திருமண் கிராமம் – அடுத்த கட்டம்

திருமண் தயாரிக்கும் கிராமம் ஜடேரியைப் பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து பலர் அந்தக் கிராமத்திற்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அவர்களுக்கான ஆன்மீக உணவளிக்க முன்வந்துள்ளனர். இத்தனையும் தீபாவளி அன்று நடந்துள்ளது. 

இதைத் தவிர வேறு ஒரு செயலும் செய்யவேண்டியுள்ளது. 

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைஷ்ணவர்கள் திருமண் தரித்தே வந்துள்ளனர். இதில் பிராம்மணர்களும் அடக்கம். பல வைஷ்ணவ குலங்கள் – வன்னியர், தேவர், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கவுண்டர், நாயக்கர் முதலானோரும் அவ்வாறே நித்யப்படி திருமண் காப்பு தரித்து, தங்கள் குடும்பத்தில் வழக்கத்தில் உள்ள அனுஷ்டானங்களையும் விடாது பின்பற்றியே வந்துள்ளனர்.

திராவிட இயக்கங்கள் என்னும் நச்சு நுழைந்தபின், திரைப்பட நடிகர்கள் நாட்டின் நாயகர்களாக ஆன பின், ஆங்கில அரசின் சூழ்ச்சிக் கல்வியால் மூளை மழுங்கடிக்கப்பட்டவர்கள் அதிகார வர்க்கங்களில் அதிகரித்த பின் திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் குறைந்துவிட்டது. திருமண் இட்டுக் கொள்வது ஏதோ பத்தாம் பசலித்தனம்  என்னும் எண்ணம் ஏற்பட்டு  அவ்வழக்கம் அடியோடு வழக்கொழிந்துவிட்டது.

தற்காலத்தில் கோவில் அர்ச்சகர்கள், உபாத்யாயம் பண்ணி வைப்பவர்கள் தவிர அனேகம் பேர் திருமண் இட்டுக் கொள்வது இல்லை. ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்க்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு, தற்போது அதுவும் குறைந்து வருகிறது.

திருமண் பெட்டி

ஜடேரி கிராமவாசிகளுக்கு வாழ்வளிக்க வேண்டுமானால், திருமண்+ஶ்ரீசூர்ணம் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். Supply – Demand மூலமே இவர்களுக்கு நல்லது செய்ய முடியும். திருமண் இட்டுக்கொள்வது ஒரு ஆன்மீகச் சின்னம் தரித்தல் என்பது போக, அவ்வழக்கம் ஒரு Fashion Statement என்கிற அளவில் பவனி வர வேண்டும். இதற்கு வாரம் ஒரு நாளெனும் திருமண் தரித்துச் செல்வது என்று மக்கள் முன்வர வேண்டும்.

சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அடுத்த ஓராண்டுக்கு ஒருவருகொருவர் பரிசளிக்கும் போது, ஒரு திருமண் பெட்டியைப் பரிசளித்தால் என்ன? திருமண் பெட்டியுடன் #MeToo, #IamwithDharma, #Thiruman என்று ஹாஷ் டேகுகளில் சமூக ஊடகங்களில் படங்கள் வெளியிட்டால் என்ன? திருமண் இட்டுக் கொண்ட சுயப் படங்களை வெளியிட்டால் என்ன? கிழிந்த ஜீன்ஸ் அணிவது Fashion என்று உள்ளது. திருமண் இட்டுக்கொளது Fashion என்று ஆனால் ஜடேரி முதலிய கிராமங்கள், அங்கு வாழும் மக்கள் எல்லாருக்கும் நன்மை ஏற்படும். திருமண் தொழிலும் செழிக்கும்.

இம்முயற்சியால் மூன்று பிரிவினருக்கு  நன்மைகள் உண்டாகும்.

  • ஜடேரி மக்கள்
  • திருமண் பெட்டி என்று மரப் பெட்டிகள் தயாரிப்போர்
  • திருமண் வைத்துக் கொள்ளும் ஓலைப்பெட்டி தயாரிப்போர்          
ஓலைப் பெட்டி

    ஒரு ஐபோன் சுமார் 70 ஆயிரத்துக்கு விற்கிறது. ஒரு பட்டுப் புடவை சில ஆயிரங்கள். கார், பைக் முதலியன லட்சங்களில். மரத்தாலான திருமண் பெட்டி சுமார் ரூ 250 ஆகிறது. ஓலைப்பெட்டி இன்னமும் குறைவே. 

இனியொரு விதி செய்வோம். இந்த ஆண்டு முழுவதும் திருமண் + ஶ்ரீசூர்ணம்  உள்ள திருமண் பெட்டிகளை வாங்கிப் பரிசளிப்போம். திருமண் இட்டுக்கொள்வோம். திருமண் இட்டுக் கொள்வதைக் காப்பு என்பர் பெரியோர். எதிலிருந்து காக்கிறதோ இல்லையோ, அதைத் தரித்திருந்தால் தீய செயல்களில் நாம் ஈடுபடாமல் காக்கும் என்பது உறுதி.

அலுவலகங்களில் Ethnic Wear என்று சில நாட்களில் உடை உடுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது. அன்னாட்களில் அவ்வுடைகளுடன் திருமண்ணும் தரித்துச் செல்லலாம். உடை மட்டும் Ethnic என்றில்லாமல், நமது நெற்றியும் அவ்வறே இருக்கச் செய்யலாம். 

