‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்

மாரிதாஸின் ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்னும் நூல் ஒரு சாட்டையடித் தொகுப்பு. திடீரென்று முழங்கும் இடி நம்மை எப்படி துணுக்குறச் செய்யுமோ அப்படிச் செய்கிறது இந்த நூல்.

மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதில் அளித்து வந்த மாரிதாஸ் அவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதுவே ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?’ என்னும் படைப்பு.

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய நூலாக மட்டும் இல்லாமல், திராவிட அரசியல், இடது சாரிகளின் துரோகங்கள், தேசத்தைச் சீரழிக்கும் அழிவுச் சக்திகள் என்று பல்வேறு தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த நூல்.

ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு கேள்வியுடன் துவங்குகிறது. கேள்விக்குப் பதிலளிக்கும் முன் கேள்வி தொடர்பான சில வரலாற்றுத் தரவுகளைத் தருகிறார் ஆசிரியர். சில கேள்விகளுக்குப் புள்ளி விவரங்களைக் கொண்டு துவங்குகிறார். இவ்வாறாக, வாசகனை பதிலுக்காகத் தயார் செய்கிறார். பின்னர் தனது வாதத்தைத் துவங்கி, கேள்விக்கான நீண்ட பதிலாக எடுத்துரைக்கிறார். மீண்டும் அப்படி ஒரு கேள்வி கேட்பதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் அமைந்துள்ளன பதில்கள்.

namo_book
மோதியை எதிர்ப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள ஊடகம், அவர்களுக்குப் பண உதவி செய்யும் மத மாற்று நிறுவனங்கள், அவர்களிடம் வாங்கி உண்ணும் இடது சாரிகள், அவர்களுக்குத் துணை போகும் திராவிட இயக்கம் என்று ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் தேச விரோத இயக்கங்கள் பற்றியும், அவர்களது எண்ண ஓட்டங்கள், செயல்படும் விதங்கள் என்று பல செய்திகளைச் சித்தரிக்கும் கருத்துப் பேழை இந்த நூல்.

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்புப் பணத்தைப் பெருமளவில் வைத்திருந்த அரசியல்வாதிகளும், ஊடகங்களுமே என்பதையும், அதனாலேயே அவர்கள் பெரும் கூச்சலுடன் ஓலமிட்டழுதார்கள் என்பதையும் எளிதில் புரியும்படி விளக்குகிறார் ஆசிரியர்.

திராவிட இயக்கம் என்பது வெறும் பித்தலாட்ட, ஊழல் கொப்புளிக்கும் இயக்கம் என்பதைப் பல உதாரணங்களுடன் விளக்கும் ஆசிரியர், அவ்வியக்கங்களால் தமிழ் எவ்வாறு எந்த வளமும் பெறவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லி அவ்வியக்கத் தலைவர்கள் செய்த ஊழல்கள், அதனால் தமிழ் நாடு அடைந்த கீழ்மை என்று விரியும் நூல் தமிழ்ச் சூழலில் இன்றியமையாத மைல்கல்.

ஈ.வெ.ரா. தொடர்பான பகுதிகள் சுவாரசியமானவை.  ஈ.வெ.ரா.மீது எழுப்பப்பட்டுள்ள மாய பிம்பத்தைத் தகுந்த தரவுகளுடன் உடைத்தெறியும் ஆசிரியர், இந்துமதம் பற்றி ஈ.வெ.ரா.விற்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதையும் நிறுவுகிறார். மனு ஸ்மிருதியின் சில பகுதிகளை மட்டுமே ஆதாரமாகக் காட்டிய ஈ.வெ.ரா.வைத் தோலுரிக்கும் மாரிதாஸ், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா.வின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் காட்டுகிறார். வைக்கம் போராட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வெ.ரா. பங்குகொண்டதைத் திராவிடக் கண்மணிகள் ஏதோ ஈ.வெ.ரா. தனியாகவே நின்று போராடியதைப் போன்று பேசுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். சாதி ஒழிப்பில் ஈ.வெ.ரா. தமிழகத்தில் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பதையும் ஆசிரியர் சுட்டத் தவறவில்லை.

