கும்.
ஒருவேளை மேற்சொன்னவாறு நடந்திருந்தால் அதன் விளைவுகள் ?
கயவனுக்கு மனநிலை சரியில்லை என்கிறது அரசு. மனநிலை சரியில்லாதவன் கோவில் சாத்தப்படும் முன் கோவிலுக்குள் ஒளிந்துகொண்டது எங்ஙனம் ? முருகப் பெருமானின் வேலைப் பிடுங்கி உண்டியலைப் பெயர்த்துள்ளான் என்கிறது செய்தி. மனநிலை சரி இல்லாதவன் செய்யும் செயலா இது? 63 நாயன்மார்களின் வஸ்திரங்களைக் களைந்து அவமானப்படுத்தியுள்ளான். பின்னர் கோவில் கோபுரத்தில் ஏறி ஒளிந்துகொண்டுள்ளான். மனநிலை சரியில்லாதவன் செய்யும் செயலா இது ?
சிசிடிவி இயங்கவில்லை என்று அரசு சொல்வது வெட்கக்கேடு. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டதாக அமைச்சர் பெருமை பேசுகிறார். கேவலம் சிசிடிவி வேலை செய்கிறதா என்று பார்க்க அதிகாரிகளுக்கு வக்கில்லை. பணம் இல்லை என்று சொல்ல முடியாது. இன்னோவா கார் வாங்க பணம் இருந்ததா ?
கோவிலைப் பாதுகாக்க வக்கில்லாத அறம் நிலையாத் துறை இதற்குப் பின்னரும் கோவிலை வைத்துக்கொண்டிருப்பது என்ன லட்சணம் ? நிலத்தைத்தான் பாதுகாக்க திராணி இல்லை. கோவிலையே பாதுகாக்க வக்கில்லை. அப்புறம் என்ன இந்து அற நிலையத் துறை ஜம்பம் ? இதற்கு செயல் அலுவலர் ஒரு கேடு. அவருக்கு மேல் ஜேசி, பாசி என்று சீட்டு தேய்க்க என்றே அதிகாரிகள். துறைக்கு ஒரு அமைச்சர் வேறு. கேட்டால் இரண்டாண்டு ஆட்சி, காட்சி என்று எதுகை மோனையில் பேசும் அரசு.
கோவிலில் ஆள் உள்ளதா என்று பார்த்து வரக் காவல்காரர் இல்லையா ? இரவு கோவிலுக்குள் சப்தம் எழுந்தால் கூடத் தெரியாத அளவிற்கா காவலர்கள் உள்ளனர் ? என்ன கருமம் பிடித்த அரசு அலுவலகம் இது ?
கண்ட கழிசடைகளையும் அதிகாரத்தில் இருத்தினால் வெளியில் சொல்லக் கூசும் அளவிற்குச் செயல்படுகிறார்கள்.
கோவிலின் செயல் அலுவலர் சோற்றில் உப்பிட்டுத்தான் உண்கிறாரா ? அவருக்கு மேலே உள்ள அதிகாரிகள் இரண்டு முழம் கயிறு வாங்கிக் கொள்ளலாம். வெட்கக்கேடு.
மக்களின் நிலை அதைவிடக் கொடுமை. எடுத்ததற்கெல்லாம் கடை அடைப்பு, தர்ணா. ஊருக்குப் பெயரே கோவில் பெருமானின் பெயர் தான். ஆனால் ஊரே கப்சிப்.
அரசியல்வாதிகள் ( அண்ணாமலை தவிர ) புடவை வாங்கச் சென்றுள்ளனர் போல. பிறிதொரு மதத்தின் சிறு குடில் சேதப்பட்டால் கூட கொந்தளிக்கும் ஜந்துக்கள் வாய்திறக்கவில்லை. இந்து முன்னணியின் காடேஸ்வரன், ஹிந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் தவிர யாருமே பேசவில்லை என்று நினைக்கிறேன்.
தெருவுக்குத் தெரு நிற்கும் சிலையின் மீது பறவை எச்சமிட்டால் கூட கொதித்து எழும் ஊடகங்கள் – வீட்டில் இழவு போல மௌனம். என்ன ஒரு வெட்கம் கெட்ட பிழைப்பு இது ?
சே..
–ஆமருவி
கடல் கடந்து நீங்கள் பதிவு செய்ததுபோல் கூட இங்கு எவரும்… என்னையும் சேர்த்து ….குரல் எழுப்பவில்லை… கடும் ஆட்சேபணை கள் எழுப்பவில்லை. வெட்கி தலை குனிகிறேன்!
LikeLike