ஜூலை 08, 1939 — மதுரையில் வைத்தியநாத ஐயர் என்பவர் ஐந்து தலித்துகள் ( அவர்களில் ஒருவர் கக்கன் – பின்னாளில் தமிழக அமைச்சரானார் ) ஒரு நாடார் இன நபர் முதலியவர்களை அழைத்துக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். தலித்துக்களின் ஆலயப் பிரவேசம் என்று கொண்டாடப்பட்டது. இதனைதத் தொடர்ந்து பல ஊர்களிலும் ஆலயப் பிரவேசம் நடந்தது.
அதன் பின்னர் வைத்தியநாத ஐயர் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டார். பல வழக்குகள் போடப்பட்டன. மனம் தளராமல் அவர் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில், பழனி முருகன் கோவில் என்று பல கோவில்களிலும் தலித் ஆலயப்பிரவேசம் செய்தார்.
ஜூலை 22, 1939 – அன்றைய தமிழகத்தின் முதல்வர் ராஜாஜி “Madras Temple Entry and Indemnity Act” என்று ஒரு அவசரச் சட்டம் கொண்டுவந்தார். அதன்மூலம் அனைவரும் கோவிலுக்குள் நுழையலாம் என்று அமைந்தது.
இவை அந்தக் கால கட்டத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்கள். இவற்றைச் செய்ய மிகுந்த மனத்துணிவு வேண்டும். ராமானுசர் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களை “திருக்குலத்தார்” என்று நாம கரணம் செய்து அவர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் என்ற இறைச் சடங்குகள் செய்து அவர்களை வைணவராக்கினார். அவர்கள் இன்றும் மைசூர் பகுதியில் வைஷ்ணவர்களாக உள்ளனர்.
ராமானுசருக்குப்பிறகு மிகப் பெரிய சமூக மாற்றம் என்றால் அது ராஜாஜி செய்த “அனைவரும் கோவில் நுழைய உரிமை” எனும் சட்டம் என்று கொள்ளலாம்.
இதை எல்லாம் இப்போது எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்ற கேள்வி நியாயமானதே. சாதிப் பிளவுகளால் தற்போது தமிழகம் கண்டு வரும் வன்முறை அரங்கேற்றங்கள், தலித்துகளுக்கு இன்னமும் மற்ற சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகள் போன்றவை இதை எழுதத் தூண்டின.
வாலண்டைன்ஸ் டே, மதர்ஸ் டே என்றே அறிந்துள்ள சமூகம் ஜூலை 8 என்ன நாள் என்றால் திங்கட் கிழமை என்று வேண்டுமாநால் சொல்லும்.
சமூக மேம்பாடு என்றாலே ஏதோ பெரியார் , அண்ணா என்று முழங்கும் இன்றைய சமூகத்திற்கு முன்னர் நடந்தது என்ன என்பதை நினைவு படுத்த வேண்டியுள்ளது.
இவை எந்த அரசுப் பாடப் புத்தகத்திலும் இடம் பெறாதவை. இவை பற்றி சமுதாயம் அறிந்தால் அரசியலார் ஒரு சமூகத்தை கை காட்டிப் பிழைப்பு நடத்த முடியாது. அதனால் இவை மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும்.
அது தான் பகுத்தறிவு.