ஆங்கில ஆட்சியால்தான் நாடு ரயில், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, வணிகம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்தது என்னும் பொய்யை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ள பகுதி, பல தரவுகளை எடுத்து அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஆங்கில ஆட்சியால் விளைந்த பொருளாதாரச் சீரழிவு, கல்வியில் தேக்கம், பஞ்சங்களின் கோர தாண்டவம், அதில் மடிந்த கோடிக்கணக்கான மக்கள் என்று விரியும் பகுதி, ஆங்கில ஆட்சியின் அடிவருடிகளுக்குச் சாட்டையடி.

யூதர்கள், இஸ்ரேல் பற்றிய பகுதி, அனேகமாக எந்த இந்தியப் பாடத்திட்டத்திலும் இருக்க வாய்ப்பிருக்காத ஒன்று. பாரதம் இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவைப் பற்றி அனேகமாக எந்த ஊடக வெளியிலும் இடம் பெறாத செய்திகளை அளிக்கிறது அப்பகுதி.

ஒரு நிறுவனம் எப்படிச் செயல்படும், அதற்கான செலவினங்கள் யாவை, நிதி ஆதாரங்களை நிறுவனங்கள் எவ்வாறு திரட்டுகின்றன, இவ்வாறு தனியார் நிறுவனங்கள் செயல்படுவதால் நாட்டிற்கு எத்தகைய நலன்கள் விளைகின்றன, என்னென்ன காரணங்களால் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தனியார் நிறுவனங்களை எதிர்க்கின்றன, அதன் வழியாக எவ்வாறு தேசத்திற்கு எதிராகச் செயலாற்றுகின்றன என்று தெளிவான விளக்கும் பகுதி தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் ‘போராட்டம்’ என்று குதிக்கும் இடதுசாரி சார்ந்த குழுக்கள் பற்றிய தெளிவான பார்வையை அளிக்கிறது.

பிரதமர் மோதியின் வெளி நாட்டுப் பயணங்களினால் விளைந்துள்ள பல பயன்களை எடுத்துக்கூறும் பகுதியில் இந்திய-ஆஸ்திரேலிய-ஜப்பானிய-அமெரிக்கக் கூட்டுறவால் விளைந்துள்ள ‘Quadrilateral Alliance’ பற்றியும், சீனாவின் OBOR முலம் விளையவிருக்கும் தீமைகள் பற்றியும் பேசியிருந்திருக்கலாம்..

இப்படி ஒரு நூலை எழுதுவதற்குப் பெரும் மனத்துணிவு வேண்டும். அதனினும் நிறைய அறிவு வேண்டும். தகவல்களைத் திரட்டி, ஒன்றோடு ஒன்று இணைத்து, தொடர்ச் சங்கிலி போன்றதொரு நிகழ்வுச்சங்கிலியை உருவாக்கி, அதனை அலுப்புத் தோன்றாவண்ணம் வாசகர்களுக்கு அளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, பாரதத்தின் மீது ஆழ்ந்த அன்பு, பக்தி இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பெற்றமைக்காக மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், 120 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றிகள் பல.

இவ்வளவு தரவுகளுடன் எழுதினாலும் ‘நான் எழுதிவிட்டேன் என்பதால் நம்பாதீர்கள். இத்தரவுகளைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்’  என்று சொல்லும் ஆசிரியர் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ என்னும் குறளை நினைவுபடுத்துகிறார்.

இந்த நூலை எழுதியதற்காக மாரிதாஸ் அவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

வலம் இதழ்

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

3 thoughts on “‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்”

  1. இந்த நூலை வாங்குவதாக ஒரு எண்ணம் இருந்தது. பதிப்பகம் பற்றி தேடினேன், இடையில் விட்டுப் போயிற்று.
    இப்போது உத்வேகத்துடன் வாங்க உள்ளேன். கிழக்கு பதிப்பகம் என நண்பர் கூறினார்

    Like

  2. Gujarat mayhem accused, Mahatma killer godse also having support in this country Modiji and raj dharma parallels.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: