‘சீக்கிரம் வா. நாழியாறது,’ சித்தப்பா அவசரப்படுத்தினார்.
பள்ளிக்கு அவர் வந்து என்னனை அழைத்துச் சென்றதே இல்லை. ஆச்சரியத்துடன் வாய் பிளந்தவாறே அவருடன் சென்றேன். சைக்கிளில் முன்னால் அமர வைத்து எதிர்காற்றில் தடுமாறி மிதித்துச் சென்றவர்,. ‘சினிமாக்குப் போறோம்,’ என்கிறார்.
80களில் நெய்வேலியில் அமராவதி தியேட்டருக்குப் போனது 3 முறை. குடும்பத்துடன் செல்வது அதுவே முதல் முறை. அத்தை, பெரியப்பா, சித்தப்பா, குடும்பங்கள் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ ஒன்றுகூடியிருந்தோம்.
வேறு ஊர்களில் எல்லாம் 4-5 ஆண்டுகள் ஓடி முடித்து, பிரிண்ட் தேய்ந்து, திரை முழுவதும் கோடு கோடாகவும், ஆங்காங்கே படங்களும் தெரியும் வண்ணம் அமராவதியில் திரைப்படங்கள் ஓடும்.
மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. ‘என்ன சினிமா சித்தப்பா?’ என்றேன். ‘சினிமா’ என்று சொல்வதே ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்றது. வீட்டில் சினிமா பற்றிய பேச்சு இருந்ததில்லை. காதில் விழுந்தால் அப்பா ருத்ர தாண்டவம் . சாரி..காளிங்க நர்த்தனம் ஆடிவிடுவார்.
இப்படியான சூழ்நிலையில் சித்தப்பா வந்து சினிமாவுக்கு அழைத்துச் சென்றால் கசக்குமா ?
‘பெருமாள் படம். திருமால் பெருமை. பெருமாளோட 10 அவதாரமும் காட்டறாளாம்,’ என்றார்.
‘நரசிம்மரும் வருவாரோனோ?’ என்றேன்.
‘ஓ. அப்ப ‘யஸ்யா பவத்..’ ஸ்லோகம் சொல்லு,’ என்றார். ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
‘பாட்டி ஆத்துல இருக்காளா?’ பாட்டி நார்மடிப் புடவையுடன் எங்கும் வெளியில் வருவதில்லை.
‘இல்லை. ரொம்ப சொல்லி ‘உபன்யாசம்’ மாதிரி இருக்கும்னு பாட்டியையும் அழைச்சுண்டு வந்திருக்கோம்.’ முதல் தடவையா பாட்டி சினிமா பார்க்கப் போறா’ என்றார்.
‘நான் பாட்டி பக்கத்துலதான் உக்காந்துப்பேன்,’ என்று சொல்லி அந்த நினைவுகளில் ஆழ்ந்தேன்.
‘சரி, டிக்கெட் வாங்கணுமே. போய் தான் வாங்கணுமா?’ என்று கேட்ட்டேன்.
‘பேசாம வா. அதெல்லாம் வாங்கியாச்சு. எல்லாரும் அமராவதிலே நிக்கறா. நீ மட்டும் தான் பாக்கி,’ என்றார். குடும்ப உருப்படிகள் 20 பேருடன் ‘திருமால் பெருமை’ என்று பெருமாள் படம். மகிழ்ச்சியில் அழுகை வந்தது.
தியேட்டர் வாசலில் ஒரே கூட்டம். ‘சோல்ட் அவுட்’ என்று கவுண்டரில் போர்டு போட்டிருந்தான். ‘நல்ல வேளை. டிக்கெட் இருக்கு’ என்று சந்தோஷமாக இறங்கினேன்.
‘டிக்கெட் எங்கே?’ என்று பாட்டியிடம் கேட்டார் சித்தப்பா. என்னை அழைத்துவரக் கிளம்பும் முன் பாட்டியிடம் கொடுத்துச் சென்றிருந்தார்.
‘என்னது? என்ன கேக்கறே?’ என்றார் பாட்டி. அடி வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.
‘ டிக்கெட் குடுத்தேனே. 20 வெளிர் மஞ்சள் காயிதம். அதைக் குடும்மா. நாழியாயிடுத்து,’ சித்தப்பா அவசப்படுத்தினார்.
‘ஓ அதா, ஏங்கிட்ட கையில வெச்சிண்டிருந்தா தொலைஞ்சு போயிடும்னு சேப்பு கலர் சொக்கா போட்டுண்டு ஒரு பையன் வந்து வாங்கிண்டு போனான். சீக்கரம் வா. பெருமாளைப் பார்க்காலம்,’ என்றாள்.
வீட்டிற்கு வந்து பெருமாளை போட்டொவில் பார்த்தோம்.