இது ஆண்களுக்கு மட்டுமானது அன்று. பெண்களும் நல்ல நாட்களில் கோதைத் திலகம் என்று சிறிய அளவில் இட்டுக் கொள்வது வழக்கத்தில் இருந்தது. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களும் கூட இதை ஒரு Fashion Attire என்பதாகவாவது பின்பற்றலாம். இதன்மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இதன் பயன்பாடு அதிகரிக்கும். முயற்சி செய்து பார்ப்போமே.  

ஶ்ரீரங்கத்தில் இருந்து திரு.வீரராகவன் சம்பத்  என்பார் மலிவான விலையில் திருமண் பெட்டிகளை அனுப்பி வைக்கிறார். இதற்கு அவர் ஜடேரி கிராமத்தில் இருந்து திருமண் கட்டிகளை வாங்கி, ஶ்ரீரங்கத்தில் ஶ்ரீசூர்ணம் தயாரித்து, பெட்டிகளில் வைத்து வேண்டுபவர்களுக்கு அனுப்புகிறார். ஜடேரி கிராமத்தில் தயாராகும் திருமண்ணின் தரத்தை அயோத்தியில் தயாராகும் திருமண்ணின் தரத்திற்கு உயரத்த முயன்றுவருகிறார். அன்னாரின் முயற்சிக்குத் தோள் கொடுப்போம். இவரைத் தொடர்புகொள்ள  +91 9655219245 Email: do@pracharam.in

சிறையில் இருக்கும் கவிராஜசிம்ஹம்

கவிகளில் சிங்கம் போன்றவர், எந்தச் செயலையும் செய்ய வல்லவரான ஒருவர் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். விஜய நகரப் பேரரசின் ஆஸ்தான கவியாக வருமாறு அழைக்கப்பட்டார். போக மறுத்துக் காஞ்சியில் ‘வரதன் என் சொத்து, இதைவிடப் பெரிய சொத்து வேண்டுமா?’ என்று கேட்டு, அரச பதவியைத் தள்ளியவர் இன்று சிறையில் இருந்தவாறே இன்று தனது 750வது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். (புரட்டாசி திருவோணம்)

ஆம். சிறையில் தான். அவர் ஏன் சிறை சென்றார் என்று பார்க்கும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

  • அவதாரம்: பொ.யு. 1268
  • திருநாடு: பொ.யு. 1369
  • பிறந்த ஊர்: தூப்புல் ( காஞ்சிபுரம்)
  • சென்ற ஊர்கள்: காஞ்சிபுரம் , ஸ்ரீரங்கம், மேல்கோட்டை, திருவஹீந்திரபுரம்
  • தெரிந்த மொழிகள்: தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாளம்
  • எழுதிய நூல்கள் : சுமார் 125.
  • பட்டங்கள்: ஸர்வ தந்தர ஸ்வதந்திரர், கவிதார்க்கிக சிம்ஹம், கவிதார்க்கிக கேஸரி
  • சாதனைகள்:
    • மாலிக் கபூரிடமிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரைச் சுவர் எழுப்பிக் காத்தது
    • பன்னீராயிரம் பேர் மடிந்து கிடந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிணம்போல் தானும் கிடந்து சுதர்சன சூரியின் ‘ஸ்ருதப் பிரகாசிகா’ நூலை அன்னியப் படைகளிடமிருந்து காத்தது
    • சுதர்சன சூரியின் இரு பிள்ளைகளையும் காத்து ரட்சித்தது
    • 125 நூல்கள் எழுதியது
    • ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்களுக்கு ஏற்றம் அளித்தது
    • உஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தது
    • பரகால மடம் ஸ்தாபித்தது

இன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம்.  தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். ஆனால், தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார்.  நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. யாரும் கவிப்பேரரசு என்று கோலோச்சும் நாளில் இப்படிப்பட்ட பெரியவர்களையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்துவந்த தேசிகனை அரசவைக்கு அழைத்துத் துதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன், ‘என்னிடமா சொத்தில்லை? தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

தனது உஞ்சவிருத்தியின் போது அரிசியில் கலந்திருந்த தங்க நாணயங்களை ‘உணவில் புழுக்கள் உள்ளன’ என்று சொல்லி தர்ப்பைப் புல்லால் தள்ளிவிட்டுள்ளார்.

வேதாந்த தேசிகன்
வேதாந்த தேசிகன்

தேசிகனை ஏளனம் செய்ய விரும்பிய திருவரங்கப் பண்டிதர்கள் , திருமணத்திற்கு உதவி கேட்ட ஏழை பிரும்மச்சாரியை அவரிடம் அனுப்பி வைத்தனர். தேசிகன் திருமகளை நினைத்து ‘ஸ்ரீஸ்துதி’ பாட, தங்க மழை பொழிந்துள்ளது.

‘நீர் ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்பது உண்மையானால், கிணறு வெட்டுவீர்களா?’ என்று கேட்டவர்களுக்கு எதிரில் தானே கிணறு வெட்டியுள்ளார் ( திருவஹீந்திரபுரத்தில் இன்றும் காணலாம்).

