நீ எதுக்கு இந்தியா போகணும்கற?

வாழ்க்கை என்பது அவமானங்களையும், அநீதிகளையும் தோளில் சுமந்துகொண்டு ஆனாலும் பளுவே இல்லாதது போல் நடிப்பது என்பதை அப்பாவின் தலைமுறையில் நெய்வேலியிலும் இன்ன பிற அரசு அலுவலகங்களிலும் வேலை செய்த பலரது வாழ்க்கையையும் பார்த்து உணர்ந்துகொண்டேன்.

‘ஜாதிகள் உள்ளதடி பாப்பா’ பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதில் இருந்து ஜாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம் பேர் இருப்பது தெரிகிறது. ஜாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை மட்டுமே பதிவு செய்யும் ஊடகங்கள், ஜாதி அடிப்படை இட ஒதுக்கீட்டின் விளைவால் ‘முன்னேறிய’ ஜாதி என்று வரையற்க்கப்பட்ட ஜாதி மாணவர்கள், தொழிலாளர்கள் தங்களை எப்படி உணர்கிறார்கள் என்று பதிவு செய்ய முன்வருவதில்லை.

‘மத்யமர்’ என்னும் கதைத் தொகுப்பில் சுஜாதா தொலைத்தொடர்புத் துறையில் ஒரு நேர்காணலைப் பதிவுசெய்திருப்பார். பிரமிப்பூட்டும் அறிவுகொண்ட ஏழை பிராமணப் பொறியாளருக்கு வேலை மறுக்கப்படுவதையும் அதே வேலை எந்தத் தகுதியுமே இல்லாத ‘முன்னேறாத’ சாதியைச் சார்ந்த ஒரு பணக்காரப் பெண்ணுக்கு வழங்கப்படுவது பற்றியும் சொல்லியிருப்பார். இண்டர்வியூ முடிந்து வெளியில் பேருந்திற்கு அந்த பிராமணப் பொறியாளன் நின்றுகொண்டிருப்பதும், அந்தப் பெண் காரில் ஏறிப் போவது பற்றியும் சொல்லி, அந்தக் கதை முடியும். என் பள்ளிக்காலத்தில் நான் படித்த, என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய கதை அது.

இது ஏதோ வெளிப்பூச்சு மட்டும் அல்ல. பல பொதுத்துறை நிறூவனங்களிலும் இதே நிலை தான். ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்குச் சேர்பவர்கள் தங்கள் பதவி உயர்வுக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுவதை தங்களுக்கான உரிமையாகவே நினைக்கிறார்கள். நேரில் பார்த்த பல நிகழ்வுகள் உண்டு.

சுப்பு ( உண்மைப் பெயர் அல்ல ) வீட்டிற்கு வந்திருந்தார். ‘அப்பா இருக்காங்களா?’ என்றார்.

‘வாய்யா, என்ன காலங்கார்த்தால?’ என்றபடி அப்பா வெளியில் வந்தார். நெய்வேலியில் வீடுகளில் சின்ன திண்ணை இருக்கும். அதில் அம்ர்ந்தவாறே, ‘இல்ல, இன்னிக்கும் நாளைக்கும் லீவு வேணும்’ என்றபடி ஒரு வெள்ளைத்தாளையும் பேனாவையும் நீட்டினார்.

From, To முதற்கொண்டு போட்டு சுப்பு எழுதுவது போல் அப்பா லீவ் லெட்டர் எழுதிக்கொடுத்தார். கையெழுத்து போடும் இடம் தவிர மற்ற எல்லாம் அப்பா எழுதியது. சுப்பு அதை வாங்கிக் கையெழுத்து மட்டும் போட்டு மீண்டும் தர, ‘சூப்பரிண்டண்ட் கிட்ட குடுத்துடறேன்’ என்றவாறு வாங்கி வைத்தார் அப்பா.

