Why my eyes blurred..

The pictures that you see have long held my imagination and thought for at least the last three decades for I was not born when the book was gifted by an aged Tamil scholar to another both of whom were eighty years old then. The book was first released ten years before that, in 1956.

Kambar Book 1This book was released to mark the annual literary event held to remember the legendary Tamil poet Kambar (AD 1180 – 1250). He had written the great Indian epic Ramayana in Tamil. So, the book was a compilation of articles and speeches by the then eminent scholars of 1956.

I have never met them or seen them. Nor have I interacted with them.

This book was in the attic of my late uncle who was himself a Tamil scholar. I was cleaning his old house in rural southern Indian town of Mayiladuthurai when I came across this book.

Kampar Book 2The moment I held the book in my hand, I was transported back many years in history. I had then thought about the poet Kambar, then about his book, and about the different people if yore who would have had researched and written about the poet. Then my thoughts had drifted to the year 1956, the way the annual function would have been held and the manner in which the book would have been released on the day of the function. Travelling forward from 1956, I had thought about 1966 when another scholar, who had read and enjoyed the book, had gifted his copy to another scholar.

Kambar book 3
I didn’t know how the book had come to be in my uncle’s custody. Having been a scholar himself, the 1966 recipient should have given it to my late uncle. And I was having the piece of history in hand and trying to re-live history. I had felt my vision blurred when I realized that was due to tears.

Now, thirty years later, when I hold the much weathered book in my hand, my vision is still blurred, again due to tears.

Thanks Damayanthi for this fantastic opportunity to relive my past.

பெருமாளுக்கு என்ன ராகம் உகந்தது ?

நியூ யார்க் நகர அருங்காட்சியகத்தில் நான் கண்ட பெருமாளுக்கு என்று சில பாசுரங்கள் பாடினேன். அப்பாடல்களை நல்ல ராகத்தில் நல்ல குரல் வளம் உடைய எனது நண்பரின் மகள் பாடி அதனை நியூ யார்க் அருங்காட்சியகத்தில் ஒலி பரப்பலாம் என்று ஒரு சிறு முயற்சி செய்கிறோம். எனவே பின்னால் வரும் பாசுரங்கள் என்ன ராகத்தில் அமையலாம் என்று இசை ஞானம் உள்ளவர்கள் சொன்னால் உபயோகமாக இருக்கும்.

பாசுரங்கள் இதோ :

தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,

பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,

நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.
——————-

தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த

எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,

முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்

அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே

———————-

திருவுக் கும்திரு வாகிய செல்வா தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா,

உருவச் செஞ்சுட ராழிவல் லானே உலகுண் டவொரு வா.திரு மார்பா,

ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா

தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

———————

ஆடியாடி யகம்கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்

நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடு மிவ்வாணுதலெ
——————–
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,

வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,

எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை

அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.

———–

“சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்”

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்

நியூ யார்க் அருங்காட்சியகம் சென்றிருக்க வேண்டாம் தான். என்னதான் இருக்கிறது என்று பார்த்துவரச் சென்றேன். சிட்டி வங்கி ஊழியன் என்பதால் இலவசமாக அனுமதி அளித்தார்கள்.

எகிப்திலிருந்து வந்திருந்த பல பண்டைய மன்னர்களின் மம்மி உருவங்கள், சமாதிக் கல்லறைகள் முதலியன தாண்டி சீன வரலாற்றுப பொருட்கள் கடந்து இந்தியக் கலைப் பொருட்கள் இருந்த இடம் நோக்கித் திரும்பினேன். அந்த அறை இருட்டாக இருந்தது. உள்ளே மனித நடமாட்டம் இல்லை. ஆனாலும் பேச்சுக்குரல் கேட்டமாதிரி இருந்தது. இருக்கட்டும் என்று உள்ளே சென்றேன்.

உள்ளே நுழைந்தவுடன் வரலாற்றில் கால் வைத்தது போல் இருந்தது. அறை இருளில் சில இடங்களில் மட்டும் ஒளியூட்டல் இருந்தது. ஒளியூட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அழகு திருமேனிகள். செப்புச் சிலைகள் அல்லது வெண்கலச் சிலைகள். எல்லாம் சோழர் கால வார்ப்புகள்.

Gnaanasambandhar

பார்த்த முகமாக இருக்கிறதே என்று அருகில் சென்றேன். திருஞானசம்பந்தர் திரு உருவம். அம்மையிடம் ஞானப்பால் குடித்த அந்தக் குழந்தை இன்று அமெரிக்காவில் குளிரூட்டப்பட்ட அறையில் ஆடை இல்லாமல் நின்ற திருக்கோலம். தவக்கோலம் பூண்ட திருமேனியின் இன்றைய கோலம் அலங்கோலம். சிரித்த முகம். இடது கையில் பாலாடை என்னும் பால் புகட்டும் பாத்திரம் போல் தெரிந்தது. ‘செம்மொழி எல்லாம் வளர்த்த நீங்கள் இந்தப் பால யோகியை மறந்தீரே’, என்று கேட்டது போல் இருந்தது. கன்னத்தில் ஓர் அறை விழுந்த மாதிரி இருந்தது.

பால சன்னியாசிக்கு அருளமுதம் ஊட்ட வேண்டி அன்னை பார்வதியும் அருகிலேயே இருந்தாள். கி.பி. 10ம் நூற்றாண்டைச் சார்ந்த அவள் அபிராமி பட்டர் தற்போது தமிழகத்தில் இல்லாததால் அமெரிக்கா வந்துவிட்டேன் என்றாள்.

Siva & Parvathi

அம்மை இருந்தால் அப்பன் இல்லாமலா? அமெரிக்கர்கள் விஷயம் தெரியாதவர்களா என்ன ? அருகிலேயே அம்மையையும் அப்பனையும் சேர்த்தியாக அமர வைத்துள்ளனர். பெற்றோர் இருந்தால் பிள்ளை வேண்டாமா ? முருகனும் இருக்கிறான் இருவருக்கும் இடையில்.

அட, மூத்த மகன் இல்லையா என்றால் அவன் சற்று தள்ளி நிற்கிறான். என்ன இருந்தாலும் இளைய பிள்ளை செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒரு மகானுபாவன் 10 சென்ட் நாணயம் வைத்துச் சென்றிருக்கிறான். அதற்கு சந்தோஷப்பட்டுப புன்னகையுடன் நிற்கிறான் கணபதி.

தெய்வங்கள் இருந்தால் அடியார் இருக்கமாட்டாரா ? தலையாலேயே ஊர்ந்து கைலாயம் சென்ற அம்மையாருக்கு அமெரிக்கா எம்மாத்திரம் ? அவரும் இருக்கிறார்.

Kaaraikkaal Ammaiyaar

இவர்கள் அனைவரையும் கவனித்தபடி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் எம்பெருமான் நாராயணன்.Perumaal

‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’, சங்கோடும் சக்கரத்தோடும் அபய ஹஸ்தத்தோடும் சாந்த மூர்த்தியாய் நிற்கிறான் தனியாக. மூன்று வேளை ஆராதனமும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வருடாந்திர உற்சவங்களும் காணாமல், ஒரு வேளை கூட அமுது இன்றி இன்னும் நின்றுகொண்டிருக்கிறான் எம்பெருமான்.