மந்திரசித்தி பெற்றவரான தேசிகன் அற்புதங்கள் புரிந்ததாகவும் கர்ணபரம்பரைச் செய்திகள் உண்டு.

திருவரங்கனின் பாதம் பற்றி மட்டுமே ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி சாதனை நிகழ்த்தினார் தேசிகன். ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற பெயருடன் இன்றும் வைஷ்ணவர்களின் நித்ய அனுஸந்தானத்தில் ஒன்றாக உள்ளது இந்த நூல்.

மாலிக் கபூர் படையெடுப்பு நடந்ததா என்று பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ ‘அபீதிஸ்தவம்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். அதில் ‘Contemporary History’ என்னும் விதமாகத் துருஷ்கர்களால் ஏற்படும் பயம் நீங்க வேண்டும் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எழுதியுள்ளார்.

துருஷ்கர்கள் பற்றிய செய்தி வரும் ஸ்லோகம் இதோ:

கலிப்ரணிதிலக்ஷணைகலிதஶாக்யலோகாயதை:
துருஷ்கயவநாதிபிஜகதி ஜ்ரும்பமாணம் பயம் |
ப்ரக்ருஷ்டநிஜஶக்திபிப்ரஸபமாயுதைபஞ்சபி:
க்ஷிதித்ரிதஶரக்ஷகை க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||

அந்த ஸ்லோகத்தினால் விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவை :

स्वस्ति श्रीः बन्धुप्रिये शकाव्दे (शकाव्द १२९३)
i. आनीयानीलश्रृङ्गद्युतिरचितजगद्रञ्जनादब्जनाद्ने .
चेञ्चयामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुप्कान् तुलुष्कान् ।
लक्ष्मीक्ष्माभ्यमुभाभ्यां सह निजनगरे स्थापयन् रङ्गनाथं

सम्यग्वर्या सपर्या पुनरकृत यशोद

र्पणो गोप्पणार्यः ||
विश्वेशं रङ्गराजं वृषभगिरितटात् गोप्पणक्षोणिदेवो
नीत्वा स्वां राजधानी निजबलनिहतोत्सिक्तौलुष्कसैन्यः ।
कृत्वा श्रीरङ्गभूमिं कृतयुगसहितां तं च लक्ष्मीमहीभ्यां
संस्थाप्यास्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्या सपर्याम् ||

‘அபீதிஸ்தவம்’ நூலின் தமிழாக்கத்திற்குப் புதுக்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் வழங்கிய முன்னுரையில் இந்தச் செய்தி வருகிறது என்று ரகுவீர தயாள் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் எழுதுகிறார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவேண்டிய வழிகள் என்னவென்று விளக்கும் விதமாகவும் பல நூல்கள் இயற்றியுள்ள தேசிகன் இந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

தான் மிகவும் விரும்பிய திவரங்கனுக்கென்று பல ஆராதனங்களை ஏற்படுத்திய ஸ்வாமி தேசிகன் தற்போது பல திவ்ய தேசங்களிலும் சிலா ரூபமாக எழுந்தருளியிருந்தாலும், தான் மிகவும் உகந்த திருவரங்கத்தில் தனக்கென ஏற்பட்டுள்ள சன்னிதியில் சிறையில் இருக்கிறார். அவரால் தனது சன்னிதியை விட்டு வெளியே வர இயலாது. வரக்கூடாது என்று வைஷ்ணவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கூட்டத்தின் ஒரு பிரிவு இந்திய நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.

காரணம் : தேசிகன் வடகலைத் திருமண் அணிந்துள்ளாராம். திருவரங்கம் தென்கலைக் கோவிலாம். ஆகையால் அவர் தென்கலைத் திருமண் அணியும் வரை தனது சன்னிதிக்குள்ளேயே தான் இருக்க வேண்டும், உற்சவக் காலங்களில் கூட வெளியே வரக் கூடாது என்பது மிக உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து.

அற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பெருமாளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அமுது கண்டருளப்பண்ணக் கூட வழி இல்லாத நிலை பல இடங்களில் உள்ளது. அதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லை. ஆனால் வேதாந்த தேசிகர் திருமண் மாற்ற வேண்டும் என்று முன்னேறிய ஒரு கூட்டம் 1911ல் இருந்து ‘போராடி’ வருகிறது. அதற்கு முன்னர் இருந்த தேசிகர் விக்ரஹத்தில் தென்கலைத் திருமண் இருந்தது என்று வாதிடுகிறார்கள். நம் காலத்திற்கு மிகவும் அவசியமான பிரச்னை இல்லையா, அதனால் வாதிடுகிறார்கள்.

தேசிகர் கோவில் பிராகாரங்களில் எழுந்தருளக்கூடாது என்று 1911ல் நடந்த வழக்கு விகாரங்கள் இதோ.

1987ல் திருவரங்கக் கோவிலில் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் கட்டினார் தேசிகர் வழியைப் பின்பற்றும் அஹோபில மடத்தின் ஜீயர். அவர் கேட்டுக் கொண்டுமே தேசிகருக்கு மரியாதை அளிக்கத் தவறியது துவேஷக் கூட்டம். திருமண்ணை மாற்ற வேண்டும் என்று மீண்டும் வாதிட்டனர்.