விஷயம் என்னவென்றால், பணி ஓய்வு பெறும் போது அப்பாவைவிட சுப்பு மூன்று நிலைகள் மேல் இருந்தார். இப்படிப் பல சம்பவங்கள் நேரில் கண்டவை.

இவை பற்றிப் பல முறை வீட்டில் பேச்சுவார்த்தை நடக்கும். ‘This country has gone to the dogs, Appa,’ என்று ஆத்திரத்தில் நான் பேசியதுண்டு.

‘இது அவாளோட காலம். சக்கரம் மேலையும் கீழயும் தான் போகும். இப்போ கீழ இருக்கோம். மனுஷ ஜீவிதத்துல ஆரம்பத்துலேர்ந்து முடிவு வரை பார்த்தா ஒரே சீரா இருக்காது. என்னால எட்ட முடியாத உயரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஏதோ நமக்கு வேலை இருக்கேன்னு நெனைச்சுண்டு பண்றத ஸ்ரத்தையா பண்ணைண்டே இருக்கணும். ரொம்ப ஆவேசப்படாம போய் நன்னா படி,’ என்று சொல்லித் தன் வேலையை பார்க்கக் கிளம்புவார் அப்பா.

மேலும் பேச முடியாததால் அடங்கிப்போய் மீண்டும் ஏதாவது ஒரு பிரமோஷன் கிடைக்கவில்லை என்கிற பேச்சு வீட்டில் நடக்கும் வரை நான் காத்திருக்க வேண்டியது தான். அப்போதும் இது போலவே ஒரு உபதேசம். ‘நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கால, தேச, வர்த்தமானங்கள் எதுவும் நமக்கு எதிராகவே உள்ளன. எனவே அடிப்படையை பலப்படுத்து. படி. முன்னேறு’. இதே ரீதியில் உபதேச மஞ்சரிகள் கேட்டுக் கேட்டு மனது வெறுமையானது. ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று எங்கோ யாரோ சொன்ன வாசகங்கள் நினைவில் வரும் அப்போதெல்லாம்.

பல வருடங்கள் கழித்துக் கல்லூரிகளுக்கு நிழைவுத் தேர்வு எழுதி ஒதுக்கீட்டினால் நேரிடையாக பாதிக்கப்பட்ட போது அதன் வலி அபரிமிதமாக இருந்தது. இத்தனை வலியையும் தாங்கிக் கொண்டு அப்பா எப்படி இவ்வளவு ஆண்டுகள் எதுவுமே நடவாதது போல வேலை செய்கிறார் என்று நினைத்துப் புழுங்கியது உண்டு. கீழ் நடுத்தர மக்களை சாதி மட்டும் பார்த்து, முன்னேறிய வகுப்பினர் என்று முத்திரை குத்தி முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு முறை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்று நினைக்கிறேன். ( எனது ‘பழைய கணக்கு’ நூலில் ‘ரங்கு (எ) ரங்கபாஷ்யம்’ கதைக்கு வித்து இங்கிருந்தும் கிடைத்தது. )

அதே போல், சாதி என்பதும் உலகில் எங்கும் இல்லை என்றும் வாதிடலாம் தான். சாதி என்ற பெயரில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வர்க்கம் என்பது எந்த நாட்டிலும் உண்டு. இன்று முன்னேறியதாக உள்ள நாடுகளிலும் வர்க்கப் பேதங்கள் உள்ளன. இல்லை என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஆனால், சாதிக்கு மேல் பொருளாதாரம் என்கிற ஒரு அளவுகோல் தேவை என்பதை உணர மறுப்பதை ‘முற்போக்கு’ என்று எந்த நாட்டிலும் சொல்வதில்லை. எல்லா நாடுகளிலும் பொருளாதாரம் சர்ந்த உதவிகள் அரசுகளால் செய்யப்பட்டே வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டுமே பொருளாதாரத்தில் பின்னடைந்திருந்தாலும் சாதியில் முன்னிருந்தால் சலுகைகள் இல்லை, சமத்துவம் இல்லை என்கிற நிலை. இதனை நீக்க அரசுகளே அஞ்சும் அளவிற்கு இந்த வியாதி வளர்ந்துள்ளது.

