The side that is not spoken about, generally.

Imageஅன்று என் அத்தை வீட்டில் எல்லாரும் ஊருக்குச் சென்று இருந்தனர். பூட்டு போட்ட வீட்டைப் பூட்டோடு பெயர்த்துக்கொண்டு சென்று விடுவது நெய்வெலியில் வழக்கம் என்பதால் என்னை இரவுக் காவலுக்கு அவர்கள் வீட்டில் படுக்கச் சொல்லி இருந்தனர். கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். செமெஸ்டர் விடுமுறை.

காலை எழுந்து வானோலி கேட்பது வழக்கம். அந்த வருடம் பொதுத் தேர்தல் நடப்பதால் ஒரே விறுவிறுப்பு. அப்போதைய தி.மு.க. அரசை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று வீட்டுக்கு அனுப்[பி இருந்த நேரம்.

ஆறு மணி ஆங்கிலச் செய்தி இடியாய் இறங்கியது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று வானொலி அமைதியாக அலறியது. கால்கள் வலுவிழப்பது போல் இருந்தது. அப்படியே தரையில் அமர்ந்து கொண்டேன். சொல்லப்போனால் வெறி கொண்டு தரையை அறைந்தேன் என்று சொல்லலாம். அந்த வருடம் வி.பி.சிங் அடித்த கூத்துக்கள் எல்லாம் முடிந்து ஒரு மாதிரி நிலையான ஆட்சி அமையும் என்று ஆவலோடு எதிர்பார்த்த நேரம்.

எனக்கு இலங்கைப் பிரச்சினையுடன் பல ஆண்டுகளாகவே தொடர்பிருந்தது. நண்பன் ஒருவன் ஊரை விட்டு இலங்கைக்கு ஓடி, போராடினான். பிறகு அவனைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை.

அத்துடன் நெய்வெலி அருகில் விருத்தாசலம் பகுதியில் சில (PLOT, EPRLF) முதலிய அமைப்பினருக்கு இந்திய அரசு பயிற்சி அளித்துவந்தது என்று பேசிக்கொண்டனர். 1987-ல் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் எற்பட்டது. இது பற்றி எல்லாம் தினமும் வானொலியில் கேட்பது உண்டு. அமைதிப் படையினருக்காக சென்னை வானொலி சிறப்பு ஒலிபரப்பு எல்லாம் செய்யும். அந்த நாட்களில் அவற்றைக் கேட்பது வழக்கம்.

என் நெருங்கிய நண்பர் புலி ஆதரவாளர். அவர்கள் வீட்டில் அப்போதெல்லாம் புலிகள் படங்கள் கொண்ட காலெண்டர்கள் இருக்கும். தி.க.வைச் சேர்ந்த அவனுடன் சேர்ந்து கொண்டு நெய்வெலியை அடுத்துள்ள சொரத்தூர் என்னும் கிராமத்தில் இருந்த இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று துணி மணிகள் கொடுத்துள்ளேன்.

ஆனால் அமைதி ஒப்பந்தம் முறிந்ததற்குப் புலிகள் காரணம் என்று தெரிந்து ரொம்பவும் வேதனைப்ப்பட்டேன். அவனும் தான். ஒரு வரி விடாமல் ‘தி ஹிந்து’ படிப்பது வழக்கம். ஜி.பார்த்தசாரதி, ஜெ.என்.தீக்ஷித் முதலிய தூதர்கள் பேச்சுக்கள் முழுவதும் படித்து அவற்றைப் பற்றி விவாதிப்பது அப்போதைய ஒரு செயலாக இருந்தது.

ஒப்பந்தம் தோல்வி அடையப் புலிகள் காரணமாயினர். இந்தியப் படையினரைக் கொன்றனர்.

வரதராஜ பெருமாள் என்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வட மாகாண முதலமைச்சரை அரசு நடத்த விடாமல் இடையூறு செய்தனர். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

1990-ல் சென்னையில் பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதச் சென்றேன் என்று நினைவு. அப்போது புலிகள் சென்னையில் ஒரு வீட்டில் புகுந்து மற்ற ஒரு தமிழ்க்குழுவைச் சேர்ந்த சிலரைப் பட்டப் பகலில் கொன்றனர். இது என் மனதில் கடும் பாதிப்பை எற்படுத்தியது. அதனை அப்போதைய தி.மு.க. அரசு மூடி மழுப்பியது.

பின்னர் 91-ல் ராஜீவ் கொல்லப்பட்டதும் நான் தரையை அறைந்தபடி அமர்ந்திருந்ததும்.

எங்கள் சேலம் பொறியியல் கல்லூரியில் இலங்கை கோட்டா என்று ஒன்று உண்டு. 4-5 இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் சேர்ந்து படிப்பர். அவர்களுடன் பேச்சுக்கொடுக்கும் போது தான் புலிகளின் உண்மை சொரூபம் தெரிய வந்தது – அவர்கள் பணம் வசூல் செய்வது, புலம் பெயர்ந்தோரின் உறவினர்களை மிரட்டிப் பணம் பறிப்பது, 10 வயதுப்பிள்ளைகளை மனித குண்டுகளாக ஆக்குவது முதலியன. அவர்களில் ஒரு நண்பரும் புலியே. தப்பித்து வந்து அகதியாகி எங்களுடன் கல்லூரியில் படித்தார். இப்[போது நல்ல நிலையில் இருக்கிறார்.

