மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இந்தக் கல்வெட்டு தேரழுந்துர் ஆமருவியப்பன் கோவிலில் உள்ளது. திருமங்கை மன்னன் திரு மண்டபம் என்பது பெருமாள் உற்சவக் காலங்களில் வீதி புறப்பாடு முன்னரும் பின்னரும் எழுந்தருளும் மண்டபம்.
இதை 1972ல் தருமபுர ஆதீனகர்த்தர் திறந்து வைத்துள்ளர். தருமையாதீனம் சைவ ஆதீனங்களில் தலையாயது. இதன் குரு மஹா சன்னிதானம் பரம வைஷ்ணவக் கோவிலில் ஒரு மண்டபத்தைத் திறந்து வைத்தார் என்பது சற்று ஆச்சரியம் அளித்தது.
இதன் தொடர்பான தகவல்கள் குறித்து ஆராய்ந்தேன். சுவையான ஒரு தகவல் கிடைத்தது.
இந்தப் பதாகையைத் திறக்கும் முன்னர் சன்னிதானம் அவர்கள் ஆமருவியப்பனைச் சேவிக்கச் சென்றுள்ளார். சன்னிதியில் அன்று தற்போது 92 வயதாகும் கண்ணன் பட்டாச்சாரியார் இருந்துள்ளார். ஆமருவியப்பனிடம் 72 வருடமாகக் கைங்கர்யம் செய்து வருகிறார் அவர்.
அவர் பெருமாளைச் சேவை செய்து வைக்கும் அழகே தனி. 13-வது ஆழ்வார் போல் அத்துணைப் பாசுரங்களையும் சேவித்து ( வாயினால் சொல்லி ), தல வரலாற்றைச் சொல்லி சேவை செய்து வைக்கும் போது ஆமருவியப்பனே நேரில் வந்து கேட்பது போல் இருக்கும். ( தற்போது இவரது மகன் வாசன் பட்டாச்சாரியார் அந்தப் பணியைச் செய்கிறார்).
குரு மஹா சன்னிதானம் ஒரு அரை மணி நேரம் பெருமாளின் முன்னால் நின்றிருக்கிறார். கண்ண பட்டச்சாரியார் பாசுரம் பாடி சேவை செய்து வைத்துள்ளார்.
வெளியில் வந்து இந்தப் பதாகையைத் திறந்து வைத்த சன்னிதானம், ” இந்த கண்ண பட்டச்சாரியாரால் ஒரு ஆபத்து நேர இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் நான் உள்ளே இருந்தால், இவர் என்னையும் வைணவராக மாற்றி இருப்பார். இப்படி உருகிஆழ்வார் பாசுரங்கள் பாடினால் யாருமே வைஷ்ணவராக வேண்டியது தான் “, என்று மனம் கனிந்து கூறியுள்ளார்கள்.
சைவ வைஷ்ணவ வேறுபாடின்மை இந்த நிகழ்ச்சியினால் புலப்படுகிறது. துவெஷம் இல்லாமல் பெரியவர்கள் இயங்கியுள்ளது வியப்பளிக்கிறது.
தற்போதைய “வைஷ்ணவர்கள்” சிந்திக்க வேண்டும்.

Leave a comment