‘தூமணி மாடத்து’ எனத் துவங்கும் #திருப்பாவைப் பாசுரத்தில் புதிய கோணத்தில் ஒரு பொருள் காண்போம்.
”ஊமையோ, அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ” என்கிற பிரயோகம் கவனிக்கத்தக்கது.
‘மாமியே, உனது மகள், வாய் பேச முடியாதவளோ, அல்லது காது கேளாதவளோ அல்லது மந்திரத்தால் கட்டுப்பட்டதால் உடல் இயக்கம் இல்லாதிருக்கும் / சோம்பல் உடைய பெண்ணோ? மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று அடியார்கள் பாடியவாறும் , சங்கங்கள் முழங்கியவாறும் இருந்தும் எழுந்து வராதிருக்கிறாளே’ என்று கேட்பதாக அமைந்துள்ளது.
கோணத்தை மாற்றிப் பார்ப்போம்.
‘மாயனை’ பாசுரத்தில் வரும் ‘தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனத்தினால் சிந்திக்க’ என்ற வரியையும், இன்றைய ‘தூமணி’ பாசுரத்தின் ‘ஊமையோ, அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ’ என்ற வரியையும் ஒப்பு நோக்கினால் வருவது தனிச்சுவை.
தூமலர் தூவித் தொழுது = Inverse ( ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
நாவினால் பாடி = Inverse (ஊமையோ)
மனத்தினால் சிந்திக்க = Inverse ( அனந்தலோ = சோம்பல் உடையவளோ )
L.H.S.ல் உள்ளவற்றைச் செய்திருக்க வேண்டும். செய்யாததால் R.H.S. ஆனாள்.
நாக்கு, செவி, அறிவு, உடல் இவற்றின் பயன்கள் முறையே (மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று) கண்ணனின் நாமங்களைப் பாடுவது, பாடுவதைக் கேட்பது, அவன் நாமங்களை மனத்தினால் சிந்திப்பது, உடலால் தூமலர் தூவித் தொழுது விழுந்து சேவிப்பது என்பனவாகும்.
அப்படிச்செய்யாத நாக்கு, செவி, உடல் , பயனற்ற நா, செவி மற்றும் சோம்பல் உடைய, மந்திரத்தால் தன்னிலை மறந்த உடல்களாகும். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் பலன்கள்.
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே
என்னும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
#ஆண்டாள் #திருப்பாவை
Leave a comment