இது தொடர்பான வழக்கு விபரங்கள் இங்கே.

அவர்கள் வாதிடட்டும். வாதிட்டு முடியும் வரை, இன்று அவர்கள் வாதிடும் கோவில், திருவரங்கன் முதலானோர் இன்றும் இருக்கக் காரணமான வேதாந்த தேசிகன், தான் காத்த கோவிலில், தன் சன்னிதியிலேயே சிறை இருக்கட்டும். அங்கேயே தனது 750வது பிறந்த நாளைக் கொண்டாடட்டும்.

நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

பி.கு: இந்தப் பதிவு, கலை வேறுபாடுகள் இன்றி ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்களைப் புரிந்துகொண்டு பிரபத்தி மார்க்கம் மட்டுமே வேண்டும் என்று பிரியப்படும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவ அன்பர்களுக்கானது. நடு நிலை வகிக்கிறேன் என்று பேசுபவர்கள் விலகி நில்லுங்கள். மணவாள மாமுனிகளை இழிவுபடுத்தும் வடகலையாரும் அவ்வாறே.

இணைப்பில் இருக்க : https://facebook.com/aapages

வைஷ்ணவ லக்ஷணம்

வைஷ்ணவ லக்ஷணம் பற்றித் தெரிந்து கொள்ள பகவத் ராமானுஜரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் :

உடையவர் சஞ்சாரமாக எழுந்தருளியிருந்த போது, அவரை ஊருக்கு எழுந்தருளப்பண்ண பல தனிகர்கள் முன்வந்திருந்தனர். உடையவர் மற்றும் அடியார் குழாத்துக்கான ஏற்பாடுகள் குறித்துப் பார்த்து வர ஒரு ஶ்ரீவைஷ்ணவரை உடையவர் அனுப்பினார். சென்றவர் திரும்பி வந்து, ‘ஒரு ஶ்ரீவைஷ்ணவன் வந்துள்ளான் என்று தெரிந்துகொள்ளாத அளவிற்குத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆடம்பரமான பந்தல்களும், அலங்காரங்களும் என்று எங்கும் விழாக்கோலமாக உள்ளது,’ எனறு தெரிவித்தார்.

மறு நாள் உடையவர் தனது குழாத்துடன் அவ்வூருக்கு எழுந்தருள, ஊருக்குச் செல்ஷலும் பாதை இரண்டாகப் பிரியும் இடத்தில், அந்த ஊரை விட்டு விலகிச் செல்லும் பாதையில் சென்று அந்த ஊரில் உள்ள ஒரு குடிசையை அடைந்தார். அது பரம பக்தையான பருத்திக்கொல்லையம்மாள் என்னும் ஶ்ரீவைஷ்ணவருடையது.

ஆனால் கதவு திறக்கப் படவில்லை. உள்ளே அந்தப் பெண்மணி உடுத்திக்கொள்ள சரியான வஸ்த்ரம் இல்லாமையால் கதவைத் திறக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் விதமாகத் தானும் அந்தக் கதவை உள்ளிருந்து இருமுறை தட்டினாள்.

நிலைமையை உணர்ந்து கொண்ட உடையவர், தனது தலைல் இருந்த ஒரு காவி காஷாய வஸ்திரத்தை அவிழ்த்து வீட்டின் உள் எறிய, அதை உடுத்தியவண்ணம் அந்தப் பெண் உடையவர் குழாத்தை வரவேற்று இருப்பதைக் கொண்டு உபசரித்தாள்.

உடையவர் இருப்பிடத்தை அறிந்துகொண்ட தனிகர், அவசரமாக வந்து தனது விழாக்கோல வரவேற்பை ஏற்க வேண்ட, உடையவர் மறுத்து, ‘தனியாக வந்த சாதாரண ஶ்ரீவைஷ்ணவனை உணராத உங்கள் இடம் நமக்கு உகந்ததன்று’ என்று சாதித்தருளினார்.

Ramanuja
ராமானுஜர்
தவறை உணர்ந்த தனிகர் பிராயச்சித்தம் வேண்ட, ‘இன்றிலிருந்து நீர் இவ்வூர் ஶ்ரீவைஷ்ணவர்களின் ஈரங்கொல்லியாக இருந்து சேவை செய்வீர்,’ என்றார். (ஈரங்கொல்லி – வண்ணார்).

ஶ்ரீவைஷ்ணவனது பார்வையில் பகட்டும், படாடோபமும் இருத்தலாகாது என்பதைத் தனது வாழ்வின் மூலம் உடையவர் சாதித்தருளினார் என்று குருபரம்பரையில் சொல்வதுண்டு.

பாரதத்தில் கண்ணன் விதுரனின் குடிசையை நாடியதை ஒத்திருப்பதாக உடையவரின் செயல் அமைந்துள்ளது.

கழுத்து முழுக்க ஜொலிக்கும் தங்கமும், கைகளில் பிரேஸ்லெட்டும், மோதிரமுமாகத் தோன்றும் ஆண்களைக் கண்டால் ஏனோ எனக்கு இந்த நிகழ்வு நினைவிற்கு வருகிறது.

திருமேனி பாங்கா?

வைஷ்ணவத்தில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கத்தில் உள்ளன. இருந்தன என்று சொல்லலாம். அவை மறைந்து வருகின்றன.

ரேழி, அரங்குள், திருமாப்படி, பத்தாயம், முதலான சொற்கள் முழுமையாகவே வழக்கொழிந்து போய்விட்டன. நெல்லே இல்லாத போது ‘பத்தாயம்’ எப்படி தப்பிக்கும்?

‘தளீப்பண்ற உள்’ என்பது மட்டும் ஓரிரு வைஷ்ணவ இல்லங்களில் எஞ்சி இருக்கிறது. ‘கிச்சன்’ என்று தற்போது தமிழால் அறியப்படும் அறை அது. இவை தவிர ‘சாத்துமுது’, ‘நெகிழ்கறமுது’ போன்றவை அநேகமாக இல்லவேயில்லை.

‘கண்ணமுது’ இதுவரை தப்பித்துவிட்டது. ஆனாலும் ‘பாயசம்’ தான் யாருக்கும் தெரிகிறது.’ஸ்வீட் பாரிட்ஜ்’ க்கு இன்னமும் பழகவில்லை. ‘அக்கார அடிசில்’ என்றால் மனைவி முறைத்துப் பார்க்கிறாள். ( அக்காரம் – கரும்பு, அடிசில் – அரிசி ).

‘நூறு தடா வெண்ணையும் அக்கார அடிசிலும் ‘ சமர்ப்பிப்பதாக ஆண்டாள் கூறுகிறாள். ‘தடா’ என்கிற அளவையும் போய். இன்று வழக்கொழிந்த இந்தியச் சட்டம் எனறே நமக்குத் தோன்றும்.

‘தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்’ என்று எழுதுவது உண்டு. ‘ஒரு தண்டத்தை ( கழியை) நிற்கவைத்தால் எப்படி தடாலென்று விழுமோ அப்படி கீழே விழ்ந்து வணங்குகிறேன்’ என்று பொருள். எஸ்.எம்.எஸ். காலத்தில் இப்படி எழுதினால் நம்மைத்தான் ‘தண்டம்’ என்பார்கள்.

‘நைவேத்யம்’ என்கிறார்கள். ‘காட்டுவது’ என்னும் பொருளில் வருகிறது இது. வைணவத்தில் ‘அம்சேப்பண்றது’ ( அமுது செய்யப் பண்ணுவது) என்னும் நல்ல தமிழ்ச் சொல்லாடல் இருக்கிறது. இதுவும் அருகி வருகிறது.

பெரியவர்களை ‘அமருங்கள்’ என்று சொல்வது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்பதால் ‘எழுந்தருளியிருக்க வேண்டும்’ என்பதும் தற்போது மிகவும் வயதான, சித்தாந்தத்தில் ஊறியவர்களுக்கு மட்டுமே என்று ஆகியுள்ளது. அது போல அந்தப் பெரியவர்களை வீட்டிற்கு அழைத்தால் ‘பொன்னடி சாற்ற வேண்டும்’ என்று சொல்வது வழக்கம். ‘பொன்’ ரொம்ப விலையாகிவிட்டதால் விட்டு விட்டார்கள் போல. ‘அடி சாற்ற வேண்டும்’ என்றால் விபரீதமாகப் பொருள் படும் என்பதால் வழக்கில் இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

‘சௌக்கியமா?’ அல்லது ‘நலமாயிருக்கிறீர்களா?’ என்று கேட்பதற்குப் பதிலாக ‘தேவரீர் திருமேனி பாங்கா?’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. ‘திருமேனி பாங்காய் எழுந்தருளியிருக்கிறீர்களா?’ என்பதன் சுருக்கம். இப்போது இல்லவே இல்லை. ‘தேவரீர்’ என்பது ‘தேவள்’ என்று ஆசார வட்டாரங்களில் இன்னும் ஒலிக்கிறது. விரைவில் மறையும் என்று எதிர்பார்க்கலாம்.

‘வாழ்க்கை நல்லபடியாக நடக்கிறதா?’ என்பதை ‘திருமாளிகையில் திருவாராதனங்கள் நடக்கின்றனவா?’ என்று சாளக்கிராம ஆராதனைகளின் நலனை விசாரிப்பதும் தற்போதும் இல்லை.

‘அவருக்கு வயிற்றில் வலி வந்துள்ளது’ என்பதை ‘நோவு சாற்றிக்கொண்டுள்ளார்’ என்று சொல்வது வழக்கம். இப்போது அப்படிச் சொன்னால் ‘கீழ்ப்பாக்கம்’ என்று நினைக்கலாம்.

பெரியவர்கள் காலமானதை ‘ஆச்சாரியன் திருவடி அடைந்தார்’ என்பதை மட்டும் இன்னும் விடாமல் பின்பற்றுகிறார்கள். ஹிண்டு பேப்பர் விளம்பரங்களில் இதை இன்னும் காணலாம்.

‘குர்ச்சி ஸ்வீகரிக்கணும்’ என்று சமீபத்தில் காதில் விழுந்தது. இது தமிழ் இல்லை என்றாலும் சில பத்தாண்டுகள் கழித்துக் கேட்டதால் மனதிற்கு நிறைவாக் இருந்தது.

கொல்லைகளே இல்லாத பிளாட் வாழ்க்கையில் ‘கொல்லைக்குப் போவது’ என்னும் வழக்கு இல்லாமல் போய் ‘பாத்ரூம் போறேன்’ என்று தமிழில் சொல்கிறோம். இன்னும் ஒரு 10 வருடத்தில் ‘வாஷ் ரூம்’ பழகிவிடும். ‘இரண்டாம் கட்டு’ என்று சொல்பவர்களை ‘ரெண்டுங்கெட்டான்’ என்று நினைக்கத் துவங்குவோம்.

இதெல்லாம் முன்னேற்றம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் போல. ஆனால் அதற்கான விலை நமது பண்பாட்டையும் பழைய சொல்லாடல்களையும் நாம் இழப்பது.

வாழ்க்கையின் வேகத்தில் எதையெல்லாமோ இழக்கிறோம். இதனால் நம்மை நாமே இழக்கிறோம் என்பதை உணராமலேயே.

மனதின் ஆழத்தில் ஏதோ கனக்கிறது.

வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்

ஜெயமோகனின் “ஓலைசிலுவை”யில் வரும் வரிகள், மத மாற்றம் மற்றும் ஊழியம் தொடர்பான ஒரு பக்கத்தில் வரும்
செய்தி தற்போதைய நிலைக்கும் பொருந்துகிறது. என்ன – ஒரு சிறு வேறுபாட்டுடன்.

“மிகப் பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து
விட்டிருந்தார்கள். … அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா
இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குச் சென்றவை மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பசித்துப் பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமல் ஆகி விட்ட
மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை”. – “ஓலைச் சிலுவை”, ஜெயமோகன்

மேல் சொன்ன வரிகள் தற்போதும் அப்படியே உள்ளன. சிந்திக்க மறந்த ஒரு சமூகம் தற்போது சோற்றின் பின்
செல்லாமல் சந்தைக் கலாச்சாரம் என்னும் சேற்றில் விழுந்து, தன்னிலை மறந்து, தனது ‘தேவை – தேவை இல்லை’
என்பது அறியாமல் வாங்கிக் குவிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது. சமுதாய சிந்தனை என்ற ஒன்று இருப்பதே
அறியாமல் நிழல் நாயகரகளை நிஜ நாயகர்களாய் வரித்து “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்ற வகையில்
வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அல்லது வாழ்க்கையால் நகர்த்தப்படுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாததும், அந்த வழக்கத்தை ஏற்படுத்தத் தற்போதைய கல்வி
முறையும் அரசியல் அமைப்பும் தவறியதாலும் நம் மக்களிடையே ஒரு தீனிப்பண்டார மனோபாவம் ஏற்பட்டுள்ளது என்று
எண்ணத் தோன்றுகிறது. தீனி என்பது உணவை மட்டுமே குறிக்கவில்லை இங்கே.

இந்த குறை கூறலில் தாங்கள் முன்னேறிய வகுப்பினர் என்று மார் தட்டிக்கொள்ளும் வைஷ்ணவ அந்தணர்களையும்
குறிப்பிடுகிறேன். சம்பிரதாயங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லை. அதைக் கற்க வேண்டும் என்னும் ஒரு
உந்துதல் இல்லை. வெறுமனே திருமண் ( நாமம் ) அடிப்படையில் சண்டை இடுவது தான் முன்னேறிய வகுப்பின்
லட்சணமா ? ராமானுசர் என்ன சொன்னார் என்றே முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது. தெரிந்தது எல்லாம் “ராமானுச
தயா பாத்தரம்” சொல்லக்கூடாது என்பதும் “ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் ” சொல்ல வேண்டும் என்பதும் தான். “வாழித்
திருநாமம்” உரக்கச் சொல்வதால் மட்டுமே ஒருவன் ராமானுசன் வழியில் வைணவனாகிவிடுவானா ?

இதற்கு 1795-ல் முதல் வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றுவரை தீரவில்லை இந்த சண்டை. என்ன ஒரு நேர விரையம்?

ஜே.மாக்மில்லன் என்ற ஆங்கில நீதிபதி பல ஆண்டுகள் வைஷ்ணவம் கற்று சம்பிரதாயத்தில் அடிப்படையில் ஒரு
வேற்றுமையும் இல்லை என்று மனம் நொந்து 1946-ல் ஒரு தீர்ப்பு வழங்கினார். இப்படித் தொடங்குகிறது இந்தத் தீர்ப்பு:

Bombay High Court
Thiruvenkata Ramanuja vs Venkatacharlu on 13 May, 1946
Equivalent citations: (1947) 49 BOMLR 405
Author: Macmillan
Bench: Macmillan, D Parcq, Beaumont
JUDGMENT
Macmillan, J.
1. Their Lordships address themselves in this appeal to the consideration of a
controversy which in one form or another has agitated the Hindu religious community
in the Presidency of Madras for upwards of two centuries. The main question between
the parties relates to the right to regulate the conduct of the services in an
important group of temples ..

