இந்தப் படத்தில் உள்ளவரை நீங்கள் எங்கேனும் கண்டால் ஓடி ஒளிய வேண்டாம். மத மாற்றம் செய்பவரோ, அறிவு ஜீவியோ, இடதுசாரி எழுத்தாளரோ அல்லர். இப்படியெல்லாம் தோற்றமளிப்பதால் உங்கள் மனதில் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே.
இவர் மத மாற்றம் செய்பவர் அல்ல.
ஆனால் மன மாற்றம் செய்வார்.
ஏனெனில் பலரது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர் இவர்.
அவர் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் சில:
வாழ்வின் கடை நிலையில் உள்ள, பாலியல் வன்முறைக்கு உள்ளான, குடும்பத்தினராலேயே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட 18 – 26 வயதுகளில் உள்ள சுமார் 120 பெண்களுக்குத் திருமணம் செய்ய உதவி செய்துள்ளார். தனது காலஞ்சென்ற மனைவியின் பெயரில் தான் துவங்கிய ‘சௌபாக்கியா‘ என்ற அறக்கட்டளையின் மூலம் இந்த நல்ல பணியைச் செய்துள்ளார்.
சரி. இது மட்டுமா ? பட்டியல் நீளுகிறது.
தனது ‘Educate’ என்ற இன்னொரு அறக்கட்டளையின் மூலம் தெருவில் பிச்சை எடுக்கும், குப்பை பொறுக்கும், இன்ன பிற வழிகளில் வன்முறைகளுக்கு ஆளான 4 முதல் 15 வயதில் உள்ள சிறுவர்களுக்கு ‘HOPE‘ முதலிய நிறுவனங்களின் உதவியுடன் ஆரம்பக் கல்வி அளிக்கிறார். ஒரு வருடத்திற்கு பத்துப் பிள்ளைகளுக்குக் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கிறார். சில மிகவும் வசதி குறைந்த, சமூகத்தின் அடித்தளத்திற்கு மிக அருகில் உள்ள ஏழைச் சிறுவர்களுக்கு உறைவிட வசதிக்கும் நிதி அளிக்கிறார்.
முடிந்ததா என்று கேட்கிறீர்களா ? அது தான் இல்லை.
தானே முனைந்து கர்நாடக மாநிலத்தின் சில கிராமங்களின் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகள் ஒரே வகுப்பறையில் அமர்ந்து பாடம் கேட்கவேண்டிய நிலையில் இருந்த சில கிராம அரசுப் பள்ளிகளுக்குச் சென்று அவர்களுக்குத் தன்னாலான கல்விச் சேவை அளிக்கிறார்.
இத்தனைக்கும் இவர் சில நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் மும்பையில் ஒரு வெளி நாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் வேலை. இவை போக வாரத்தில் எப்படியும் ஒரு நாளாவது ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காகத் தன் நேரத்தை செலவழிக்கிறார்.
இவர் வேலை பார்த்த சில நிறுவனங்கள் – மைக்ரோசாப்ட்(Microsoft)), சன் மைக்ரோ சிஸ்டம்ஸ்(Sun Micro Systems), வி.எம்.வேர் (VMware). கல்வியால் கணக்காளரான (Chartered Accountant ) இவர் தேர்ந்த மேலாண்மை ஆலோசகரும் கூட.
இவரது சேவையைப் பாராட்டி இவரை ‘கல்வியின் முன்னோடி’ என்று கர்நாடக அரசு விருது அளித்து கௌரவித்துள்ளது. பல உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஏழை மக்களின் கல்வி நிலையை எடுத்துரைக்கும் விதமாக அவர்களுக்குப் பயிற்சிகள் அளித்துள்ளார்.
இவரால் வாழ்வு பெற்ற பல பெண்கள் தங்கள் கணவர் குழந்தைகளுடன் வந்து ‘சாமி’ என்று இவரை அழைப்பதை நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தும் இவர் மனிதர் அல்ல சாமியே என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு நடிகையைப் பற்றி முக நூலில் ஒரு பதிவு இட்டுவிட்டு அதற்கு எத்துனை ‘விருப்பங்கள்’ (Like) விழுகிறது என்று கணக்கிடும் எண்ணற்ற மக்களிடையே இப்படியும் ஒரு ஆசாமி வலம் வருவது ‘இறைவன் மனிதன் உருவில்’ ( ‘Dheivam Manushya Roopena’) என்ற வசனத்தை மெய்ப்பிக்கிறது.
பாரதியின் வாக்கின்படிக் வாழ்த்துவதானால்,”வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்..” என்று கூறலாம்.
சரி. இவரைப்பற்றி இன்று ஏன் ?
இன்று இவர் என் இல்லம் வந்திருந்து கௌரவப்படுத்தினார்.
எனக்கும் இவருக்கும் தொடர்பென்ன ?
பள்ளியில் படிக்கும் போது இவர் என் வகுப்புத் தோழர். இவரது பெயர் கோவிந்த் தேசிகன். இவருடன் படித்த ஒரே காரணத்தால் எனது வாழ்வு கடைத்தேரியது என்று நினைக்கிறேன்.