இரண்டு மாதங்களுக்கு முன்னர், விடியற்காலை.
‘இன்னிக்கி கார்த்தால ஒரு கனவு வந்தது சார். அத உங்ககிட்ட உடனே சொல்லணும்னு விடியற்கார்த்தாலயே கூப்டுட்டேன்’ என்றார் நெடுநாளைய நண்பர், சிங்கப்பூரில் இருந்து. அங்கு இருந்த சமயத்தில் இலக்கியப் பட்டறைகளில் இணைந்து செயலாற்றியிருந்தோம்.
‘அவ்ளோ அவசரமானதா?’ என்றேன் தூக்கக் கலக்கத்தில்.
‘ஆமாம். உங்களப் பத்தினது’ என்றார் பீடிகையுடன். தூக்கம் கலைந்தது.
‘கனவுல நான் ஶ்ரீரங்கத்துல கோவில் வாசல்ல ஒரு வீட்டு திண்ணைல உக்காந்திருக்கேன். அப்போ ரெண்டு பேர் வறாங்க. ஒருத்தர் வைஷ்ணவ லட்சணங்களோட பஞ்சகச்சம் கட்டிண்டிருக்கார். மத்தவர் சந்நியாசி’ நிறுத்தினார்.
சுவாரஸ்யம் அதிகரித்தது.
‘பஞ்சகச்ச வைஷ்ணவர் எங்கிட்ட கேக்கறார். ஆமாம், நீங்கள்ளாம் தேசிகன் தேசிகன்னு சொல்றீங்களே, அவர் ஆசார்யனா என்ன? ராமானுஜருக்கு அப்புறம் மணவாள மாமுநிகள் தானே உண்டு. இவர் எங்க புதுசா வறார்?’ ப.வைஷ்ணவர்.
‘இல்ல. அவரும் ஆசாரியன் தான். மாமுநிகளுமே கூட ஆசாரியன் தான்’ நண்பர்.
‘அப்ப அவரோட காலம் என்ன? ராமானுஜருக்கும் அவருக்கும் தேசிகனுக்கும் கால வித்யாசம் என்ன? அவரோட சித்தாந்தம் என்ன?’ சரமாரியாகக் கேட்கிறார் ப.வைஷ்ணவர்.
‘எனக்கு கால விஷயமெல்லாம் தெரியல்ல. ரெண்டு பேரும் ஆசாரியன்’ நண்பர்.
அப்போது சந்நியாசி குறுக்கிடுகிறார்.

‘இந்தக் கேள்விய ராமானுஜரப் பத்தி எழுதினானே, இங்க இருந்தானே, அவன் கிட்ட கேக்கச் சொல்லுடா. அவன எழுதச்சொல்லு’ என்கிறார் சந்நியாசி.
‘இது தான் சார் நடந்தது. தூக்கிவாரிப் போட்டு எழுந்துட்டேன். அதான் உடனே ஃபோன் பண்ணினேன்’ நண்பர் உணர்ச்சிப் பிரவாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘நீங்க அவசியம் தேசிகன் பத்தி எழுதணும்’ ஏதோ ஆணை போலவே பேசினார்.
ஃப்ளாஷ்பாக்.
ஈராண்டுகளுக்கு முன்னர் தேசிகனின் 750வது திருநக்ஷத்ரம் நடப்பதற்குச் சில மாதங்கள் முன்னர் இந்தியாவில் இருந்து ஒரு மாணவ-வாசகி அழைத்து தேசிகனைப் பற்றி எழுதவேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கான உழைப்பை அளிக்க அப்போது என்னால் முடியவில்லை என்று தெரிவித்திருந்தேன்.
இப்போது மீண்டும் தேசிகனைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆணை.
நண்பரிடம் கேட்டேன் ‘ அந்த சந்நியாசி முகத்தப் பார்த்தீங்களா? திருமண், த்ரிதண்டம் எதாவது இருந்ததா?’
‘வைஷ்ணவ சன்னியாசி தான். ஆனா திருமுகத்தப் பார்க்கல. கைல தண்டம் இருந்தது’ என்றார்.
‘காஷாயம் முட்டிக்கு மேல இருந்ததா? இல்ல கீழ எறங்கி இருந்ததா?’ என்றேன்.
‘அது தெரியல்ல. மனசுல பதியல்ல. ஆனால் அவர் சந்நியாசி’ என்றார் நண்பர்.
தேசிகன் மீண்டும் ஆணையிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு, எழுத ஆணையை நிறைவேற்ற முடிவெடுத்தேன்.
ஆனால், அந்த சந்நியாசி யாரென்று மனதைக் குடைந்துகொண்டே இருந்தது.
முன்னர் ஒருமுறை என் கனவில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வந்து அவரது ஏக தண்டம் என்னிடம் வருவது போல் தோன்ற, இதை அவரிடவே காலஞ்சென்ற என் தாயார் கேட்க, ‘சந்நியாசிகள் ந்ருஸிம்ஹ ஸ்வரூபம். சீக்கிரம் நல்லது நடக்கும்’ என்று அருளினார். சில நாட்களில் திருமணம் நிச்சயமானது.
சரி ஏதோ ந்ருஸிம்ஹ ஆக்ஞை என்று தேசிகன் பற்றி வாசிக்கத் துவங்கினேன்.
சில நாட்கள் கழித்து ஆமருவிப் பக்கங்கள் வாசகர் ஒருவர் தளத்தில் இருந்து தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
‘ரொம்ப நாளா பேசணும்னு எண்ணம். இபப்தான் முடிஞ்சுது. நீங்க அஹோபில மடம் 44-வது பட்டம் ஜீயரப் பத்தி எழுதணும்.’ என்று சொல்லி, அந்த ஆசாரியனுடனான பல நிகழ்வுகளைச் சொன்னார்.
ஒருவேளை கனவில் வந்தது 44ம் பட்டத்து ஜீயரோ? என்ற நினைவில் ஆழ்ந்தேன்.
அப்போது மனதில் பளீரென்று தோன்றியது:
44ம் பட்டம் ஜீயரின் சந்நியாசத் திருநாமம் ‘வேதாந்த தேசிக யதீந்திர மஹாதேசிகன்’. எனக்கு சமாஸ்ரயணம் அவரிடம். ஆக, இது ஆசாரிய ஆக்ஞை என்பது புரிந்தது.
வரும் வாரங்களில் ‘நான் வேங்கடநாதன்..’ தொடரில் சந்திப்போம் என்கிற சுப செய்தியை ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூர நன்நாளில் அறிவிக்கிறேன்.
‘வாழி தூப்புல் நிகமாந்த ஆசிரியன்’
‘
Leave a comment