வார்ப்பில் தெரிகிறது இவன் எங்கள் ஊர்ப்பக்கம் தான் என்று. பிற்கால சோழர் வார்ப்பு. பிரயோக சக்கரம் உபயோகத்திற்குத தயாராகத தெரிகிறது. ஆனால் என்ன ஊர் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு திவ்ய தேசமாக இருக்கலாம். ஏதோ திவ்யதேசத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும் இவர். சிலையின் கீழ் உற்சவங்களின் போது புறப்பாடு செய்யப் பயன்படும் வகையில் பீடம் அமைந்துள்ளது.

purappaadu

வேலைக்காக பட்டாச்சாரியார்களும் சாப்ட்வேர் எழுத அமெரிக்கா போனதால் பெருமாளும் அவர்களைத் தேடிக்கொண்டு நியூ யார்க் வந்து விட்டானோ என்று நினைத்தேன். ஆனால் பெருமாள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதே மௌனம் தான். ஏதோ கோபம் போலும் தெரிந்தது.

கோவில் ஒழுகில் இராமானுசர் என்ன உற்சவங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரோ அவற்றில் ஒன்று கூட இல்லாமல், ஒரு வேளை தளிகை கூட இல்லாமல் தனியாகப் பல நூறு ஆண்டுகளாக நின்றுகொண்டிருப்பதால் கோபம் வராமல் என்ன செய்யும் ? என்றும் நினைத்தேன். ஆனால் மனம் தாளவில்லை. ஒரு காரியம் செய்தேன்.

Me with Lordஆவது ஆகட்டும் என்று பெருமாள் அருகில் நின்றுகொண்டேன். கையைக் கூப்பிக்கொண்டு தேரழுந்தூர் பாசுரங்கள் ( ‘தேமருவு பொழிலிடத்து.., செங்கமலத் திருமகளும் புவியும்…, திருவுக்கும் திருவாகிய செல்வா.., தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ … ) பாடி னேன். கண் திறந்த போது என்னைச் சுற்றி ஒரு சிறு கூட்டம். சீனர்கள், அமெரிக்கர்கள் என்று 7-8 பேர் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பழியைத துடைத்த பெருமிதம் எனக்கு. பெருமாளைப் பார்த்தேன். புன்முறுவல் போல் தெரிந்தது. எந்த நூற்றாண்டில் இவர் இப்பாசுரங்கள் கேட்டாரோ தெரியவில்லை. 21-ம் நூற்றாண்டில் கேட்டுவிட்டார். நானும் ஆழ்வாரானேன். அமெரிக்காவும் திவ்யதேசமாகியது.

கூட்டம் என்னையே பார்த்தது. நான் பெருமாளைப் பார்த்தேன். ‘என்னால் உன்னைப பாரதம் கொண்டு செல்ல முடியாது. கையாலாகாத பாவி நான். என்னால் முடிந்தது பாசுரம் பாடுவது தான். எனவே என்னை மன்னித்தருள்வீர் பெருமாளே’, என்று வேண்டியபடி நின்றிருந்தேன். ஒரு அமெரிக்கர் படம் எடுத்தார்.

Yoga Narasimharகூட்டம் ஒரே இடத்தில் இருப்பது பார்த்த அருங்காட்சியக அதிகாரி ஒருவர் விசாரிக்க வந்தார். அதற்குள் நான் ‘யோக நரசிம்மர்’ சந்நிதிக்குச் சென்று விட்டேன். ஆமாம் அவரும் இங்கு தவக்கோலத்தில் இருக்கிறார். கம்ப இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தில் இருந்து ‘சாணிலும் உளன் ஓர் அணுவைச சத கூரிட்ட கோணிலும் உளன்..’ என்ற பாடலையும், ‘ஆடியாடி அகம் கரைந்து ..’ என்ற திருவல்லிக்கேணி பாசுரத்தையும் பாடினேன். அதிகாரியும் பார்த்தபடி நின்றிருந்தார்.

விட்டு வைப்பானேன் என்று சிவன் பார்வதி அமர்ந்த கோலத்தில் இருக்கும் இடம் சென்று ‘பொன்னார் மேனியனே..’ பதிகம் பாடினேன். அதிகாரி ஒன்றும் சொல்லவில்லை.

அந்த அதிகாரியிடம் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒரு திருமால் சிலையில் சக்கரம் இடம் மாறியுள்ளதை சுட்டிக் காட்டினேன். அந்தச் சிலையையும் வெண்கலப் பெருமாள் சிலையையும் ஒப்பிட்டுக்காட்டி விளக்கினேன். அவர் குறித்துக் கொண்டார். ‘I am not an authority on these sculptures. But as you are a native of India, I take note of this and would make a report to the authorities’, என்று எழுதிச் சென்றார்.

அனாலும் பெருமாளின் இந்த இழி நிலை மனதை விட்டு நீங்க வில்லை. மீண்டும் ஒரு முறை வலம் வந்து பல படங்கள் எடுத்தேன். இதைக் காண்பவர்கள் யாராகிலும் உங்கள் ஊரில் பெருமாள் சிலைகள் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதா என்று சரி பார்க்க வேண்டுகிறேன். இந்தச் சிலையை John D.Rockfeller ( ராக் பெலலர் ) என்னும் அமெரிக்க பெருஞ்செல்வந்தர் இவ்வருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. நம்மூரில் பெருமாளை விற்றவர் யார் என்று பார்த்தால் 40 ஆண்டுகளுக்குள் பதவியில் இருந்தவர்களில் யாராவது ஒருவராக இருப்பார்கள்.

40 வருட திராவிடக் கட்சிகளின் அழிச்சாட்டியத்தில் நமது பாரம்பரியம் கொள்ளை போனது. நமது வரலாறு நம் கண் முன்னே மெள்ள மூழ்கி அழிந்தது. நாம் மௌன சாட்சிகளாக இருந்தோம். வரலாறு அழிக்கப்பட்ட போது வேறு பக்கம் பார்த்தோம். ஒன்றும் நடவாதது போல் சினிமாவில் மூழ்கி இருந்தோம். சரோஜா தேவியும் தேவிகாவும் நமது இச்சைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவர்களாக இருந்தனர். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் காதல் செய்ய விட்டு நமது சுய இச்சைகளை நிவர்த்தித்துக் கொண்டோம். ஆண்மை இழந்து நிற்பதை ஒரு பெருமையாகப் பேசினோம். அதற்கு ‘பகுத்தறிவு’ என்று பெயர் வைத்தோம். அல்லது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டு மூலையில் முடங்கினோம். ஆங்கிலக் கல்வி பயின்று அடிமாடுகளாக நிற்பதை ‘செக்யூலரிசம்’ என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டோம்.

ஜெயமாலாக்களின் மேனி வனப்பின் சூடு தணியும் முன்னர் சில சிலுக்குகளுக்குத் தாவினோம். ‘நேத்து ராத்திரி அம்மா’வைப பிள்ளைகள் முனகியபடி பாடக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தோம். வடிவேலுவின் உடல் சேட்டைகளையும் வட்டார வழக்கையும் நாம் பயன் படுத்துவதை ஒரு பெருமையாகப் பறை சாற்றினோம். நமீதாவின் உடலை அளவு எடுத்துக்கொண்டிருந்த போது அளவில்லாத நமது கலைச் செல்வங்கள் கொள்ளை போனது தெரியவில்லை. நயன்தாராவின் தொடர்புகளை ஆராய்ந்த போது நமது முன்னோருடன் நமக்கிருந்த தொடர்புகளை சிலைகள் திருட்டின் மூலம் இழந்தோம். சிம்ரனின் திருமணத்தில் நமக்கிருந்த அக்கறை சிலைகள் திருடுபோவதைத தடுப்பதில் இல்லை. குஷ்பூவிற்குக் கோவில் கட்டும் மும்முரத்தில் நமக்குக் காமாக்ஷியம்மன் கோவில் களவு போனது தெரியவில்லை. தமன்னாவின் கொள்ளை அழகால் நமது திருமால்கள் கொள்ளை போனது தெரிந்தும் வாய் மூடி இருந்தோம்.

‘கோமளவல்லி’ தாயார் நிலை தெரியாமல் ‘கோச்சடையான்’ பற்றிக் கவலை கொண்டோம். பெருமாளின் விஸ்வரூப தரிசனம் பாராமல் ‘விஸ்வரூபம்’  பிரச்சினை பற்றி அங்கலாய்த்தோம். 40 ஆண்டுகளாக மெதுவாக நபும்சகத் தன்மை ஊறப் பெற்றோம்.

இந்தக் காமாக்ஷிகளும், திருமால்களும் நியூ யார்க்கில் அடைக்கலம் தேடினர். இன்று நான் அவர்களை சந்தித்தேன். ஆறுதல் கூறிப பதிகம் பாடினேன்.

தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் : நியூ யார்க் வரும் போது உங்கள் மதம், சாதி முதலியன தூர வைத்துவிட்டு சென்ட்ரல் பார்க் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வாருங்கள். நமது தெய்வங்கள் முன்னர் சிறிது நேரம் நின்று மௌனமாக ஒரு பாசுரமோ பதிகமோ பாடுங்கள்.

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்.

கம்பன் – மதுவும் மாமிசமும்..

கம்பன் மதுவும் மாமிசமும் பற்றி என்ன கூறுகிறான்  என்று பார்க்கும் முன், சில அதிர்ச்சிகளை எதிர்கொள்வோம்.  “அட, இப்படியும் இருந்திருக்குமா?”, என்று எண்ண வைப்பது அந்தச் செய்தி.

மதுவும் மாமிசமும் தமிழர் நாகரிகத்தில் இருந்தன, அன்றாட உணவில் இருந்து வந்துள்ளன என்றால் நம்புவது கொஞ்சம் கடினம் தான். ஆனால், சாமி.சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் இவை தமிழர் உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்துவந்துள்ளன என்று அடித்துக் கூறுகிறார்.

“பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கிய நூலகளில் மதுவும் மாமிசமும் கலந்து மணம் வீசுவதைக் காணலாம். பெரு மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள், அனைவரும் தம்மிடம் வந்த விருந்தினர்க்கும்,இரவலர்க்கும் வேண்டியமட்டும் மதுவும், மாமிசமும் அளித்து அயர்வு தீர்த்தனர்; என்று அந்த நூல்களில் காணப்படுகின்றன. பெரும் புலவர்களான ஔவையாரும், கபிலரும் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தனர்”, என்கிறார் சாமி.சிதம்பரனார்.

அதுபோலவே, “அறியப்படாத தமிழகம்” என்னும் நூலில் தொ.பரமசிவன் என்னும் நிகழ்கால ஆராய்ச்சியாளர், தமிழ்க் காவல் தெய்வங்களான சுடலைமாடன், கருப்பசாமி முதலிய தேவதைகளுக்கு மிருக பலி கொடுப்பதை விலாவாரியாகக் குறிப்பிடுகிறார். அவர் கூறும் சில முறை பலிகள் நாகரீக எல்லைக்குள்ளேயே இல்லை. ஆனால் அப்படியும் ஒரு காலம் இருந்துள்ளது தெரிகிறது. ஆனால் இது சங்க காலமா என்று தெரியவில்லை.

ஆனால் சங்க காலம் கழித்துத் தோன்றிய “சங்கம் மருவிய” கால நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிலும், திருக்குறள், சைவ வைணவ சமயக் கால நூல்களிலும் மதுவும் மாமிசமும் இழித்துக் கூறப்படுகிறது. ஆக, சமண, பௌத்த, சைவ, வைணவ மதங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் பதியும்வரை மதுவிற்கும் மாமிசத்திற்கும் தமிழ் மண்ணில் ஒரு ஏற்றம் இருந்துள்ளது தெரிகிறது.

வள்ளுவர் மாமிச உணவை மிகவும் பழிக்கிறார். மதுவையும் அப்படியே, எனவே “புலால் உண்ணாமை”, “கள் உண்ணாமை” என்று அதிகாரங்களே வைத்துள்ளார்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்” என்கிறார்.

( கொல்லா  விரதத்தைக் கொண்டவனை, மாமிசம் உண்ணாதவனை இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும் )

இந்தக் காலங்கள் கழித்து 300 ஆண்டுகள் பின்பே கம்பன் காலம். அவனது எழுத்துக்களில் திருக்குறள், ஆழ்வார் பாசுரங்களின் பாதிப்பு தெரிகிறது. எனவே மதுவையும் மாமிசத்தையும் பழிக்கிறான் கம்பன்.

இதில் கவனிக்கத்தக்கது வால்மீகி ராமாயணம் மதுவும் மாமிசமும் வெறுக்கப்படாத காலத்தில் எழுத்தப்பட்டது. ஆனால் கம்ப ராமாயணமோ சமண, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வேரூன்றி அழிந்தபின் பக்தி இலக்கியக் காலங்களுக்குப் பின் எழுதப்பட்டது. எனவே தான் கதா பாத்திரங்களை மதுவும் மாமிசமும் உண்ணாதவர்களாகச் சித்தரிக்கிறான் கம்பன்.பின்னர் அதுவே சிறந்த ஒழுக்கம் என்று கருத்தப்படுகிறது.

கம்பன் இராமனைக் கனியும் கிழங்குகளும் உண்பவனாகவே காட்டுகிறான். இதைத் தவறாமல் குறிப்பிடுகிறான்.

இராமனும் சீதையும் கானகம் அடைகிறார்கள். அங்கு அவர்கள் உண்ணும் உணவு காட்டப்படுகிறது :

“காயும் கானில் கிழங்கும்கனிகளும்

தூய தேடிக்கொணர்ந்தனர்; தோன்றல் நீ

ஆயகங்கை அரும்புனல் ஆடினை,

தீயை ஓம்பினை செய்அமுது என்றனர்”

( காட்டில் கிடைக்கும் உண்பதற்கரிய காய்களையும், கிழங்குகளையும், கனிகளையும் நல்லனவாகத் தேடிக் கொண்டுவந்தனர். பெருமையுள்ள இராமனே, நீ சிறந்த உயர்ந்த கங்கையில் நீராடி, தீ வளர்த்து வேள்வியினை முடித்தபின் இவற்றை உண்டு களைப்பு தீருவாயாக, என்று வேண்டிக்கொண்டனர் )

இதில் நாம் காண வேண்டியது, இராமன் உணவு உண்ண வேண்டிய முறை பற்றியும் முனிவர்கள் கூறுவதுபோல் அமைத்துள்ளது. நீராடவேண்டும், தீ வளர்த்து தினப்படி ஆற்றவேண்டிய தெய்வீகச் திருச்சடங்குகள் செய்யவேண்டும், பின்னர் காயையும் கனியையும் உண்ண வேண்டும் ( “அமுது செய்ய வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை வைணவர்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர்).

கம்பன் இன்னொரு இடத்திலும் இராமன் உண்டது என்ன என்று கூறுகிறான்.இலக்குவன் தான் உண்டது என்ன என்று கூறுமாப்போலே அமைந்துள்ள பாடல் இது :

“பச்சிலை கிழங்கு காய் பரமன் துங்கிய

மிச்சிலே நுகர்வது, வேறுதான் ஒன்று நச்சிலேன்”

( இராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய்களின் மீதத்தையே நான் உண்பது வழக்கம். இதைத் தவிர வேறு ஒன்றையும் நான் விரும்புவதில்லை ).

யுத்தகாண்டத்தில், கம்பன் இராமனை வர்ணிக்கும்போது,

“கானிடைப் புகுந்து இரும்கனி காயொடு நுகர்ந்த

ஊன்உடைப் பொறை உடம்பினன் .. ” என்று கூறுகிறார்.

( காட்டில் அமைந்துள்ள பழங்களையும், காய்களையும் உண்ட ஊண் அமைந்த பாரமாகிய உடம்பை உடைய இராமன் .. )

மேலே காய் கனிகளை மட்டும் உண்டான் என்று தெரியும்படிக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.

விபீஷணன் நல்லவன் என்று இராமனுக்கு எடுத்துக் கூறும் அனுமன் பின்வருமாறு கூறுகிறான் :

“நிந்தனை நறவமும் நெறியில் ஊண்களும் தந்தன கண்டிலன் ”

(பழிக்கு ஆளாக்கும் மதுவும், நன்னெறிக்கு மாறான புலால் போன்ற உணவு வகைகளையும் இவன் – விபீஷணன்- சேர்த்து வைத்து நான் கண்டதில்லை )

மாமிச உணவு  உண்ணாதவர்களை “சைவம்” என்று தற்காலத்தில் அழைக்கிறோம்.கொல்லா விரதம் கொண்டவர்கள் சைவர்கள் என்று அழைக்கப்படவேண்டிய காரணம் என்ன ? கம்பனை விட்டு சற்று விலகி, வேறு சில பழைய பாடல்களை ஆராய்வோம்:

திருமூலர் என்னும் சைவ சமயப் பெரியார்,

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே” என்று அன்பாக இருப்பதே சிவம், தெய்வத்தன்மையானது அன்பு என்னும் பொருள் படும்படிக் கூறுகிறார்.

மற்ற மனிதர்களிடத்து அன்பு செய்தலே சிவமா அல்லது எல்லா உயிரிடத்தும் அன்பு செய்வது சிவ நெறியா என்ற குழப்பம் தோன்றலாம்.

அதற்குத் தாயுமானவர் என்ற சைவப் பெரியவர் கூறுவது :

“எவ்வுயிரும் பராபரன்சந்  நிதிய தாகும்

இலங்கும்உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் ”

(எல்லா உயிரும் இறைவனின் சன்னிதியே, இங்கு வாழும் உயிரினங்களின் உடலே இறைவன் வாழும் ஆலயம்).

ஆக அன்பு செய்தல் எல்லா உயிரிடத்தும் செய்தல் வேண்டும் என்பது சைவ சமயம்.

தாயுமானவர் மேலும்,

“கொல்லா விரதம் குவலயமெ லாமோங்க

எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே”, என்று பாடுகிறார்.

(உயிர்களைக்கொல்லாமை என்னும் விரதம் இந்த உலகெல்லாம் தழைத்து வளர எல்லாருக்கும் எடுத்துச்சொல்வதே என் ஆசை )

ஆக சைவ சமயம் பின்பற்றுபவர்கள் மாமிசம் உண்பது தவறு என்பது பல வகையிலும் சொல்லாமலே சொல்லப்பட்டுள்ளது காண்கிறோம்.

சிவன் வழிபாட்டு சமயம் சிவ-சமயம் என்றும், காலப்போக்கில் சைவ சமயம் என்று ஆகி இருக்க வேண்டும். அத்துடன் அன்புருவான சிவனை வழிபடுபவர்கள் மாமிச உணவைத் தவிர்த்ததால் சைவர்கள் ஆனார்கள் என்று வழக்கத்தில் வந்திருக்கலாம் என்று காலஞ்சென்ற தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தெரிவிக்கிறார்.

இந்த நேரத்தில், “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் ” என்று மஹாகவி பாரதியார் பாடியுள்ளது நினைவில் கொள்ளத் தக்கது.

கம்பனிடம் திரும்ப வருவோம்.

மது அருந்துவதை இழித்துக் கூறும் கம்பன் பரதன் கூறுவதுபோல் அமைத்துள்ள பாடல் ஒன்று உள்ளது 

இராமனைக் கைகேயி காட்டிற்கு அனுப்பும்போது பரதன் அயோத்தியில் இல்லை.அவன் வந்தபிறகு அவனது உள்ளத்தை அறிய இராமனின் தாய் கோசலை ,பரதனிடம் ,”கைகேயி செய்த வஞ்சனை உனக்கு முன்னமே தெரியாதா?” என்ற பொருள் படும்படிக் கேட்டாள். அதைக்கேட்ட பரதன்,”என் அன்னை செய்த வஞ்சகச் செயலை முன்னரே அறிந்து நான் உடந்தையாய் இருந்திருப்பேனானால் நான் பின்வரும் மாபாதகச் செயலைச் செய்தவர் அடையும் பாவத்தை அடைவேன்”, என்று கூறுகிறான்.

“கன்னியை அழிசெயக் கருதினோன், குரு

பன்னியை நோக்கினன்; பருகினோன் நறை ;

பொன்இகழ் களவினில் பொருந்தினோன், என

இன்னவர் உறுகதி என்னது ஆகவே”

(மணமாகாத கன்னிப்பெண்ணிடம் தவற நினைத்தவன்; குருவின் மனைவியைக் கெட்ட எண்ணத்துடன் பார்த்தவன் ; மது அருந்தியவன்; பொன்னைத் திருடிச் சேர்க்கும் இழிதொழிலில் ஈடுபட்டவன் ; இவர்கள் அடையும் கதியை நான் அடைவேன்).

மது அருந்துவதைப் பெண்ணிடம் தவறாக நடப்பதற்கும், ஆசிரியரின் மனைவியைப் பற்றித் தவறாக எண்ணுவதற்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறான் கம்பன்.

மேலும் மதுவின் தீய விளைவுகளைப் பட்டியல் போடுகிறான் சுக்ரீவனின் வாயிலாக. அது பின்வருமாறு:

“வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபில் கொட்பும்,

தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்

கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளினால்; அருந்தினாரை

நஞ்சமும் கொள்வது அல்லால் நரகினை நல்காது அன்றே”

(மது அருந்துதல் வஞ்சகம், களவு, பொய்- இது மூன்றையும் செய்யத்தூண்டும்; மயக்கத்தை உண்டாக்கும்; முறையற்ற வழியில் அறிவை அலையச் செய்யும்; அடைக்கலம் அடைந்தவரை உதைத்துத் தள்ளச் செய்யும்; நல்ல குணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்; செல்வமும் நீங்கிவிடும்; கள் உண்பவர்களை அக்கள்ளில் உள்ள நஞ்சே கொன்றுவிடும் … )

உலகில் உள்ள அனைத்துப் பாவங்களுக்கும் மூல காரணமாக மதுவைக் கம்பன் மது அருந்தும் பழக்கம் உள்ள சுக்ரீவன் வாயிலாகவே சொல்லவைத்துள்ளான்.

சுக்ரீவன் மேலும் பேசுவான் :

“அய்யநான் அஞ்சினேன் இந் நறவினின் அரியகேடு

கய்யினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்”

(ஐயனே, நான் இந்த மதுவினால் வரும் பெரிய கேடுகளுக்கு அஞ்சினேன்; இனி என் கையால் மதுவைத் தீண்ட மாட்டேன்; உள்ளத்தாலும் நினைக்க மாட்டேன்; அதனை மனத்தால் நினைப்பதே தீமையாகும் )

மதுவிலக்கு, மாமிச விலக்கு முதலியன நல்ல ஒழுக்கங்களை அளிக்கும்; நம்மை உயர்த்தும். எனவே இக்கேடுகளை அறவே விலக்கிய ஒரு ஒழுக்க சமுதாயமே உயரும் என்ற கொள்கையில் கம்பன் பளிச்சிடுகிறான்.

இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். தற்காலச் சூழ் நிலையைப் பற்றி எண்ணினால் பாரதி சொன்னதுபோல,”நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று கோபம் கொப்பளிக்கப் பாட வேண்டியதுதான்.

தற்போது நாட்டில் அரசே கள் விநியோகம் செய்யும் காலத்தில்,மது பற்றிய கம்பன் பாடல்கள் நமது பாடங்களில் வராதது ஏன் என்று அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.

அடுத்த பதிவில் என்ன வரும் என்று தெரியாது !

கம்பன் சுவை – ஒழுக்கம்

kamban turban

இராமாயணத்தில் பல ஒழுக்கங்கள் காட்டப்படுகின்றன. அதுவும் கம்பன் பல அரிய விஷயங்களைக் காட்டுகிறான். அவை அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழ் நாட்டுப் பண்புகளுக்கு ஒத்து அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

முன்னமேயே கூறியது போன்று நாம் இராமன் பற்றிய கதை பேச இங்கு வரவில்லை. இராமனின் கதை நாம் அறிந்ததே. ஆனால் அறியாதது நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள நம் முன்னோர்களின் மாண்புகள் மற்றும் நெறிகள். அவற்றை நாம் கம்பன் மூலம் கண்டு வருவோம். துணைக்கு ஆழ்வார்களும், சங்க இலக்கியங்களும், நாயன்மார்களும் , வள்ளுவரும் இன்னும் சிலரும் அவ்வப்போது வருவார்கள்.

இப்போதெல்லாம் ஒழுக்கம் என்றால் ஏதோ ஒரு பிற்போக்குத்தனமான எண்ணம் என்றே பலரும் நினைக்கத் துவங்கிவிட்டார்கள். யாராவது ஒழுக்கம் என்று பேசத்துவங்கினால், எதிரில் இருப்பவர் கொட்டாவி விடுவதுபோன்று செய்வார். அந்த அளவுக்கு நாம் இதைக் கொண்டு சென்றுள்ளோம்.

இதைப் படிக்கும்போது கம்பன் வாழ்ந்த காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். இங்கிலாந்து முதலியவை காட்டுமிராண்டிகளாய் அலைந்துகொண்டிருந்த காலம். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவே இல்லை. அந்த நிலையில் இந்தியப் பண்பாடு இருந்த உயர்ந்த நிலை பிரமிக்க வைக்கிறது. அப்படி இருந்த நாம் தற்போது உள்ள நிலை நினைத்து எண்ண வேண்டும்.

கம்பன் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் காப்பியம் மூலம் காட்டிவிட்டான். உதாரணமாக, இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படை திரட்டிக்கொண்டு பரதன் கானகம் வருகிறான்.அங்கே படகோட்டும் குகனைச் சந்திக்கிறான். பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான் என்று கேட்கிறான். தர்ப்பைப்புல் மெத்தையும், தலை வைத்துகொள்ள ஒரு கல்லையும் காட்டி,”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்று அழுதவாறே சொல்கிறான் குகன்.

பின்னர் பரதன், “இலக்குவன் எங்கே படுத்திருந்தான்?” என்று கேட்கிறான்.

இங்குதான் கம்பன் காட்டும் தமிழ் நாட்டு ஒழுக்கம் தெரியும். குகன் கூறுவது போல் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:

“அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும் அவனும் துஞ்ச

வில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்

எல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”

(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).

இதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல.குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.

இராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்.

குகன் காட்டில் வாழ்பவன். ஓடம் ஓட்டுபவன். மாமிசம் உண்பவன். நகரங்களில் வாழாதவன். படிப்பறிவில்லாதவன். ஆனாலும் அவன் வாயிலாகக் கம்பன் காட்டும் ஒழுக்கம் மிக மேலானது. ( மதுவும் மாமிசமும் உண்பது பற்றித் தமிழ் நூல்கள் கூறுவதைப் பின்னர் பார்ப்போம் )

கம்பன் சீதையின் அழகைப் பல இடங்களில் வர்ணனை செய்துள்ளான். அவை அவன் கவி என்ற வகையில் அவனுக்குப் பொருந்தும். ஆனால் குகன் வேறொரு ஆண்மகன். இன்னொருவன் மனைவியைப் பற்றிக் கூறும்போது தமிழ் மக்கள் ஒழுக்கத்தைப் பேணும் விதமாகக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.

பல ஒழுக்கங்களைப் பற்றிக் கம்பன் கூறியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒழுக்கமாகக் கருத்தப்படும் “பிறன் இல் விழையாமை ” என்னும் சீரிய பண்பு.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தமிழகத்தில் இருந்துவரும் பழைய மரபு. சங்க இலக்கியங்கள் முதல் பலவற்றிலும் இந்தச் சீரிய மாண்பு வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாகக் கம்பர் காட்டும் காட்சிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

இராமன் தன் “ஏக பத்தினி விரதம்” என்கின்ற நெறியை சீதையிடம் கூறியிருக்கிறான். அதை நினைவுபடுத்தும் விதமாக சீதை அனுமனிடம் பின்வருமாறு கூறினாள்:

“வந்த எனைக் கைப்பற்றிய வைகல் வாய்

இந்த இப்பிறவிக்கு இருமாதரைச்

சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்”

( இராமன் மிதிலைக்கு வந்து என்னைக் கைப்பிடித்துத் திருமணம் செய்தபோது ஒரு உறுதி அளித்தான். இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணை உள்ளத்தாலும் தொடமாட்டேன் ..)

இங்கு நாம் காண வேண்டியது “இந்த இப்பிறவியில் ..” என்னும் தொடரை. “இந்தப் பிறவியில்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக “இந்த இப் பிறவி ..” என்று இராமன் வாயிலாகக் கம்பன் கூறுவான்.

இதில் இன்னொரு நயம் உள்ளது. “சிந்தையாலும் தொடேன்..” என்பது , உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் நெருங்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டுமானால் கற்பின் நெறி இராமன் மூலமாக வலியுறுத்தப்படுவதே அந்த நயம். “கற்பு” என்பது உடல் மட்டுமே தொடர்பான ஒரு அணி அல்ல. உள்ளமும் தொடர்பான ஒரு அணி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு அணி என்று அறிதல் பொருட்டு கம்பர் இவ்வாறு காட்டுகிறார்.

