The side that is not spoken about, generally.

‘கீழ்வானம் வெள்ளென்று’ என்னும் #திருப்பாவைப் பாசுரத்தில் பொழுது விடிந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சொல்கிறாள் #ஆண்டாள்.

‘கீழ் வானம் வெளுத்துவிட்டது’ என்றும், ‘எருமைகள் பனிப்புல் மேயக் கிளம்பியுள்ளன’ என்றும் சொல்கிறாள். எருமைகள் பனிப்புல் மேய்ந்தால் பால் கறக்க உதவும் என்பதை ஆயர்கள் உணர்ந்திருந்தார்கள்.

‘போவான் போகின்றாரை’ என்னும் பிரயோகம் உற்று நோக்கத்தக்கது.

‘திருப்பதிக்குப் போகின்றாரை’, ‘ கண்ணனைச் சேவிக்கப் போகின்றாரை’ என்றால் பொருள் புரிகிறது. ஒரு ஊருக்கோ, ஒரு செயலைச் செய்யவோ போகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் ‘போவான் போகின்றாரை’ என்பது எந்த இலக்கையும் குறிக்கவில்லை. ‘போவதற்காகவே போகிறார்கள்’ என்னும் பொருளில், எந்தப் பலனையும் எதிர்பாராமல் ‘போக வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்’ என்று புரிந்துகொள்ள முடிகிறது.

கண்ணனைச் சேவிக்க வேண்டும் என்பதல்ல, கண்ணனைச் சேவிக்கப் போதலே ( பயணப்படுதலே ) இங்கு ஒரு போக்கியமாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் உரையாசிரியர்கள். பலன் எதிர்பாராமல் கடமை ஆற்றுவது என்பதும் இத்துடன் ஒட்டி வருவது போல் தோன்றுகிறது அல்லவா? (Means has become the end)

மேலும் பாசுரத்தில் ‘தேவாதி தேவன்’ எனும் பிரயோகத்தால், எங்கள் ஊர் ஆமருவியப்பன் (எ) தேவாதிராஜன் உணர்த்தப்படுகிறார் என்று நாங்கள் சொல்லிக்கொள்வதுண்டு. ( காஞ்சிபுரம், திருவஹீந்திரபுரம் அன்பர்கள் சண்டைக்கு வரவேண்டாம். தேவப்பெருமாளும் , தேவநாதனும் இவருக்கு அண்ணன் தம்பி முறை என்று சொல்வதும் உண்டு)

‘கோதுகலம்’ என்னும் சொல் ‘கௌதூஹலம்’ என்னும் வடமொழிச்சொல்லின் திரிபு என்பது இன்னொரு சுவை. இதனால் தமிழின் சுவை கூடியுள்ளதே தவிர கெடவில்லை. தனித்தமிழ்ப் ‘போராளிகள்’ வேறு கடைக்குச் செல்லவும்.

One response

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    //எந்தப் பலனையும் எதிர்பாராமல்// கீதை கூறுவதும் இதுதான் அன்றோ

    Like

Leave a reply to nparamasivam1951 Cancel reply