ஆசிரியர்கள்

திராவிட தேசத்தவர்கள், எந்த சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவசியம் கண்ணீருடன் நன்றி சொல்ல வேண்டியவர்கள் இருவர். 

முதலாமவர் சங்கர பகவத்பாதர்.

சங்கரர் இல்லையெனில் சிருங்கேரி மடம் இல்லை. மடம் இல்லையெனில் வித்யாரண்ய தீர்த்தர் இல்லை. வித்யாரண்யர் இல்லையெனில் ஹரிஹரன், புக்கன் இல்லை. இவர்கள் இல்லையெனில் கிருஷ்ணதேவராயர் இல்லை, விஜய நகர சாம்ராஜ்யம் இல்லை. அது இல்லையெனில் அஹோபிலம், ஶ்ரீரங்கம், திருமலை, மதுரை, சிதம்பரம் முதலான க்ஷேத்ரங்கள் இல்லை. நாயக்கர் ஆட்சி இல்லை, மன்னார்குடி, திருவண்ணாமலை, கும்பகோண க்ஷேத்ரங்கள் இல்லை, அவற்றின் கோவில்கள் இல்லை.

இன்னொருவர், பின்னர் தோன்றிய ஶ்ரீமத் இராமானுசர். அவர் இல்லையைனில் ஶ்ரீவைஷ்ணவம் மட்டுமில்லாமல், பாரதமெங்கும் பெரும் பண்பாட்டுப் புரட்சிகளும் இல்லை, ராமதாசர் இல்லை, குரு நானக் இல்லை, பாரதம் காத்த சீக்கியமும், மராட்டிய அரசுகளும் இல்லை.

மொத்தத்தில் நாம் ஒருவரும் இல்லை. 

ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்களான இந்த இரு ஆச்சார்யர்களையும் வணங்கி, இன்றைய ஆசிரியர் தினத்தில் இவர்கள் வழியாக நமது ஆசிரியர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைப்போம்.

பி.கு 1: திராவிட தேசம் = தமிழ் நாடு + ஆந்திரம் + கேரளம் + கர்நாடகம்.

பி.கு 2: வித்யாரண்யர் ஹரிஹரனையும் புக்கனையும் சந்திக்கவில்லை, அவர் வேறு என்று ‘முற்போக்கு’பவர்கள் வேறு பாத்திரக்கடை பார்க்கவும்.

அருண்

அருண் முழித்தான்.
 
‘என்ன மச்சி, ஒண்ணும் புரியல. நீ என்ன எழுதிக்கற?’ என்று என் நோட்டைப் பார்த்தான். பி.ஈ. முதலாண்டு, சேலம் பொறியியல் கல்லூரியில் நுழைவுத் தேர்வின் மூலம் சேர்ந்த நான், அருகில் அம்ர்ந்து, மேற்சொன்ன வார்த்தைகளைச் சொன்ன அருணை நம்ப முடியாமல் பார்த்தேன்.
 
‘ஆமாண்டா. புரொபசர் பேசறது ஒண்ணும் புரியல. முழுக்கவே இங்கிலீஷ்ல பேசுவாங்களாடா?’ என்றவனைக் கண்டு பரிதாபமே ஏற்பட்டது. ‘ஒண்ணு பண்ணு. நீ எழுதிக்கோ, ரூமுக்கு வந்து எனக்கு விளக்கிச் சொல்லு’ என்ற அருணை நினைத்து எனக்குக் கவலை பிறந்தது.
 
‘எங்கூர்ல வாத்யாருக்கே இங்கிலீஷ் தெரியாது. எனக்கு மட்டும் எப்பிடித் தெரியும்? முழுக்க தமிழ் மீடியம் தான்,’ என்று தலையணை போல் இருந்த இஞ்சினியரிங் பிசிக்ஸ் புத்தகத்தைப் பிரித்தான் அருண். ‘நாலு வருஷத்துக்குள்ள இந்த புக்க படிச்சுடலாமாடா?’ என்றவனிடம், அது முதலாண்டுக்கான ஒரு நூல் மட்டுமே என்று சொல்ல மனம் வரவில்லை.
 
இஞ்சினியரிங் பிசிக்ஸ் தலையணையை அவன் வாய் விட்டுப் படித்த அந்த நாள் ‘இவன் என்னிக்கிப் படிச்சு என்னிக்கி முடிக்கறது?’ என்று தோன்றினாலும், ‘நீ படிடா. புரியல்லேன்னா சொல்லு, நாம் சேர்ந்து படிக்கலாம்’ என்று சொன்ன என்னை நன்றியுடன் பார்த்தான்.
 
சேலத்தை அடுத்த சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த அருணின் பெற்றோர் ஒருமுறை ஹாஸ்டல் ரூமிற்கு வந்தனர். கண்டாங்கி சேலை கட்டிய அந்த அம்மையார் அருணின் தாய் என்றும், நான்கு முழம் வேட்டியும் அழுக்கேறிய சட்டையும் தோளில் துண்டும் போட்டிருந்த அந்த மனிதர் அவனது தந்தை என்று சத்தியம் செய்தாலும் நான் நம்பத் தயாராக இல்லை.
 
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நெய்வேலி நூலகத்தில் இருந்து நான் எடுத்து வரும் போர்ஸித், வோட்ஹவுஸ் நாவல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், ‘இதெல்லாம் எனக்குப் புரியுமாடா?’ என்று கேட்ட போது நான் உள்ளுக்குள் அழுதேன் என்பது உண்மை. ‘சும்மா படிச்சுப் பாரு மச்சி’ என்று நான் அவனுக்குக் கொடுத்து, அவன் சில நாட்கள் போராடிப் பின்னர் திருப்பித் தந்து, மீண்டும் எடுத்துப் படிக்கத் துவங்கினான். ‘முழுசா புரியல. டிரை பண்றேன்,’ என்றவனை நினைத்துப் பரிதாபப்படுவதா, பாராட்டுவதா என்று தெரியாமல் நின்றிருந்தேன்.
 
ஹாஸ்டலில் ஹிந்து பேப்பர் வாங்குவது என்ற வழக்கத்தை ஏற்படுத்தினேன். நானும் இன்னொருவனும் (அசோக் என்று நினைவு) சேர்ந்து வாங்குவோம். பள்ளி நாட்களின் பழக்கம். ‘அருண், ஹிந்து படி. ரொம்ப இன்றஸ்டிங்கா இருக்கும்,’ என்ற என் பேச்சை நம்பாமல் பின்னர் தினமும் படிக்கத் துவங்கினான்.சில நாட்களில் ‘இன்னும் ஹிந்து வரலியாடா?’என்று பிடுங்கத் துவங்கினான்.
 
ELA – English Literary Association – என்கிற அமைப்பில் இணைந்தான் என்று நினைவு.அதற்கு என்னையும் சேர்த்து ஆறு பேர் வருவார்கள்.அங்கு ஆங்கில நூல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.
 
நான்கு வருட முடிவில் மெக்கானிக்கல் பிரிவில் கல்லூரியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, இன்று ஆஸ்திரேலியாவில் பெரிய பதவியில் இருக்கும் அருண் தற்போது எழுதும் ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது.
 
அருண் இன்று தனது ஊருக்கும், சமூகத்துக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான்.
 
அருணின் வெற்றி, விடாமுயற்சியின் வெற்றி,தோல்வியைத் தோற்கடித்த வெற்றி, கருணை மனம் கொண்ட பாரத தேவியின் வெற்றி.
 
#NEET

‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம்

ஜெயமோகனும் நண்பர்களும் தாரமங்கலத்தில் இருந்து புத்த கயா வரை சென்ற சாலைவழிப் பயணத்தின் அன்றாடத் தொகுப்பே ‘இந்தியப் பயணம்’ என்னும் நூல். அன்றாடப் பயண நிகழ்வுகள், பயணத்தின் போது கண்ணில் படும் காட்சிகள், சுற்றுப்பறம், தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உபி, பிஹார் என்று வேறுபடும் நிலங்களின் வர்ணனைகள், மாறும் சீதோஷ்ண நிலைகள், அவ்விடங்களில் கிடைக்கும் கள் முதலிய பானங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்லும் இப்பயணக் குறிப்புகள் அவ்வூர்களின் கோவில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் அளிக்கத் தவறவில்லை.

பாரதத்தின் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்குச் செல்லும் ஜெயமோகன், தான் கண்ட கோவில்கள், கோட்டைகள் என்று அவற்றின் வரலாறு, ஆண்ட மன்னர்கள் பற்றிய குறிப்புகள் என்று அன்றாடம் எழுதுகிறார். தமிழகம் தவிர்த்த இத்தனை மாநிலங்களின் சிறு வரலாறு குறித்து இத்தனை தகவல்களை அவர் எப்படித்தான் நினைவில் வைத்துள்ளார் என்பது மலைப்பாகவே உள்ளது.

