The side that is not spoken about, generally.

#நெய்வேலி ராஜி மாமி வீட்டு இலந்தைப் பழம் ப்ரஸித்தம். தெரியாமல் எடுத்துத் தின்பதால் சுவை கொஞ்சம் அதிகம். மாமாவுக்குத் தெரிந்தால் முதுகில் டின் கட்டிவிடுவார். ஆனாலும் அவர் ஈஸி சேரை விட்டு எழுந்து வரும் முன் ஓடிவிடுவதால் நாங்கள் தப்பித்தோம்.

ராஜி மாமியின் கை வேலைகளும் ப்ரஸித்தம். வாய் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஊசி, மணி வேலை செய்து கொண்டிருப்பார். தையல் வகுப்புக்கள் எடுப்பார். அதிர்ந்து பேசாத, சாந்த ஸ்வரூபியான அவருக்கு மஹா முசுடான கணவர், கொஞ்சம் அசமஞ்சமான மகன் மற்றும் ரொம்ப அசமஞ்சமான மகள் சுமதி. சுமாராக பி.காம் படித்த மகன் துபாய்க்கு வேலைக்குச் சென்றான்.

அலுவலகம் முடிந்தபின் ஈஸி சேரை விட்டு எழாதவரான கணவர் வீட்டில் எல்லாரையும் விரட்டு விரட்டென்று விரட்டி, தெருவில் விளையாடும் எங்கள் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்வார். பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் தொலைந்தோம். தெருவில் டி.வி. வைத்திருந்த ஒரே வீடு அவர்களுடைய வீடு என்பதால் காசு வாங்கிக்கொண்டு டி.வி. பார்க்க அனுமதிப்பார். இலந்தைப் பழமும் வாங்கிக்கொள்ளலாம். காசு உண்டு.

சுமாரான ஞானமுள்ள மகனை நினைத்துக் கவலைப்படுவதா, கொஞ்சம் கூட ஞானமே இல்லாத மகளைக் குறித்து கவலைப்படுவதா, எப்போதுமே எறிந்துவிழும் கணவரைக் குறித்துக் கவலைபப்டுவதா என்கிற கவலையில் ராஜி மாமிக்கு நீரழிவு நோய் வந்ததது. ‘கீழ தரைல படுத்துக்கறதே இல்ல. படுத்துண்டா எறும்பு பிடிச்சு இழுத்துண்டு போயிடற அளவுக்கு சர்க்கரை இருக்கு” என்று வேடிக்கையாகச் சொல்வார்.

எப்படியோ தடுமாறி பத்தாம் வகுப்பு முடித்த சுமதியைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் வீடு ரணகளப்படும். பையன் விட்டார் போனபின் மாமா ருத்ர தாண்டவம் ஆடுவார். சுமதியைக் கரித்துக் கொட்டி, மாமியை ஏசியபின் உக்ரம் அடங்கும்.

ராஜி மாமியின் பெருமுயற்சியால் எப்படியோ கல்யாணம் ஆகி பெண் புக்ககம் போனாள். பிறந்த வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டவள் புகுந்த வீட்டில் ஒரு ஏச்சு பேச்சு இல்லை. வெறும் அடி உதை தான். மாப்பிள்ளைக்கு வேலை போய் சுமதி மாட்டுத் தொழுவத்திலேயே பெரும் நேரத்தை செலவிட்டாள்.

ராஜி மாமி உடைந்து போனாள். மகனுக்குக் கல்யாணம் பண்ண முயன்று, தோற்று, சர்க்கரை ஏறி ஒரு அரை மணி நேரத்தில் மாலை போட்ட போட்டொவில் சுவரில் தொங்கினாள்.

மனைவி போனபின் மகனுக்குக் கல்யாணம் பண்ண மாமா ரொம்பவும் முயன்றார். தமிழ் நாட்டில் அவர் போகாத ஊரே இல்லை என்னும் அளவுக்கு எல்லா ஊருக்கும் போய் பெண் பார்த்தனர். கடைசியில் ஒரிசாவில் ஒரு அய்யங்கார் பெண் கிடைத்துக் கல்யாணமும் ஆனது.

மாமாவின் ஆட்டம் குறையவில்லை. மருமகள் அவதிப்படுவதை ராஜி மாமி போட்டோவில் இருந்தபடியே பார்த்தாள். விரைவில் குட்டி ராஜி மாமி பிறந்தாள். மாமாவின் ஆட்டம் இன்னமும் அதிகரித்தது. மகன் மௌனியாக இருப்பதைப் பார்க்க சகிக்காமல் மருமகளைக் காப்பாற்ற தன்னிடம் அழைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை போலும். மாமியாரும் மருமகளும் அருகருகில் போட்டோவில் இருந்து குடும்பத்தைப் பார்க்கத் துவங்கினர்.

தானும் ரிடையர் ஆகிவிட்ட நிலையில், மகளும் சுகப்படவில்லை, மகனுக்கும் வேலை போய் வீட்டில் வெறுமனே வளைய வருக்கிறான், பெண் குழந்தை வேறு என்று ஒருமுறை அங்கலாய்த்தார் மாமா. அவர் சற்று மனம் விட்டு சாந்தமாகப் பேசி அன்றுதான் பார்த்தேன்.

15 ஆண்டுகள் கழித்து 2002ல் என் மனைவி குழந்தையுடன் ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் போது ஒரு சந்தில் இருந்து என்னை யாரோ பெயர் சொல்லி கூப்பிடுவதைக் கேட்டுத் திரும்பினேன்.

”என்னப்பா, என்னைத் தெரியலையா? நான் தான் ராஜி மாமி பொண்ணு சுமதி” என்றபடி என் முன் வந்து நின்ற அந்தக் கிழிந்த, வெளிறிய புடைவைக்காரி ராஜி மாமியின் பெண் தான் என்று நம்ப முடியவில்லை.

”அப்பா, அண்ணால்லாம் எப்படி இருக்கா?’ என்றேன்.

”அண்ணாவா? அவன் போய் ரெண்டு வருஷம் ஆறதே. அப்பா அவனுக்கு கயா ஸ்ரார்த்தம் பண்ண காசிக்குப் போயிருக்கா” என்றாள்.

”நீங்க எப்படி இருக்கீங்க?” என்றேன் திக்கித் திணறியபடி.

“பார்த்தா தெரியலையா? நான் நன்னா இருக்கேன். இவாத்துல ஆறு மாடு வளர்க்கறா. ஏழாவதா நான்” என்றாள்.

ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன்.

”இரு இதோ வரேன். இவாத்து இலந்தைப் பழம் நன்னா இருக்கும். ஒரு அரை ஆழாக்கு தரேன்” என்றபடி உள்ளே சென்றாள்.

One response

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    கற்பனை அல்ல. இது போன்ற சில குடும்பங்களை திருச்சி, ஶ்ரீரங்கத்தில் நானும் பார்த்துள்ளேன். வினைப் பயன் என நினைத்துக் கொள்வேன்.

    Like

Leave a reply to nparamasivam1951 Cancel reply