‘நான் இராமானுசன்’ பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஒரு மாதமாக இவற்றைத் தொகுத்து இருந்தேன். ஒரே பதிவில் விடை அளிக்கிறேன்.
கேள்விகள் & விமர்சனங்கள்:
- இந்த நூல் அத்வைதத்திற்கு எதிரானதா?
- ஆதி சங்கரர் சாதீயத்தைத் தோற்றுவித்தாரா?
- அத்வைதத்தின் படி பிராமணர் அல்லாதோர் மோட்சம் பெற முடியாதா? ஆதி சங்கரர் அப்படிச் சொன்னாரா?
- தீவிர அத்வைத எதிர்ப்பு / வெறுப்பு தெரிகிறது.
- சைவத்தையும் அத்வைதத்தையும் ஒருசேரப் பாக்கிறீர்கள்.
- தென்கலை வடகலை – தத்துவம் தவிர வேறு வித்யாசங்கள் என்ன?
- வைஷ்ணவ ஜீயர்களில் பிராமணர் அல்லாதவர்கள் இல்லையே. எனவே விசிஷ்தாத்வைதம் வழக்கொழிந்துவிட்டதா?
- எத்தனை வைஷணவக் கோவில்களில் பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்கள்? இராமானுசர் வழி சாதியை ஒழிக்கவில்லை.
- வேதந்த தேசிகரின் பார்வையை நீங்கள் சேர்த்திருக்க வேண்டும்.
அனைத்திற்குமான ஒரே பதில் இதோ:
நூலில் ‘என்னுரை’யில் சொன்னது போல இந்த நூல் ஒரு புனைவு. என் கற்பனை. தத்துவம் விசிஷ்தாத்வைதம். ஆனால் அதைச் சுற்றி எழுப்பப்படும் கதை, கதை மாந்தர், நிகழ்வுகள் என் கற்பனையே. சாம்பமூர்த்தி ஸ்ரவுதிகள் என்னும் பாத்திரம் உட்பட.
கேள்விகள் அனைத்திலும் இராமானுசரைப் பற்றியோ, விசிஷ்டாத்வைதம் பற்றியோ தேடல்கள் இல்லை. அத்வைதம் தாழ்ந்து இருக்குமாறு காட்டப்படுகிறதே, ஆதிசங்கரர் பற்றி சொல்கிறீர்களே என்பதாகவே இருக்கிறது. இது ஓரளவு நான் எதிர்பார்த்தது தான். பெரும்பாலான வாசகர்கள் பாரத ஞான மரபு என்பதே அத்வைதம் என்பதாகவும், அந்த தத்துவத்தையோ அதன் ஸ்தாபகரையோ கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதாகவும் எண்ணுகிறார்கள்.
நாம் சவுதி அரேபியா இல்லை. இங்கு வாதங்கள், பிரதிவாதங்கள், தர்க்கம் இவை எல்லாம் நிகழும். பண்பாட்டுப் புரிதல்கள் நிகழ்வது தர்க்கத்தினால் தான். அதையே நான் இந்த நூலிலும் சொல்லியிருக்கிறேன்.
ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவலில் ‘ஆழ்வார்’ என்று ஒரு பாத்திரத்தையே வைத்தார். மிக கேலிக்குரியதாக அப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைத் தாண்டி அந்த நாவல் தமிழ் எழுத்துச் சூழலில் பெரிய சுனாமியை உண்டாக்கியது. ஒரு தொன்மம், ஒரு ஆப்த வாக்கியம் ( காலடியில் எல்லாம் மண்) என்பதை விரித்து விஷ்ணுபுரம் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து சென்று வாசகனின் மனத்தில் பல கேள்விகளையும், பல தத்துவப் புரிதல்களையும், பண்டைய ஞான மரபின் தர்க்க வாதம் பற்றிய பெருவியப்பையும் எற்படுத்தியது. அந்த அனுபவம் அதைப் படித்தால் மட்டுமே புரிபடும். அங்கு வாதத்தில் பவுத்தம் வெல்வதாகக் காட்டப்படும். எனவே மற்ற தத்துவங்கள் தோற்பதாக முடியும்.