ரொம்பவும் சிரமப்பட்டு இந்த ஆங்கிலேயர் வழங்கிய தீர்ப்பின் சாரம் இது தான் – தென்கலையார் அதிகம் உள்ள இடத்தில் ( கோவிலில் ) வடகலையார் ராமானுஜ தயாபாத்ரம் சொல்லாக் கூடாது. அவர்கள் வீடுகளில் சொல்லலாம். ஆங்கில நீதி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்த பெருமை ஐயங்கார்களையே சாரும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வைணவம் தோன்றியது. இராமானுசரே 1017-ம் ஆண்டில் சமண, அத்வைத, பௌத்த
வாதங்களை வென்று வைணவத்துக்கு ஒரு வழி காட்டினார். வகைப் படுத்தினார். “கோவில் ஒழுகு” என்று திருமால் கோவில்களில் ண்டடிபெற வேண்டிய உற்சவங்கள் பற்றி எழுதிவைத்துள்ளார்.  வைணவம் அதற்கு முன்பும் இருந்துள்ளது. திருமால் வழிபாடு ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் பாலி முதலானா இந்தோனேஷிய மாநிலத்திலும்
அப்போதே இருந்துள்ளது.

இப்படி இருக்க ராமானுசருக்குப் பின் இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகள் கழித்து முறையே தோன்றிய
ஆச்சாரியர்களான வேதாந்த தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் பெயரில் இவ்வளவு வேறுபாடுகளா ? இந்தக்
காலகட்டத்தில் இங்கிலாந்தில் ஒரு நாகரீகமான அரசாங்கங்களே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அரசாட்சியின் நீதிபதி
உங்களுக்குத் தீர்ப்பு வழங்குவது வெட்கக்கேடு இல்லையா? பகுத்தறிவைப் பணயம் வைத்துவிட்டீர்களா?

ராமானுசர் காலம் கி.பி. 1017 – 1037.
வேதாந்த தேசிகர் காலம் கி.பி. 1268 – 1369
மணவாள மாமுனி காலம் கி.பி. 1370 -1443

இவர்களில் தேசிகர் வடகலையாரின் தலைவராகவும் மணவாளர் தென்கலையார் தலைவராகவும் கொள்ளப்படுகின்றனர்.
ஆக தேசிகர் காலத்தில் தென்கலை சம்பிரதாயம் இல்லை. ராமானுசர் காலத்தில் இப்படி வேறுபாடுகளே இல்லை.
இதற்கெல்லாம் ஐநூறு ஆண்டுகட்கு முன்பே ஆழ்வார்களின் காலம். ஆக அவர்கள் காலத்திலும் இந்த வேறுபாடுகள்
இல்லை. ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் நாராயணன் தவிர வேறு ஒன்றும் இல்லை. ( ஆழ்வார்களில் பலர்
அந்தணர் அல்லர். )

ஆழ்வார்களாலும் ராமானுசராலும் அங்கீகரிக்கப்படாத இந்த கலைப் பிரிவுகள் அர்த்தம் உள்ளவைதானா ? இவர்கள்
சொல்லாதவற்றைப் பின்பற்றுவதால் இவர்கள் வழியில் இருந்து நீங்கள் விலக வில்லையா ?

இந்தக் காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகள் முன்பு அகோபில மடம் என்னும் வடகலை மடம் உருவானது. இதன் முதல்
ஜீயர் ஆதிவண் சடகோபர், மணவாள மாமுநிகளுக்கு சந்நியாசம் வழங்கியுள்ளார். ஆக மணவாளர் காலத்திலும் இந்த
வேறுபாடுகள், வெறுப்புகள் இல்லை.

தென்கலை வடைகலை இருவரிடமும் பேசிப்பார்த்தேன். “அறிஞர்கள்” என்ற போர்வையில் வலம் வரும் சிலரிடமும்
வாய் விட்டுப் பார்த்தேன். யாரும் சம்பிரதாயங்கள் அடிப்படையில் தர்க்கம் செய்ய முன்வரவில்லை. ஏன் என்றால்
இவற்றை யாரும் படிப்பதில்லை.

மணவாள மாமுநிகளுக்கு மரியாதை செய்ய வேண்டுமா தேசிகர் விக்ரஹத்தை உற்சவத்தின் பொது எழுந்தருளப் பண்ண
வேண்டுமா என்பது தான் இப்போது இவர்களுக்குள் இருக்கும் தலையாயத் தலைவலி. இருவருமே மிகப் பெரிய
ஆச்சாரியர்கள் என்பது இரு கலையாரும் தங்கள் மமதையில் மறந்துவிட்ட ஒன்று.

வடகலையார் கோவில்களை தென்கலைக் கோவில்களாக மாற்றுவது எப்படி என்பதிலும், ராமானுசர் பின் வந்த குரு
பரம்பரையினரை எப்படி அவமதிக்கலாம் என்பதிலுமே இவர்கள் நேரமும் சக்தியும் வீணாகிறது.

சரி. சம்பிரதாயம் என்று வந்தாகி விட்டது. அப்படி என்ன தான் வேறுபாடு இவர்களுக்குள்?

பூனைக்கும் குரங்குக்கும் உள்ள வேறுபாடுதான். பூனை தன் குட்டியைத் தானே சுமக்கிறது. அதாவது பூனைக் குட்டி தான்
பாதுகாப்பாக இருக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப்பூனை அதைக் கவ்வி எடுத்து ஓரிடத்திலிருந்து மற்றோர்
இடத்திற்குச் செல்கிறது. ஜீவாத்மாக்கள் தாங்கள் உய்ய ஒன்றும் அனுஷ்டானங்கள் செய்ய வேண்டியதில்லை. நாராயணன் காப்பாற்றுவான். காப்பாற்றவேண்டியது அவன் கடமை என்கிறது தென்கலை சம்பிரதாயம். மார்ஜார நியாயம்
என்று இது அறியப்படுகிறது ( மார்ஜாரம் – பூனை ).

குரங்கு அப்படி அல்ல. அதன் குட்டி தாய்க் குரங்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது பாதுகாப்பாக
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்ல முடியும். அதாவது அந்தக் குட்டிக் குரங்கு உய்ய அதனிடம் முயற்சி வேண்டும்.
சரணாகதி வேண்டும். அனுஷ்டானங்கள் வேண்டும். எனவே நாராயணன் மோட்சம் தரவேண்டுமென்றால் மனிதன் முயற்சிக்க வேண்டும் என்கிறது வடகலை சம்பிரதாயம். மர்க்கட நியாயம் என்று இதனை அழைப்பர் (மர்க்கடம்-குரங்கு).

இப்படி குரங்குக்கும் பூனைக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள வழிபாட்டு முறைகள் மீது
இத்தனை நூறு ஆண்டுகள் சண்டை இடுவது பகுத்தறிவு தானா ?

இந்தக் கேள்விகளுக்கு இந்த மெத்தப்படித்த மேதாவிகளிடம் தர்க்க ரீதியினாளான பதில் இருக்காது.  இவர்கள் பதில் உரத்த குரலில் “வாழித் திருநாமம்” சொல்வதிலும், ஒரு கலையார் தயா பாத்ரம் சொல்லும்போது மற்ற கலையார் வாய் திறவாமல் உள்ளனரா என்று கண்காணிப்பதிலும் மட்டுமே.

மறந்துவிட்டேன். புளியோதரை, அக்கார அடிசில் மற்றும் ததியோன்னம் – இவற்றில் எதில் சுவை அதிகம் என்னும் தத்துவ விவாதத்திலும் இவர்கள் திறமையுடன் பங்கெடுக்கக்கூடும்.

கண்ண பட்டாச்சாரியாரால் ஆபத்து

Image

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.  இந்தக் கல்வெட்டு தேரழுந்துர் ஆமருவியப்பன் கோவிலில் உள்ளது. திருமங்கை மன்னன் திரு மண்டபம் என்பது பெருமாள் உற்சவக் காலங்களில் வீதி புறப்பாடு முன்னரும் பின்னரும் எழுந்தருளும் மண்டபம்.

இதை 1972ல் தருமபுர ஆதீனகர்த்தர் திறந்து வைத்துள்ளர். தருமையாதீனம் சைவ ஆதீனங்களில் தலையாயது.  இதன் குரு மஹா சன்னிதானம் பரம வைஷ்ணவக் கோவிலில் ஒரு மண்டபத்தைத் திறந்து வைத்தார் என்பது சற்று ஆச்சரியம் அளித்தது.

இதன் தொடர்பான தகவல்கள் குறித்து ஆராய்ந்தேன். சுவையான ஒரு தகவல் கிடைத்தது.

இந்தப் பதாகையைத் திறக்கும் முன்னர் சன்னிதானம் அவர்கள் ஆமருவியப்பனைச் சேவிக்கச் சென்றுள்ளார். சன்னிதியில் அன்று தற்போது 92 வயதாகும் கண்ணன் பட்டாச்சாரியார் இருந்துள்ளார். ஆமருவியப்பனிடம் 72 வருடமாகக் கைங்கர்யம் செய்து வருகிறார் அவர்.

அவர் பெருமாளைச் சேவை செய்து வைக்கும் அழகே தனி. 13-வது ஆழ்வார் போல் அத்துணைப் பாசுரங்களையும் சேவித்து ( வாயினால் சொல்லி ), தல வரலாற்றைச் சொல்லி சேவை செய்து வைக்கும் போது ஆமருவியப்பனே நேரில் வந்து கேட்பது போல் இருக்கும். ( தற்போது இவரது மகன் வாசன் பட்டாச்சாரியார் அந்தப் பணியைச் செய்கிறார்).

குரு மஹா சன்னிதானம் ஒரு அரை மணி நேரம் பெருமாளின் முன்னால் நின்றிருக்கிறார். கண்ண பட்டச்சாரியார் பாசுரம் பாடி சேவை செய்து வைத்துள்ளார்.

வெளியில் வந்து இந்தப் பதாகையைத் திறந்து வைத்த சன்னிதானம், ” இந்த கண்ண பட்டச்சாரியாரால் ஒரு ஆபத்து நேர இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் நான் உள்ளே இருந்தால், இவர் என்னையும் வைணவராக மாற்றி இருப்பார். இப்படி உருகிஆழ்வார் பாசுரங்கள் பாடினால் யாருமே வைஷ்ணவராக வேண்டியது தான்  “, என்று மனம் கனிந்து கூறியுள்ளார்கள்.

சைவ வைஷ்ணவ வேறுபாடின்மை இந்த நிகழ்ச்சியினால் புலப்படுகிறது.  துவெஷம் இல்லாமல் பெரியவர்கள் இயங்கியுள்ளது வியப்பளிக்கிறது.

தற்போதைய “வைஷ்ணவர்கள்”  சிந்திக்க வேண்டும்.