பாரதியும்,

“கற்பு நிலையென்றுசொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு நிலையைப் பொதுவாக வைத்துள்ளது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

இராமன் வாழ்ந்த காலத்தில் பல தார மணம் வழக்கத்தில் இருந்துள்ளது. தசரதனே பல தார மணம் புரிந்தவன் தானே ? ஆயினும் அவனது மகன் இராமன் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக “ஒரு தார மணம் உயர்ந்த குணம்” என்று நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளான்.

இராவணன் நல்லவன் தான். ஆனால் பல தார மணம் கொண்டிருந்தான் என்று கம்பர் காட்டுகிறார்.

சூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து வருமாறு சொல்லுமிடத்தில்,

“வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்

கிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே” என்கிறாள்.

( வள்ளல் தன்மை கொண்டவனே, உனக்கு மட்டுமே நான் நல்லவள். உன் மனையில் கிளியைப் போல் உரையாடும் உன் காதலிகளுக்கெல்லாம் நான் கேடு செய்தவளாவேன் )

இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் தன் மாமனான மாரீசனை உதவுமாறு வேண்டுகிறான். அப்போது மாரீசன் கூறுவது :

“நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா

வாரம் கொண்டார், மற்றொருவர்க்காய் மனைவாழும்

தாரம் கொண்டார், என்றிவர் நம்மைத் தருமந்தான்

ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா !”

(நடு நிலைமை தவறியவர்கள், பிற நாட்டைப் பலவந்தமாகக் கவர்ந்தோர், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசை கொண்டோர், இன்னொருவனுக்கு உரியவளாக அவனது மனையில் இருப்பவளைக் கவர்ந்தவர் இவர்கள் அனைவரையும் தருமம் அழித்துவிடும் )

இவை இராவணன் மீது மிக்க அன்பு கொண்ட மாரீசன் கூறும் வார்த்தைகள். அவனே மாய மானாக மாறி சீதையைக் கவர உதவினான் என்றாலும், முடிந்தவரை அறத்தின்பால் நின்று இராவணனைத் தடுத்துப் பார்த்தான். “தர்மமே உன்னை அழித்துவிடும்”, என்று பயமுறுத்தினான். இவை அனைத்தையும் மீறி இராவணன் சீதையைக் கவர்ந்தான் என்பதால் இராவணன் பிறன் இல் விழையும் தன்மை உடையவன், பல தார மணமோ அல்லது பல பெண்டிர் தொடர்போ கொண்டவன் என்பது புலனாகிறது. (இதனால் தானோ என்னவோ தமிழகத்தில் பலர் தங்களை இராவணன் குலத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர்)

கம்பன் அத்துடன் நிற்கவில்லை. பிறன் இல் விழையாமையை மேலும் வலியுறுத்துகிறான்.

கும்பகருணன் ராவணனிடம் அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் நக்கலும் நையாண்டியுமாகவும் அதே நேரத்தில் ஆணி அடித்தது போலவும் உள்ளது. அது பின் வருமாறு :

“ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் !

மாசில் புகழ் காதல் உறுவோம்! வலிமை கூரப்

பேசுவது மானம்! இடைப் பேணுவது காமம்,

கூசுவது மானுடரை! நன்று நம் கொற்றம்!”

(குற்றமற்றவர்களாக உள்ள மற்றவர் மனைவியரை எல்லாம் கொணர்ந்து நமது அழகிய சிறைகளில் அடைப்போம்; அச் செயலைச் செய்துவிட்டு, “எமக்கு மாசற்ற புகழ் வேண்டும்” என்று விரும்புவோம்; வெளியில் “எங்களுக்கு மானமே பெரிது” என்று உரைப்போம் ஆனால் அறிஞர் வெறுக்கும் காமத்தை விரும்புவோம். இப்படிப்பட்ட நமது வெற்றி வாழ்க, நம் புகழ் வாழ்க !)

மேலே கும்பகருணன் நேர்மை தெரிகிறது. அதே சமயம் இராவணன் சீதை தவிர மற்ற பலரது மனைவியரையும் சிறைப்படுத்தியுள்ளான் என்றும் அறிகிறோம். அதைக் கும்பகருணன் கேலியாக “நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம், என்ன ஒரு பெருமை, என்ன ஓர் ஆட்சி !” என்று கூறுகிறான்.

இத்துடன் நிற்காமல், “சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்” என்றும்,

“ஆயிரம் மறைப்போருள் உணர்ந்து,அறிவமைந்தாய் !தீவினை நயப்புருதல் செய்தனை ”

என்றும் கூறுவதன் மூலம்,” இவ்வளவு உயர்ந்த வேதப்போருளை எல்லாம் ஓதி உணர்ந்தவனே, என்ன செய்கை செய்திட்டாய், குலத்தின் பெருமையைக் கொன்றுவிட்டாயே”, என்று கும்பருணன் வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கம்பன் காட்டுகிறான்.

தன் சொந்த மாமனும், தம்பியுமே பிறன் இல் விழியும் தன்மையை இழித்துப்பேசியுள்ள நிலையில், இராவணனது நல்ல பண்புகளைப் பொருந்தாக் காமம் அழித்தது என்று கம்பன் கூறும் விதம் சாட்டையடி போல மனத்தில் விழுகிறது.

இராமன் வாலியிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலில்,

“அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?”

என்று, ” உனது அருமையான தம்பி சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து உனது பெருமை அழிந்து நிற்கிறாயே ..” என்று கூறுவதாக அமைத்துள்ளது நோக்கத்த்தக்கது.

சரி, ஒரு தாரமும், பிறன் இல் விழையாமையும் தமிழர் பண்பு என்று எப்படி அறிவது?

நம் தமிழ்த் தெய்வம் வள்ளுவர் “பிறன் இல் விழையாமை” என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறார். அவர் இப்படிக்கூறுகிறார்:

“பிறர் பொருளால் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து

அறம் பொருள் கண்டார்கண் இல் ”

(மற்றவனுக்கு உரிமை உள்ள மனைவியை விரும்பி அவளிடம் செல்வது அறியாமை. இவ்வுலகில், அறம் இன்னது, பொருள் இன்னது என்று அறிந்தவர்களிடத்தில் இந்தத் தீய நெறி காணப்படுவதில்லை )

அது மட்டுமா ? இராவணன் பெரிய போர் வீரன் தான். “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் அவன் வீரத்தைப் புகழ்கிறார். ஆனால், பிறன் இல் விழைந்ததால் என்ன நேரும் என்று வள்ளுவர் சொன்னாரோ அதுவே அவனுக்கு நடந்துள்ளது.

“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி”

(இவளை அடைதல் அரியது என்று நினைத்து பிறன் மனையில் புகுகின்றவன் எப்போதும் நீங்காக் குடிப் பழியை அடைவான் )

வள்ளுவன் வாக்கு இன்றும் நிற்கிறது. பர தாரம் விழைபவனை இன்றும் கூட “ராவணன் போலே” என்று இழித்து அழைப்பது வழக்கமாகவே உள்ளது.

அதற்கும் மேல் :

“பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” என்கிறார் வள்ளுவர்.

(பிறன் மனைவியை விரும்பிப்பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறம் மட்டுமன்று, நிறைந்த ஒழுக்கமுமாகும் ).

“வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் கூறினாலும், வள்ளுவர் அந்த ஆண்மையை விடப் பெரிய ஆண்மை ஒன்று உள்ளது; அது போரில் காட்டும் ஆண்மை அல்ல ; பிறனது மனைவியை நோக்காத ஆண்மை – பேராண்மை.போர் ஆண்மையை விடச் சிறந்தது பேராண்மை என்று கூறுகிறார். அந்த ஆண்மையை இராவணன் இழந்து நிற்பதாகக் காட்டுகிறார் கம்பர்.

ஒரு மனை அறம் பூண்ட இராமன் தமிழர் பண்பாட்டாளனா அல்லது பல தார மணம் , பல பெண்டிர் விழைதல் என்ற கொள்கையுடைய இராவணன் தமிழ்ப் பண்பாட்டாளனா என்று அறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.

அடுத்த பதிவில் “மது, மாமிசம்” முதலியன பற்றிப் பார்க்கலாம்.

கம்பர் – ஒரு அறிமுகம்

தமிழ் நாட்டில் அரசுகளால் வெளியே காட்டப்படாத, முயற்சி செய்து மறைக்கப்பட்ட ஒரு கவிஞன் உண்டென்றால் அது கம்பன் தான் என்று அடித்துக் கூறலாம். ஏனென்றால் அவன் எழுதியவை அப்படிப்பட்டவை. மனிதனைத் தெய்வமாக்கும் அல்லது தெய்வ நிலைக்குத் தூண்டும் பல இலக்கியங்கள் அவன் செய்துள்ளான். நமக்குத் தெரிந்தது “கம்ப ராமாயணம்”. இன்னும் சில உள்ளன. அவை திருக்கை வழக்கம், ஏரேழுபது, சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி முதலியன.

நாம் கம்ப ராமாயணத்தை மட்டும் பார்ப்போம்.

“கம்ப ராமாயணம்” என்பதே தவறான சொல்லாக்கம். கம்பன் தனது காவியத்திற்கு வைத்த பெயர் “இராமாவதாரம்”. ஒருவேளை அதனால் தானோ என்னவோ நமது தமிழரசுகள் இது வெளியே தெரியவேண்டிய அளவு தெரியாமல் மழுங்கடிக்கச் செய்தன.

கம்பன் உண்மையில் யார்? கம்பன் என்பது அவனது இயற்பெயரா? இதற்கெல்லாம் சரியான பதில் இல்லை ஆராய்ச்சியாளர்களிடம். எங்கள் ஊர் தேரழுந்தூரில் கம்பன் பிறந்ததால் ஊரில் மிகவும் வயது முதிர்ந்த பலரிடம் பல வருடங்களாகவே பேசிப்பார்த்திருந்தேன். பெயர்க்காரணம் பல கிடைத்தன. சில பெயர்க்காரணங்கள் மட்டும் குறிப்பிடுகிறேன்.

கம்பர் “நாதசுரம்” வாசிக்கும் தொழில் பிரிவினர். கம்பினால் செய்யப்பட்ட நாதசுரம் வாசிப்பதால் அந்த இசை மரபினருக்குக் “கம்பர்” என்ற பொதுப்பெயர் வழங்கி வந்திருக்கிறது. நாளைடைவில் கம்பரது இயற்பெயர் மறைந்து தொழிற்பெயரே  நிலைத்துவிட்டது என்று ஒரு கருத்து உண்டு. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். தற்போது தேரழுந்தூரில் ஆமருவிப்பெருமாள் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் வசிக்கும் இடத்திற்கு சமீபத்தில் கம்பர் மேடு என்று கம்பர் வாழ்ந்த இடம் இருக்கிறது. இந்தக் காரணம் உண்மையாக இருக்கலாம். ( கம்பர் மேடு இன்று என்ன அழகில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப் படுகிறது என்று இங்கே பார்க்கவும் )

இதை விட நம்பத்தகுந்த விளக்கம் ஒன்று உள்ளது. கம்பர் நரசிம்ம பக்தர். அதனால் கம்பத்தின் ( தூணின்) உள்ளிருந்து வந்த பெருமாளை மனதில் கொண்டு தன் பெயரையும் “கம்பன்” என்று மாற்றிக் கொண்டார். இதற்கு ஆதாரம் கம்ப ராமாயணத்தில் உள்ளது. கம்பர் தான் எழுதிய ராமாயணத்தில் “இரணிய வதைப் படலம்” என்று நரசிம்மர் இரணியனைக் கொன்ற கதையை எழுதியுள்ளார். இந்த இரணியன் கதை வால்மீகத்தில் இல்லை. தான் ஒரு நரசிம்ம பக்தர் என்பதால் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மனை ராம காதையில் கொண்டு வந்தள்ளார்.

இரண்யன் பிரகலாதனிடம் அரியைக் காட்டு என்னும் விதமாக,

“உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகெங்கும் பரந்துகானைக்
கம்பத்தின் வழியே காணக் காட்டுதி காட்டிடாயேல்.. ”

என்று கூறுவதாக அமைந்துள்ளது. இதிலும் “கம்பத்தின் வழியே” என்று தூணைக் குறிக்கிறான்.

மேலும் வலு சேர்க்கும் விதமாக தேரழுந்தூரில் ஆமருவியப்பன் திருக்கோவிலில் கருவறையில் ஆமருவியப்பன் அருகில் பிரகலாதன் இருக்கிறார். எந்த வைணவக் கோவிலிலும் கருவறையில் பெருமாள் தவிர யாரும் இருப்பதில்லை. ஆனால் தேரழுந்தூரில் நரசிம்ம தொடர்புள்ள பிரகலாதன் எழுந்தருளியுள்ளார். இது ஒரு தொடர்பு என்றும் கொள்ளலாம். மேலும் சந்நிதியின் வெளியில் யோக நரசிம்ஹர் சந்நிதி உள்ளது. அவரது சிலை மிகவும் புராதமானது என்று பார்த்தாலே தெரிகிறது. கம்பன் மற்றும் அவரது மனைவியின் சிலைகள் ஆமருவியப்பனின் கோவிலில் ஒரு தனி சந்நிதியில் உள்ளன.

தேரழுந்தூரில் கம்பர்
ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பரும் அவர் மனைவியும்

வேறொரு விளக்கமும் உள்ளது. கம்பர் பிறந்தபோது பேச்சு வர வில்லையாம். குழந்தையைத் தற்போது கம்பர் மேடு இருக்கும் இடத்திற்கு மேற்கே உள்ள காளி கோவில் கம்பத்தின் முன் கிடத்தி இருந்ததாகவும் அதன் பின்னர் பேச்சு வந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. தற்போதும் அவ்விடத்தில் “கம்பர் காளி” என்று ஒரு காளி கோவில் இன்றும் உள்ளது.

சிவ பெருமானுக்குக் “கம்பன்” என்ற பெயர் உண்டு என்றும் சில தமிழ் அறிஞர்கள் கூறுவர். சுந்தரர் சிவ பெருமானைப் பாடும்போது ,”கண்ணும் மூன்றுடைக் கம்பன்”, “கங்கையாளின் கம்பன்”, ” கூத்தன் கம்பன்” என்று பாடுகிறார். சிவ பெருமானுக்கு ‘ஏகாம்பரன்” என்ற பெயர் உண்டு என்பதால் அது மருவி ‘ஏகம்பன்’ என்றும் “கம்பன்” என்றும் ஆனதாகக் கூறுகிறார் காலஞ்சென்ற தமிழ் அறிஞர் வையாபுரிப் பிள்ளை.