ஒரு தத்துவம் பேசப்படும் போது மற்றது கீழிறங்குவது போல் தோன்றுவது இயல்பு. எனவே அதன் ஸ்தாபகரும் கீழிறங்குவது போல் தோன்றுவதும் இயல்பே. எல்லாத் தத்துவங்களும் ஒரே நிலையில் உயர்ந்தே காட்டப்பட வேண்டும் என்றால் அதில் வாதம் எப்படி எடுபடும்? தற்போதைய ‘செக்யூலரிசம்’ போல் தலையில் குல்லாயும், கழுத்தில் சிலுவையும், நெற்றியில் வெளியில் தெரியாதபடி திருநீறும் அணிந்து பம்மாத்து வேலை செய்யும் செக்யூலர்வாதிகள் போல் அமைந்துவிடும். இது யாரை ஏமாற்றும் வேலை? நான் இந்த நூலில் அப்படி ஏமாற்ற விரும்பவில்லை.
சங்கரர் வழியில் ‘ஜீவன் முக்தி’ அடைய சில வழிகள் உள்ளன. ஞானம் அடைந்து பின்னர் ஒருமையை உணர்தல் என்று சொல்லலாம். அந்தப் பாதை சிரமமானது. அந்தச் சிரமங்களை உடைத்தெறிகிறது விசிஷ்டாத்வைதம். மோட்சம் அனைவருக்குமானது என்கிறது அது. அதற்கான ஆழ்வார் பாசுரங்கள் எடுத்தாளப்படுகின்றன. ‘பிரபத்தி’ நெறி பேசப்படுகிறது. இவற்றை இந்த நூலில் நான் சொல்கிறேன்.
சங்கரர் பற்றியும் இராமானுசர் பற்றியும் சுவாமி விவேகானந்தர் இப்படிச் சொல்கிறார் :
“Then came the brilliant Râmânuja. Shankara, with his great intellect, I am afraid, had not as great a heart. Ramanuja’s heart was greater. He felt for the downtrodden, he sympathised with them. He took up the ceremonies, the accretions that had gathered, made them pure so far as they could be, and instituted new ceremonies, new methods of worship, for the people who absolutely required them. At the same time he opened the door to the highest; spiritual worship from the Brahmin to the Pariah. That was Ramanuja’s work. That work rolled on, invaded the North, was taken up by some great leaders there; but that was much later, during the Mohammedan rule;”
“You may mark one characteristic since the time of Ramanuja — the opening of the door of spirituality to every one. That has been the watchword of all prophets succeeding Ramanuja, as it had been the watchword of all the prophets before Shankara.”
“He was a good arguer and a scholar, no doubt of that, but he had no great liberality; his heart too seems to have been like that. Besides, he used to take great pride in his Brahmanism — much like a southern Brahmin of the priest class, you may say. How he has defended in his commentary on the Vedanta-Sutras that the non-Brahmin castes will not attain to a supreme knowledge of Brahman! And what specious arguments! Referring to Vidura* he has said that he became a knower of Brahman by reason of his Brahmin body in the previous incarnation. Well, if nowadays any Shudra attains to a knowledge of Brahman, shall we have to side with your Shankara and maintain that because he had been a Brahmin in his previous birth, therefore he has attained to this knowledge? Goodness! What is the use of dragging in Brahminism with so much ado?”
எனவே சாதிகள் விஷயத்தில், ஞானம் அடைந்து ஜீவன் முக்தி பெறும் விஷயத்தில் சங்கரரது வழியைப் பலரைப் போல சுவாமி விவேகானந்தரும் எதிர்க்கிறார். விசிஷ்டாத்வைதம் மோட்சத்திற்கு உயர்குடிப்பிறப்பு தேவை இல்லை, ஞானம் தேவை இல்லை, பக்தி மற்றும் பிரபத்தியே போதும் என்கிறது. இதையே இராமானுசர் சொல்வதாக நூலில் நான் சொல்லியிருந்தேன்.
அத்வைத எதிர்ப்பு? என்ன பார்வை இது? அத்வைதத்தின் மேல் தான் விசிஷ்தாத்வைதம் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு பிரம்ம வாதத்தையே விசிஷ்டாத்வைதமும் முன்வைக்கிறது. இங்கு அத்வைத எதிர்ப்பு எங்கு வந்தது?
ஆதிசங்கரர் இல்லையேல் சிருங்கேரி பீடம் இல்லை. சிருங்கேரி இல்லையேல் தென் இந்தியாவில் சனாதன தர்மம் இல்லை. அந்த ஆதி குருவிற்கு வந்தனம் செய்யாமல் இன்று யாரும் பாரத ஞான மரபில் பேசமுடியாது. சங்கரரைப் பற்றி இராமானுசர் உயர்வாகப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்துள்ளது. சங்கரரை இழிவுபடுத்தியுள்ளேன் என்பது சுத்த மூடத்தனம். அபவாதம் என்றும் சொல்வேன்.
சைவத்தையும் அத்வைதத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன் என்பதும் தவறு. ‘சிவன்’ என்னும் பதம் பிரும்மத்தின் உருவகம் போல் பயன்படுத்தியுள்ளேன். இன்னும் சொல்லப்போனால் சைவத்தைப் பற்றிப் பேசவே இல்லை என்பதே உண்மை. ‘பதி, பசு, பாசம்’ முதலானவற்றைப் பற்றிப் பேசவே இல்லை. இராமானுச தத்துவம் பற்றிப் பேசுகையில் சைவம் தேவை இல்லை என்று அந்த வாதப் பகுதியை பிளாகில் எழுதும்போதே நீக்கிவிட்டேன் என்பதே உண்மை.
வைஷ்ணவ ஜீயர்களில் பிராமணர்கள் இல்லயே, எனவே இராமானுச தத்துவம் தோல்வியா? வைஷ்ணவக் கோவில்களில் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர்களாக இல்லையே ? என்கிறார்கள். அர்ச்சகர்கள் பதவியில் இல்லை. ஆனால் ‘கோவில் ஒழுகு’ பிரகாரம் ஶ்ரீரங்கத்தில் கோவிலுக்குள் பல வேலைகள் செய்தார்கள். எல்லாவற்றையும் விட கோவிலுக்குள் நுழைந்தார்கள். அது இராமானுச தத்துவத்தின் வெற்றியே என்பேன். இதையே நூலிலும் சொல்லியுள்ளேன். ‘சாத்தாத முதலிகள்’ என்று பிராமணர் அல்லாதாரையும் வைஷ்ணவர்களாக உருமாற்றி ஒருமை கண்டவர் இராமானுசர். அதற்கு ஆழ்வார் பாசுரங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளேன். இதனையும் இந்த நாவல் பேசுகிறது.
இன்றைக்கும் கொங்கு முதலான தேசங்களில் பிராமணர் அல்லாத வைஷ்ணவர்கள் கட்டுப்பாட்டில் பல திருமால் கோவில்கள் உள்ளன. அவர்களிலும் கண்ணன் கூட்டம் என்று ஒரு குழு இருக்கிறது. இளைய பெருமாள் என்ற பெயரில் கண்ணன் வழிபாடும் வைஷ்ணவ வழிமுறையும் இருந்து வருகிறது. இதெல்லாம் இராமானுச தத்துவத்தின் வெற்றி இல்லாலமல் வேறென்ன?
