The side that is not spoken about, generally.

எனது ‘பழைய கணக்கு’ நூலில் ‘தரிசனம்’ என்றொரு கதை ( கதை அல்ல. நிகழ்வு). காஞ்சி மாஹாஸ்வாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிய நிகழ்வு ஒன்று வரும். இதனைப் படித்துவிட்டு வாசகர் ஒருவர்: ‘வைஷ்ணவனான நீ எப்படி சங்கர மடத்துக்கு போனே?’ என்று கேட்டார். இது ஏதோ எடக்கு முடக்கான கேள்வி என்று வாளாவிருந்தேன். ஆனால் நிஜமான சந்தேகம் போல. மீண்டும் செய்தி அனுப்பியுள்ளார். ஆகையால் பொதுவெளியில் பதில்.

ஐயா, சன்யாசிகள் ந்ருசிம்ஹ ஸ்வரூபம் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் தான் எந்த சன்யாசியைப் பார்த்தாலும் பார்த்த இடத்திலேயே விழுந்து வணங்க வேண்டும் என்னும் வழக்கம் உள்ளது.

18 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு கனவு வந்தது. நான் ஆற்றில் நீராடச் செல்கிறேன். ஆற்றில் இறங்கி கரையைப் பார்க்கிறேன். ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கரையில் நடந்து செல்கிறார். சிறிது தூரம் சென்று அவரும் ஆற்றில் இறங்குகிறார். நான் ஆற்றில் இருந்து எழும் போது என் கையில் ஜெயேந்திரரது ‘தண்டம்’ (அவர்கள் கையில் வைத்திருக்கும் ஒற்றைக் கழி) அகப்படுகிறது. அதை எடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கரையில் என் அம்மாவைத் தேடுகிறேன். அங்கு ஜெயேந்திரர் நீராடி, விபூதி, வேறு துவராடை அணிந்துகொண்டு என்னைப் பார்த்து சிரித்தபடியே கையைத் தூக்கி ஆசீர்வதித்தபடி செல்கிறார்.

கனவில் கண்டதை என் அம்மாவிடம் சொல்ல, என் தாயார் அடுத்த வாரமே காஞ்சிபுரம் சென்றார். ஜெயேந்திர ஸ்வாமிகளிடம் இதைத் தெரிவிக்க, அவருக்கே உரித்தான அந்தப் பளீர் சிரிப்புடன்,’உங்காத்துல ந்ருசிம்ஹ ஆராதனை உண்டோனோ?’ என்கிறார். ‘ஆஹா, ந்ருசிம்ஹனே எங்கள் ஆராத்ய தெய்வம். நாங்கள் அஹோபில மட சம்பிரதாயம்’ என்று என் அம்மா சொல்ல, பெரியவர், புன்முறுவலுடன், ‘சன்யாசிகள் தரிசனம் ந்ருசிம்ஹ கடாக்ஷ்ம். பையன் நன்னா வருவான்.’ என்று குங்குமப் பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அந்த மாதம் எனக்குத் திருமணம் நிச்சயமானது. இன்று 19-வது திருமண நாள்.

இது ஒருபுறமிருக்க, என் தாத்தா ஸ்வர்க்கீய கனபாடி ஆமருவியாச்சாரியார் காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் கனம் பாடி தங்கத் தோடா பரிசு வாங்கியவர். காஞ்சி, சிருங்கேரி மடங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனது பெரியப்பா ராமபத்ராச்சார்யர் எழுதிய ‘ஆழ்வார்கள்’ பற்றிய பல நூல்களுக்குக் காஞ்சி மடம் ஶ்ரீமுகம் அளித்துள்ளது. ‘பரகாலன் கண்ட பரிமள அரங்கன்’ என்னும் நூலை மஹாஸ்வாமிகள் கண்பார்வை மங்கியிருந்தாலும் முழுதும் படித்துத் தனது சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார்.

தமிழகத்தில் சனாதன தர்மம் தழைக்கக் காஞ்சி மடம் ஆற்றியுள்ள பணி மகத்தானது. அதனாலேயே அது போலி பகுத்தறிவு மதமாற்றச் சக்திகளால் அல்லலுக்குள்ளானது என்பது யாவரும் அறிந்ததே.

To cut the long story short: சன்யாச ஆஸ்ரமம் ஏற்றுள்ள வைதீக மதஸ்தர்களிடையே வேறுபாடு பாராட்டக் கூடாது என்பது நமது சம்பிரதாயம். ‘யதிகள்’ என்று சொல்லி வணங்குவதே முறை. சுபம்.

One response

  1. Hema Avatar
    Hema

    “To cut the long story short: சன்யாச ஆஸ்ரமம் ஏற்றுள்ள வைதீக மதஸ்தர்களிடையே வேறுபாடு பாராட்டக் கூடாது என்பது நமது சம்பிரதாயம். ‘யதிகள்’ என்று சொல்லி வணங்குவதே முறை. சுபம்.

    🙏

    Like

Leave a comment