பின்னர் ராஜீவ் கொலையாளிகள் பிடிபட்டனர் / இறந்தனர். வழக்கு நடந்தது.

நேற்று இந்தியத் தலைமை நீதி மன்றம் மூன்று பேரைத் தூக்கிலிருந்து தப்பிவித்துள்ளது.

ராஜீவ் கொலை மன்னிக்க முடியாதது.

வீரம் என்ற போர்வையில் மிகவும் கோழைத்தனமாக நிகழ்த்தப்பட்ட ஒரு வெறிச் செயல் இது என்பது உண்மையே. பாதுகாவல் இல்லாத ஒரு மனிதனை, பெண்களைக் கருவியாகக் கொண்டு கொலை செய்தார்கள். அத்துடன் சேர்ந்து 29 தமிழர்களும் இறந்தனர். இந்த அட்டூழியத்துக்குத் துணை போனவர்கள் தான் இந்த மூவரும்.

அவரது அகால மரணத்தால் இந்தியா அடுத்த பத்து ஆண்டுகள் நிலையற்ற ஆட்சியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் மறு பேச்சுக்கே இடமில்லை. அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டியது தான்.

என் மனதில் தோன்றுவது இது. குற்றவாளிகள் மூன்று பேரும் தங்கள் ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்து விட்டனர். அதைக்கடந்தும் சிறையில் இருந்துள்ளனர். எனவே, தண்டனைக் காலம் தவிர அவர்கள் சிறையில் இருந்த காலத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். நீதியின் படி நடக்கும் ஒரு சமூகம் என்று நாம் நம்மைச் சொல்லிக் கொள்வோமேயானால் இதனை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதனால் வழக்குகள் விரைவாக நடத்தப்படவும், முடிவுகள் காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படவும் ஒரு வழி பிறக்கும்.

இதற்கு ‘ராஜீவ் காந்தி சட்டம்’ என்று பெயர் வைக்கலாம். அவர் பெயரில் நல்லது நடக்கட்டும்.

One response

  1. vinoth Avatar
    vinoth

    vinoth says:
    9:43 முப இல் பிப்ரவரி20, 2014

    http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
    போதும் என்று நினைக்கிறேன்
    vinoth says:
    9:58 முப இல் பிப்ரவரி20, 2014

    இல்லை எழுதுவோம்…
    http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
    // தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
    தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

    காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.//

    தமிழன் என்றால் செண்டிமெண்டல் இடியட்ஸ் என்று டெல்லி வாலாக்கள் சொல்வது உண்மை தான்.

    சாதசிவ கவுண்டர் படத்தை போட்டு . நன்றி யாருக்கு சொல்கிறீர்கள். எதற்கு நன்றி..

    நடந்திருப்பது என்ன ? தமிழர்கள் ஆகிய நமக்கு சூடு சுரணை மானம் ஈனம் வெட்கம் ரோசம் எதாவது உள்ளதா?

    சு சாமி , ச சாமி உள்ளிட்ட பலர் மேல் கொலை பழி குற்றச்சாட்டு விசாரிக்கபடாமல் இருக்கு. வேண்டுமென்றே சம்பந்தம் இல்லாத சிலரை தூக்கிலிட்டால் வேலை முடிந்தது சாமிகள் & கோ தப்பித்து விடலாம் என்று தானே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

    இப்போதும் விடுதலை பற்றிய செய்தியில் இருப்பது என்ன? ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை..

    காமேடியாக இல்லையா.. குற்றவாளையை ஏன அய்யா விடுதலை செய்யவேண்டும் ? நிரபராதி என்று அல்லவா விடுதலை செய்யவேண்டும் ? அப்படி செய்தால் அப்போது குற்றம் செய்தது யார் என்ற கேள்வி வரும்.. சாமி & சோ மாட்டும்.

    சதி என்னவென்றால் .. விடுதலை என்று சொன்னலே தமிழனுக்கு போதும். அதின் பின்னனி குறித்தெல்லாம் பார்க்க தமிழனுக்கு மூளை இருக்க என்ன ?. நாளையே தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு..இது ஒரு தவறான முன் உதாரணம் என்றூ சொல்லி வழக்கை நடத்தினால்.. இந்த தீர்ப்பு ரத்தாகி கழுத்தில் தூக்கு கயிறு இருகும்.

    இப்போது செய்யவேண்டியது வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டும். ரகோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்கு மூலம் வாங்கி, இவர்கல் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்ய வேணுடும்…

    மேலும் இவர்கள் சிறையில் கழித்த ஆண்டுக்கும் இழந்த வாழ்க்கைகும் ஈடாக தலைக்கு 50 கோடியாவது நட்ட ஈடு தரவேண்டும். அந்த தொகையும் தவறாக வழக்கை நடத்தி, இவர்களை சிக்க வைத்த அதிகாரிகளின் சேமிப்பு சம்பளம் தனிப்பட்ட/ குடும்ப சொத்தில் பறிமுதல் செய்டு ஈடு கட்ட வேண்டும்.

    அப்போது தான் இனி தவறாக வழக்கு நடத்த எந்த அதிகாரியும் நினைக்க கூட மாட்டர்.

    இதை விடுத்து.. இப்படி கண்கள் பணீத்தால் சிரமம் தான்.

    Like

Leave a reply to vinoth Cancel reply