கம்பர் இளமையில் கரும்புக் கொல்லையைக் கையில் கம்புடன் காத்ததால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்கிறார் செல்வ கேசவ ராய முதலியார் என்னும் தமிழ் அறிஞர்.

இப்படிப் பல கதைகள் , இலக்கியச்சான்றுகள் இருந்தாலும் இதுதான் உண்மை என்று அறியமுடியவில்லை.

கம்பர் எப்படி ராமாவதாரம் எழுதினர் ? 10,000 பாடல்களுக்கு மேல் எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஒரு மனிதன் வேறு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு ஒரு மொழி சார்ந்த மூலக்கதையை எழுதவேண்டுமென்றால் அவனிடம் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் பற்றி எந்தக் கவலையும் இருந்திருக்க முடியாது. ஆக கம்பன் பெரும் செல்வந்தனா என்று ஆராய்ந்தால் அது இல்லை. “சோழ நாடு சோறுடைத்து” என்று சொன்னாலும் சோறு கிடைக்க வேண்டுமே!

கம்பனுக்கு அந்தக்காலத்திலேய ஒரு ஸ்பான்சர் கிடைத்தார். அவர் தேரழுநதூருக்கு சில மைல்கள் தொலைவில் இருந்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். பெயரைப் பார்த்தால் சைவராக இருந்திருக்க வேண்டு ( சடை சிவ பெருமானைக் குறிப்பது).இருந்தும் அவர் கம்பரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வைணவ நாயகனான ராமனைப் பற்றி ராமகாதை எழுதப் பொருளுதவி வழங்கியுள்ளார். இதைக் கம்பனே பின்வருமாறு கூறுகிறார்.

“தோமறு மாக்கதை சடையன் வெண்ணை நல்லூர் வியின் தந்ததே ”

( சடையப்ப வள்ளல் வாழ்ந்த வெண்ணை நல்லூரில் தங்கி இருந்து, குற்றமற்ற இப்பெருங்காப்பியத்தைப் பாடி முடித்தேன் )

சடையப்பர் சிவனைப் பற்றிப் பாடச் சொல்லி இருக்கலாமே! அந்நாளில் சைவ வைணவ பேதம் இருந்துள்ளது என்பது கம்பனின் இந்தப் பாடல் மூலம் தெரிகிறது

“அரன் அதிகன், உலகளந்த

அரி அதிகன்,  என்றுரைக்கும் 

அறிவில்லோர்க்குப் பரகதி அடைவரிய

 பரிசே போல் “

( சிவன் தான் பெரியவன்; இவ்வுலகை அளந்த திருமால்தான் பெரியவன்; என்று கூறுபவர்கள் அறிவற்றவர்கள்; அவர்கள் கடவுளையே வெறுப்பவர்கள்; அவர்களுக்கு உயர்ந்த கதி இல்லை; உயர்ந்த கதியை அடைய முடியாது )

கம்பனுக்கு ராம காதையைப் பாடவே விருப்பம். வால்மீகியால் உந்தப்பட்டான். எனவே கவியின் விருப்பத்திற்கிணங்க சடையப்பர் ராமாயணம் எழுத உதவியுள்ளார். ஆக, சமயம் சாராத ஒரு அணுகுமுறை சடையப்பரால் பின்பற்றப்பட்டது என்று அறிகிறோம். அக்கால மாந்தரின் வள்ளல்தன்மை வியக்க வைக்கிறது.

சரி, கம்பன் ஏன் ராமனைப் பாட வேண்டும் ? பணம் கிடைக்கும் என்பதற்காகவா ? இல்லை. அவனே கூறுகிறான் இவ்வாறு :

“ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்றுஇக்

காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ ”

( நான் ராமாயணத்தை யாருடைய தூண்டுதலின் பேரிலும் பாடவில்லை.குற்றமற்ற வெற்றியை உடைய இராமன் வரலாற்றில் உள்ள ஆசையினால் பாடினேன் )

தேரழுந்தூரில் பிறந்த கம்பன் வெண்ணை நல்லூரில் எழுதிய நூல் திருவரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருவரங்கன் சந்நிதி அருகில் நரசிம்மர் சந்நிதியில் பாடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அரங்கேறியபின் நரசிம்ம மூர்த்தியிடமிருந்து ஒப்புதல் போல் “ஆம்” என்ற சப்தம் வந்தது என்று எழுதிவைத்துள்ளார்கள்.

இங்கேயும் நரசிம்ம பக்தனான கம்பன் தன் ராம காவியத்தை நரசிம்மர் முன்னே அரங்கேற்றினான். அவனது  பெயர்க்காரணத்திற்கு இது வலு சேர்க்கிறது.

கம்பன் அரங்கேற்றம் குறித்து ஒரு தனிப்பாடல் உள்ளது. அது பின்வருமாறு:

“எண்ணிய சகாத்தம் எண்ணூற்று

ஏழின்மேல், சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர்

தன்னிலே, கம்ப நாடன்

பண்ணிய இராம காதை,

பங்குனி, அந்த நாளில்,

கண்ணிய அரங்கர் முன்னே

கவி அரங் கேற்றினானே”

( சடையப்ப வள்ளல் சிறந்து வாழ்ந்த வெண்ணெய் நல்லூரிலே இருந்து கம்ப நாடன் எழுதிய ராமகாதை, எண்ணப்பட்ட நூற்றாண்டு எண்ணூற்றேழிலே , பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரம் நிறைந்த நாளில் அரங்கன் முன் அரங்கேறியது ).

சரி. ஒரு வள்ளல் உதவி செய்தார். கம்பன் பாடினான். இதில் என்ன செய்தி ?

கம்பன் சடையப்பரை  மறக்கவில்லை. மேலே சொன்னபடி பல இடங்களில் சடையப்பரைப் போற்றுகிறான். “நன்றி மறப்பது நன்றன்று ” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சடையப்பரை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைக்கிறான். முடிவாக, ராம ராவண யுத்தம் முடிந்து ராம பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அப்பாட்டில் கம்பன் கூறுவதைக் கேளுங்கள் :

“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி”

( ராம பட்டாபிஷேகத்தில், அனுமன் அரியணையைத் தாங்கினான்; அங்கதன் உடை வாள் ஏந்தி நின்றான்; பரதன் குடை பிடித்தான்;.. வெண்ணை நல்லூர்ச் சடையன் குலத்தில் தோன்றிய அவனது முன்னோர் ஒருவர் மணிமுடியை எடுத்துக் கொடுக்க, வசிஷ்டர் ராமனுக்கு முடிசூட்டினார் )

வட நாட்டில் அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தில் வெண்ணை நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் முன்னோர் எப்படிச் சென்றனர் ? இப்படிப் பகுத்தறிவுடன் கேட்கலாம். ஆனால் கம்பனின் உள்ளத்தைப் பார்க்க வேண்டும் இதில். தன்னை வாழ வைத்த சடையப்பரையும், அவரது குலத்தையும் அவரது முன்னோர்களையும் தன் ஒரு வரியினால் இன்றளவும் வாழ வைத்து தன் நன்றிக்கடனைச் செலுத்தினான் கம்பன். நம் எல்லோருக்கும் வழி காட்டினான்.

அடுத்த பதிவில் “கம்பனுக்கு முன் ராமாயணம் தமிழகத்தில் இருந்ததா?” என்று பார்ப்போம்.

%d bloggers like this: