நெய்வேலியில் லக்ஷ்மியின் மேல் கை வைக்க அவள் தூங்கும் போது மட்டுமே முடியும். என் நண்பன் ஜான் வீட்டில் வளர்ந்த லக்ஷ்மி ரொம்ப முன்கோபி. ஒருமுறை கத்தியதும் கயிறை அவிழ்த்து விட வேண்டும். இல்லையெனில் கயிறு அறுந்துவிடும் அளவுக்கு இழுப்பாள். சுத்திச் சுத்தி வருவாள். தினமும் கழுநீர் குடிக்க வீட்டு வாயிலில் நின்று குரல் கொடுப்பாள். உடனே கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் தரையை முட்டி கோலம் போட்ட இடத்தை அப்கானிஸ்தான் போல் ஆக்கிவிடுவாள். அவளது பால் எங்களைப் பல வருஷங்கள் வாழவைத்தது.
அவளது கன்றுக்குட்டியைத் துரத்தி விளையாடிக்கொண்டு என் தம்பி ஓட, அவனைத் துரத்திக்கொண்டு லக்ஷ்மி ஓட, அவள் பின்னர் இன்னொருவர் ஓட, அதன் பின்னர் நடந்ததை எழுதினால் நன்றாயிருக்காது. கடைசியில் ஓடியவர் ஓடும் முன் வெறும் வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டிருந்தார். ‘ஓடும் முன்’ – அண்டர்லைன் ப்ளீஸ்.
கிரிக்கெட் விளையாடும் போது நான் எறிந்த பந்து லக்ஷ்மி மீது பட்டு, அவள் அதை நினைவில் கொண்டு சில நாட்கள் கழித்து என்னைத் துரத்தி, நான் தெருவில் ‘ஏன் எல்லாரும் வேடிக்க பார்க்கிறார்கள்?’ என்று குழம்பியவாறே ஓடி வீடு வந்து சேர்ந்த போது பாட்டி, ‘ஏண்டா வேஷ்டி கட்டிண்டு போனயே, வேஷ்டி எங்க?’ என்று கேட்டது லோக பிரசித்தம்.
பசு மாடு நம்முடனே எப்போதும் பயணிக்கிறது. கடுமையாக உழைத்தால் ‘மாடு மாதிரி வேலை செய்யறான்’ என்பதும், அதிக அளவு உண்பவனை ‘மாடு மாதிரி தின்றான்’ என்பதும் நமது முரணியக்க வரிசையில் சேருமோ என்னவோ.
‘ஆடற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடற மாட்டப் பாடிக் கறக்கணும்’ என்னும் பழமொழி நெய்வேலியில் எனக்குத் தெரியாது. சாதாரணமாகவே கோபம் கொண்ட லக்ஷ்மியிடம் போய் பாடவும் ஆடவும் செய்தால் நிலைமை கவலைக்கிடம் தான். நல்லவேளை.
‘ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு மனுஷனையும் கடிக்கற..’ பழமொழி நல்லவேளை லக்ஷ்மிக்குத் தெரியாது. அவளது கொம்பு கூர்மை பற்றி தெரிந்த எங்களுக்கு அவளது பல்லின் கூர்மை தெரிந்திருக்கும்.
‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ பழமொழியை யாரும் லக்ஷ்மியிடம் செய்துபார்த்ததாக நினைவில்லை. செய்திருந்தால் அவர்களுக்குப் பால் தான். லக்ஷ்மியின் பால்.
ஒருவேளை லக்ஷ்மியை யாருக்காவது தானம் கொடுத்து, அவர்கள் அவளது பல்லைப் பிடித்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. பார்த்திருந்தால் அவர்களுக்கும் மறு நாள் பாலுக்கு அலைய வேண்டியிருக்காது.
இப்போது லக்ஷ்மி தனது எத்தனையாவது ஜென்மத்தில் எந்த ஊரில் இருக்கிறாளோ தெரியவில்லை. ஆனால் ஒன்று. அவள் இருக்கும் தெருவில் வேஷ்டிக்கு வேலை இல்லை.
Ushaseshadri
June 17, 2017 at 10:01 am
“ஆ”
அருமை
LikeLike
Amaruvi Devanathan
June 17, 2017 at 2:45 pm
thank you
LikeLike