‘நந்தனம் கிவ்ராஜ் பில்டிங் வருவீங்களா?’ அண்ணா சாலை D2 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோ ஓட்டுனரைக் கேட்டேன்.
‘வரும் சார். எவ்வளவு தருவீங்க?’
‘நீங்க கேளுங்க’
‘இல்ல. நான் கேப்பேன். அப்புறம் உங்களுக்கு கோவம் வரும்’
‘அதெல்லாம் வராதுங்க. நீங்க கேளுங்க. கட்டினா வரேன். இல்லேன்னா நீங்க கிளம்புங்க’
‘ஆங். சரிதான். அப்டின்னா சரிதான். எல்லாரும் கோச்சுப்பாங்க. நீங்க அப்பிடி இல்ல போல. சரி 100 குடுங்க’
‘சரி கிளம்பலாம்’
‘என்ன சார். ஒண்ணுமே பேரம் பேசல்ல’
‘ஐயா, எங்கிட்ட வாங்கி நீங்க அண்ணா நகர்ல வீடா வாங்கப் போறீங்க?’ என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தார் டிரைவர்.
‘உங்களுக்குப் புரியுது சார். எல்லாம் வெலை ஏறிப் போச்சு. பாருங்க ஷாக் அப்சார்பர் மாட்டிக்கிட்டு வரேன். பில்லு பாருங்க.’ வழக்கமான புலம்பல் என்று எண்ணிப் பேச்சை மாற்றினேன்.
‘ நீங்க ஏன் ஓலாவுல ஓட்டலை’ என்றேன். சில காரணங்கள் சொன்னார். ஓலா ஏமாற்றுவதைச் சொன்னார். ஓலா ஆர்.டி.ஓ.வையே ஏமாற்றுவதைச் சொன்னார்.
‘எந்த ஊர் உங்களுக்கு?’
‘எனக்கு காஞ்சிபுரம். இன்னும் கொஞ்ச நாள் தான் ஆட்டோ. அப்புறம் நாலு மாடு கன்னுன்னு பால் வியாபாரம். நான் யாதவன். பெருமாள் படியளக்கறார்’ என்றார்.
‘சரிதான். அதென்ன கொஞ்ச நாள்?’ என்றேன் ஆவலில்.
‘இல்ல. பொண்ணு ஜுடிசியல் சர்வீஸ் பரீட்சை பாஸ் பண்ணனும். அதுக்கப்புறம் ஆட்டோ ஓட்ட மாட்டேன்’ என்றதும் தூக்கி வாரிப் போட்டது.
‘என்னது ஜூடிஷியல் சர்வீஸா?’
‘ஆமாம் சார். பொண்ணு அம்பேத்கார் லா காலேஜில கோல்டு மெடல். இப்ப காஞ்சிபுரத்துல ப்ராக்டீஸ். ஜுடிசியல் சர்வீஸ் பரீட்சைல மூணு மார்க்குல போயிடுச்சு. திரும்பவும் எழுதறா. அவ மட்டும் டிஸ்டிரிக்ட் கோர்ட்டுல ஜட்ஜ் ஆயிட்டா, அப்புறம் ஏழு வருஷத்துல ஹைகோர்ட். அதுக்கு தான் நான் வெயிட் பண்றேன்’
‘உங்க பேரு மாணிக்கம் (எ) பாட்சாவா?’ என்று கேட்க நினைத்தேன். இன்னும் ஆச்சரியங்கள் உள்ளனவா என்று தெரிந்துகொள்ள ‘ஆமாம், உங்க பொண்ண லா படிக்க வைக்கணும்னு எப்பிடி தோணிச்சு?’ என்றேன் சீட்டில் சாய்ந்தபடி, ஒரு நீண்ட ப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து.
‘நல்லா கேட்டீங்க. மொதல்ல ஆட்டோ டிரைவர்னா ஒரு அவமரியாதை தான். முக்கியமா போலீஸ். அடா, வாடா, தே..பயலேன்னு கூப்பிடுவாங்க. அப்பப்ப இண்டிகேட்டர ஒடைக்கறது, மேல கைய வெக்கறதுன்னு மனுஷனாவே மதிக்க மாட்டானுங்க. மேல எல்லாம் சொல்லிப் பலனில்ல. சரி. சட்டத்துக்குதான் இவனுங்க பயப்படுவானுங்கன்னு பொண்ண சட்டம் படிக்க வெச்சேன். சிஸ்டத்துக்குள்ள இருந்துகிட்டு அதை சரி பண்ணணும். அது தான் வழின்னும் நினைச்சு பொண்ண படிக்க வெச்சேன். இப்ப ஐயர் வக்கீல்லாம் எம் பொண்ணு பேசற இங்கிலீஷ் பார்த்து எழுந்து நிக்கறாங்க. எம் பொண்ணு பேச ஆரம்பிச்சா உக்காந்து கேக்கறாங்க. லாட்டின் இங்கிலீஷ்ல எம்பொண்ணு பேசினா ‘வெல் டன்’ ந்னு சொல்லி பாராட்டறாங்க. எனக்கு பொருமையா இருக்கு. போற போது என்ன கொண்டு போகப்போறோம்? நல்லது செஞ்சுட்டுப் போகணும். நல்ல வக்கீலக் குடுத்திருக்கேன். நாளைக்கே நல்ல ஜட்ஜ் கிடைப்பாங்க. நாடு நல்லா இருக்கணும். அவ்வளவுதான்.’
மாணிக் பாட்சா, மாணிக்கம் தோன்றி மறைந்தார்.
‘உங்கள போட்டோ எடுத்துக்கலாமா? உங்களப்பத்தி எழுதலாமா?’
‘நல்லா எழுதுங்க. நாலு ஆட்டோ டிரைவர் படிச்சுட்டு தம் புள்ளைங்கள நல்லா படிக்க வைக்கட்டும்’ என்றவரின் முகத்தில் ‘ஈன்ற பொழிதில் பெரிதுவக்கும்’ தந்தை தெரிந்தார்.
‘சரி சார். பே பண்ணுவீங்களா?’ என்றபோது தான் பணம் தராமல் மயக்கத்திலேயே கீழிறங்கியதை உணர்ந்தேன்.
இம்மாதிரியான பெற்றோர்களாலும் அவர்தம் சுமையை உணர்ந்து கற்றுத் தேறும் பிள்ளைகளாலுமே வாழ்கிறது பாரதம்.
பி.கு.: FC, Running FC என்று இரு வேறு முறைகளில் Fitness Certificate வழங்கப்படுவதைப் பற்றி அவர் சொன்னதை எழுதினால் RTO அலுவலகம் சண்டைக்கு வரும்.