The side that is not spoken about, generally.

‘உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்னும் பாசுரத்தில் ஆச்சார்ய லக்ஷணம் பேசப்படுகிறது.

‘செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோவில் சங்கிடுவார் போதந்தார்’ என்னும் பிரயோகம் காவி உடை சந்நியாசிகளைப் பற்றிய ஆழ்ந்த பொருளுடைய ஒன்று.

வெளிப்படைப் பொருள்: செங்கல் ( காவி) உடை உடுத்திய, வெண்மையான பற்களை உடைய சந்நியாசிகள் தத்தமது கோவில்களுக்குச் செல்கின்றனர். செல்லும் பொது தங்களது சங்கை முழங்கிக்கொண்டு செல்கின்றனர். எனவே பொழுது விடிந்து விட்டது என்பதை உணர்வாயாக.

உள்ளுறைப் பொருள்: ஆச்சார்யர்களது வெளித்தோற்றம் அழுக்குடையதாகத் தெரிந்தாலும் அவர்களது உள்ளம் தூய்மையானது. ‘செங்கல் பொடிக்கூறை’ என்பது அவர்களது வெளித்தோற்றத்தையும், ‘வெண்பல் தவத்தவர்’ என்பது அவர்களது அழுக்கடையாத உள்ளத்தையும் குறிக்கிறது. ‘வெண்பல்’ என்பது ஞானத்தைக் குறிப்பதாகவும் கொள்வது சம்பிரதாயம்.

சில பாடல்களுக்கு முன் வந்த ‘புள் அரையன் கோவில் வெள்ளை விளி சங்கு’ என்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பொழுதே விடியவில்லை என்றால் கோவிலில் இருந்து சங்கொலி எப்படி எழும் என்னும் கேள்வி எழலாம். அதற்கான விடை இன்றைய பாடலில் – சந்நியாசிகள் சங்கம் ஒலிக்கிறார்கள்.

‘புழைக்கடை’ (வீட்டின் பின்புறம்), ‘வாவி’ (பெரிய கிணறு, சிறிய குளம்) என்னும் அரிய தமிழ்ச் சொற்கள் நம் கண்களைப் பனிக்கச் செய்கின்றன. நாம் இழந்துள்ள எத்தனையோ விஷயங்களில் இவ்வரிய சொற்களும் சேர்த்தி.

#ஆண்டாள் #திருப்பாவை

2 responses

  1. A P Raman Avatar
    A P Raman

    அருமை!

    Like

Leave a reply to A P Raman Cancel reply