பிராமணர் இல்லாத வைஷ்ணவர்கள் வன்னியர், தேவர், நாயுடு என்று பல பிரிவுகளிலும் இன்னும் தென்படுகின்றனர். புருஷோத்தம நாயுடு என்பாரின் பிரபந்த விளக்கம் அவ்வளவு எளிமையானது என்று கேட்டிருக்கிறேன். ராதாகிருஷ்ண பிள்ளை என்பாரின் ‘பண்டைய வைணவம்’ குறித்த நூலை என் நூலிற்காகப் படித்திருக்கிறேன். பிரமிக்க வைக்கும் ஆளுமைகள் பிராமணர் அல்லாத வைணவர்களில் தென்படுகின்றனர். பிராமணர் அல்லாத ரெட்டியார்கள் என்னும் வைஷ்ணவர்கள் செய்யும் சேவை கொஞ்சமா? இது இராமானுசரது ஒருங்கிணைக்கும் ஶ்ரீவைஷ்ணவக் கொள்கையின் வெற்றி இல்லாமல் வேறென்ன?
ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். இன்று எத்தனை சைவ மடங்களில் குறிப்பிட்ட சாதி தவிர மற்றவர்கள் பண்டார சன்னிதிகளாக முடியும்? ஜீயர்களைப் பற்றிக் கேட்பவர்கள் இதையும் கேட்கலாமா?
‘தென்கலை வடகலை’ – இதற்காகத்தான் இந்த நூல் என் பிளாகில் துவக்கம் கண்டது. ஆனால் இதற்காக மேலும் படிக்கப்போய் இந்த வேறுபாடுகள் இல்லாத, இதற்கெல்லாம் முற்பட்ட தூய விசிஷ்டாத்வைத தத்துவத்தை விளக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். எனவே தத்துவ அடிப்படையில் மட்டுமே இந்த வேறுபாட்டைக் கையாண்டுள்ளேன். சுஜாதா சொல்வார் ‘உழக்கில் கிழக்கு மேற்கு’ என்று. அது போல் தான் இந்த வேறுபாடும், அதற்கான நேர விரயங்களும்.
‘வேதாந்த தேசிகர் பார்வை’ – இராமானுசர் பேசுவதாக எழுதப்பட்ட நூலில் அவருக்குப் பின் தோன்றிய தேசிகரின் பார்வை எப்படி வர முடியும்? முடிந்தால் ‘நான் தேசிகன்’ என்று ஒரு நூல் எழுதலாம். அப்பைய தீக்ஷிதர் பார்வையும் அப்படியே.
‘கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டையும் இணைக்கும் தத்துவம்’ என்று சொல்லியிருந்தேன். ‘இவை மார்க்சீய வார்த்தைகள். இவற்றை ஏன் பயன்படுத்துகிறாய்?’ என்று கேட்கிறார்கள். சொற்களுக்குக் கூட சாயம் பூசுவது இது.
இந்த நூலின் முன்னுரையில் அரவிந்தன் நீலகண்டன் சொல்வது போல ஶ்ரீவைஷ்ணவ சமன்வயப் பார்வை முன்வைக்கப்படுகிறது. தற்காலத்திற்கும் தேவையான, அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கு பேசப்படுகிறது.
ஶ்ரீவைஷ்ணவம் துவேஷங்களற்ற நோக்கு கொண்டது.
முடிவாக: இராமானுசரது பார்வையையும் அவரது வழியையும் எழுத வேண்டிய நூலில் ‘செக்யூலர்’ பார்வைக்காக என்று கடுகு தாளித்தால் அது தமிழ் சினிமா போல் அவியலாக அமையுமே தவிர மற்றபடி ஒரு பயனும் இராது. நாம் முதலில் இந்த வாழைமட்டை மனோபாவத்தை விடுத்து, பாரதத்தின் ஞான மரபின் வாரிசுகளாவோம். ‘செக்யூலர்’ சிரங்கு வந்து சொறியாமல் நமது தர்க்க விவாதப் பண்பாட்டை, தத்துவங்களின் பெருவிரிவுகளை அவை நிகழ்ந்த காலத்தின் சூழ்நிலைகளோடு பொருத்திப் பேசுவோம்.
நன்றி.
Just want to leave a important note. I am from a community called Sathatha (Chatata) Sri Vaishnava. To my knowledge this community was founded by Ramanuja. Our community people do pooja in some Vaishnavite temples.
LikeLike
That is precisely what St.Ramanuja did. Glad to know. Thank you.
LikeLike