சங்கப்பலகை நிகழ்வுக்கு விடாமல் வருபவர்கள் பலர்.
அதே நேரம் சங்கப்பலகை வாசகர் வட்டக் கூட்டத்திற்கு இதுவரையில் வராதவர்களும் பலர் உள்ளனர். ஒவ்வொரு முறையும் அழைக்கும் போதும் ‘பணி உள்ளது’, ‘அடுத்த முறை வருகிறேன்’, கட்டைவிரல உயர்த்திய படம் என்று எதையாவது அனுப்புவார்கள். என்ன செய்வது ஒன்றரை ஆண்டுகளாக வர முடியாத அளவு வேலை என்று நினைத்துக்கொள்வேன் . ஆனாலும் நான் யாரையும் விடுவதாக இல்லை. எல்லாரையும் ஒவ்வொரு முறையும் அழைத்தே இருக்கிறேன்.
‘தலைப்பெல்லாம் ஒரு ரேஞ்சா இருக்கு சார். சங்கத் தமிழ், சிலம்பு, கம்பன் இப்டியே இருந்தா எப்டி? கொஞ்சம் இறங்கினா நல்லா இருக்கும்’ என்று சொன்னவர் சிலர்.
அனைவரும் வர வேண்டும் என்பதற்காக மனுஷ்யபுத்ரன் லெவலுக்கு இறங்கி அது மாதிரியான தலைப்புகளை வைக்க முடியாது. அது சங்க்ப்பலகையின் கொள்கை முடிவுகளில் ஒன்று.
நமது மொழி சார்ந்த தலைப்புகள், கலை, வேளாண்மை, எழுத்து வடிவங்கள், நில வகைகள் – இவை அனைத்தும் நமது பண்டைய தமிழ் இலக்கியம் சார்ந்து இருத்தல் வேண்டும். அவற்றில் ஆழங்கால் பட்டவர்கள் சில தலைப்புகளில் உரையாற்றுவார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்வு. அவ்வளவுதான் சங்கப்பலகை.
சங்கப்பலகை விஷயமாக இதுவரை யாரிடமும் ஸ்பான்ஸர் கேட்டு நின்றதில்லை. செலவுகள் என்னுடையவை. பேச்சாளர்களுக்கான அன்பளிப்பும் என்னுடையதே. ஒரு மூறை ஒரு நண்பர் பொன்னாடை வழங்கினார். பிறிதொரு முறை இன்னொரு நண்பர் தனிப்பட்ட தனது செலவு என்று சொல்லிப் பேச்சாளருக்குச் சிறு அன்பளிப்பளித்தார். ஸ்பான்ஸர்கள் வேண்டும் என்று நான் கேட்காததற்குக் காரணம் தலைப்புகளையும், பேச்சாளர்களையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாலேயே. கொஞ்சம் ‘சோ’த்தனம் என்று சொல்லலாம்.
சங்கப்பலகையின் ஒரே ஸ்பான்ஸர் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் மட்டுமே. இடம், ஒலி, ஒளி, கணினி உதவி அவர்களுடையது.
பேச அழைக்கப்பட்டவர்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். இதிலும் எந்தவித விட்டுக்கொடுத்தலும் இல்லை.
இனியும் அப்படியே தொடர எண்ணம். தலைப்புகளிலோ, பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலோ எந்த மாறுபாடும் இராது.
‘I know and understand that you are doing some literary work every month. I want to witness and participate in what is actually happening’ என்று மொழி தெரியாவிட்டாலும் நேற்று வந்து ஆதரவளித்த உடன் பணிபுரியும் பிரணய் குமார் என்னும் மைதிலி (பிஹார்)மாநில நண்பருக்கும் நன்றி.
வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.