வாழ்க்கை என்பது அவமானங்களையும், அநீதிகளையும் தோளில் சுமந்துகொண்டு ஆனாலும் பளுவே இல்லாதது போல் நடிப்பது என்பதை அப்பாவின் தலைமுறையில் நெய்வேலியிலும் இன்ன பிற அரசு அலுவலகங்களிலும் வேலை செய்த பலரது வாழ்க்கையையும் பார்த்து உணர்ந்துகொண்டேன். நாம் அப்படி வாழக்கூடாது என்றும் வைராக்கியம் என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு தீர்மானம் செய்துகொண்டேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இப்போதெல்லாம் இந்த ஒதுக்கீடு சார்ந்த அட்டூழியங்கள் அவ்வளவாக இல்லை என்பது போல் உள்ளது.. ஏனெனில் இந்தத் துறைகளில் ‘முன்னேறிய வகுப்பு’ என்ற ஒன்று இல்லை என்பதே. கடந்த 25 ஆண்டுகளில் இந்த முன்னேறிய வகுப்பு முத்திரை பெற்ற பெரும்பாலானவர்கள் தனியார் துறைக்குச் சென்றுவிட்டனர் அல்லது அமெரிக்கா சென்றுவிட்டனர். சிங்கப்பூரில் ஆவணி அவிட்டம் அன்று பல கோவில்களில் இந்தக் கூட்டத்தைக் காணலாம். ஜப்பானில் மாதம் தோறும் நடக்கும் இந்தியன் பூஜா செலெபிரேஷன்ஸில் இந்தக் கூட்டம் தென்படும். பிட்ஸ்பர்க் பெருமாள் கோவிலிலும் டல்லாஸ் கோவிலிலும் இந்தக் கூட்டம் தென்படுகிறது. பெரும்பாலும் கணினி, மென்பொருள், வங்கித்துறைகளில் வேலையில் இருக்கும் இந்தக் கூட்டம் தங்கள் ஊர்களின் இன்றைய நிலையைப் பற்றி அவ்வப்போது அக்கறை கொள்கிறது. பெரும்பாலானவர்களை ஊருக்குத் திரும்ப இது தடுக்கவும் செய்கிறது.

சமீபத்தில் சிங்கையில் உள்ள என் கல்லூரி நண்பனுடன் நடந்த உரையாடல் ஒன்றில் அவன் கேட்டது : ‘நீ எதுக்கு இந்தியா போகணும்கற? உனக்கும் நம்ம ஜெனரேஷனுக்கும் நடந்தது உன் பசங்களுக்கும் நடக்கணுமா? கோட்டாவத் தாண்டி ஹை ஜம்ப் பண்ற வேல அவங்களுக்கு எதுக்கு?’ என்றான். நியாயமாகவே இருந்தது.

‘பசங்களுக்கு வேணா வேண்டாம். ஆனா எனக்கு எங்க ஆழ்வார் கோவில் வாசல்ல பெருமாள் ஏள்ளும்போது அங்க நின்னு ‘தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ..’ பாசுரம் சேவிக்கணும்டா. எங்க பெரியவங்கள்ளாம் செஞ்சத நான் செய்யணும். நான் போகத்தான் வேணும். எனக்கு அரசாங்கத்துல வேலை வேணா கெடைக்காம இருக்கலாம். ஆனா பெருமாள் ஏள்ளற வீதியில நின்னு பாசுரம் சேவிக்க எனக்கு யார் அனுமதியும் தேவை இல்லை. அதால நான் போகத்தான் போறேன்,’ என்றேன்.

அப்பன் நடத்திவைப்பான் என்று நம்புகிறேன்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

3 thoughts on “நீ எதுக்கு இந்தியா போகணும்கற?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: