
வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும் நூல் வடிவம் 2014லிலும் நிகழ்ந்துள்ளன.
தமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்கள், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.
வரலாற்றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
நூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.
நூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.
பி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.