தாரமங்கலத்தில் சைவத்தில் துவங்கும் இவரது பயணம், ஆந்திராவில் வைணவத் தலங்களில் நிகழ்ந்து, புத்த கயாவில் பவுத்தத்தில் முடிவது, பாரதத்தின் பரந்துபட்ட சமயங்களின் ஒத்திசைவைக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது.

india-payanam-10002242-800x800ஆந்திராவில் அஹோபிலம் குறித்த பயணக் குறிப்புகளில் தற்போதைய அஹோபில மடத்தின் ஆரம்ப கால நிகழ்வுகள் குறித்த சரியான செய்திகள் இடம் பெற்றுள்ளது சிறப்பு. செஞ்சு பழங்குடியினர் வாழும் அஹோபில மலைகளுக்குக் காஞ்சிபுரத்தில் இருந்து தனியாளாகச் சென்று, பழங்குடியினரை வைணவர்களாக்கி, அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு சமயமாக வைணவத்தை வளர்த்த ஆதி வண்சடகோப ஜீயர் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளன. ஆனால் அஹோபில மடம் தென்கலை வைணவர்களுக்கானது என்பது தவறு. அது வடகலை வைணவர்களுடைய பிரதான மடம். தமிழ் மொழிக்கு அம்மடம் அளித்து வரும் முதன்மையையும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பயணிக்கும் போது அம்மாநிலத்துச் சாலைகள் பற்றிக் குறிப்பிடுவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. அவசியம் பா.ஜ.க. அரசு கவனிக்க வேண்டிய ஒன்று இப்பகுதி.

பயணிக்கும் பல மாநிலங்களிலும் பிழைப்பு தேடிச் சென்றுள்ள தமிழர்களைச் சந்திக்கிறார் ஆசிரியர். ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்னும் வெற்றுக் கோஷத்தைக் கண்டிக்கும் விதமாக உள்ளவை இப்பகுதிகள்.

கோவில் இடிபாடுகள் என்றாலே இஸ்லாமிய மன்னர்களின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. அவ்வாறே அவர் காட்டும் கோவில்களும், பண்டைய கல்வி நிலையங்களும் இடிந்து தத்தமது பழைய வரலாற்றைக் கூறுகின்றன.

ஜெயமோகனின் கூரிய பார்வை நம்மைப் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் இந்து அரசர்கள் ஆண்ட போதும் இஸ்லாமிய மசூதிகளுக்கு இடம் அளித்தார்கள் என்னும் தகவலைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.  பெனுகொண்டா நகரில் பாபையா தர்க்கா இருந்துள்ளதைச் சுட்டும் ஆசிரியர், ஷெர் கான் மசூதியை 1564ல் சதாசிவ ராயர் கட்டினார் என்று கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறார். மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை பற்றி இன்று ஓலமிடும் இடதுசாரிகளும் பகுத்தறிவாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய பகுதி இது.

பல கோவில்களைப் பற்றிக் கூறும்போதெல்லாம் தமிழ் நாட்டுக் கோவில்களுடன் அவற்றை ஒப்பிட்டுக் காட்டுவது பாராட்டும்படி உள்ளது. வாஜ்பாய் துவங்கிய தங்க நாற்கரச் சாலைத் திட்டம் எப்படி காங்கிரஸ் ஆட்சியில் அழிக்கப்பட்டது என்பதைத் தனது ஆந்திர, மத்தியப் பிரதேசச் சாலைகள் பற்றிய குறிப்புகளில் வெளிப்படுத்துகிறார் ஜெயமோகன்.

விறுவிறுப்பாகவும், அவசரமாகவும் எழுதப்பட்ட அன்றாடக் குறிப்புகள் என்பதால் சில இடங்களில் மேலதிக வர்ணனைகள் இல்லாமல் இருக்கிறது. நூலாக வெளியிடும் போது அவற்றைச் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

பாரத தரிசனத்தைத் துவங்கும் யாருக்கும் பயனளிக்கும் நூல் ‘இந்தியப் பயணம்’. இதை இங்கே வாங்கலாம்.

தனி நாடு அடைவது எப்படி?

தனி நாடு அமைத்தே தீருவோம்.

தேரழுந்தூரைத் தலை நகராகக் கொண்ட கம்ப நாட்டை அமைத்தே தீருவோம். கம்பருக்குத் தீங்கிழைத்த, தஞ்சையைத் தலை நகராகக் கொண்ட சோழ நாட்டின் மீது படை எடுப்போம். இதற்காகத் தேரழுந்தூரின் வடக்குவீதி அரசின் பிரதமர் ஆதரவையும், தேரழுந்தூர் சர்வமான்ய அக்ரஹார அரசின் ஜனாதிபதியின் ஆதரவையும் பெறத் தயங்க மாட்டோம்.

இவ்வளவு ஏன்? கும்பகோண அரசின் முதல் மந்திரியுடன் பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இனி கும்பகோணத்தின் படைகளுடன் சேர்ந்துகொண்டு, தஞ்சையை நோக்கித் தேரழுந்தூர்ப் படைகள் எந்நேரமும் முன்னேறும்.

கம்பன் என்றால் அவ்வளவு இளக்காரமா? கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற ஶ்ரீரங்கத்தில் எவ்வளவு எதிர்ப்பு? மறக்க மாட்டோம் அநீதியை. ஆழ்வார் பாசுரங்களைப் பாடலாமாம், கம்பன் எழுத்தைப் பாடக் கூடாதா? கம்பனும் இராமனைப் பற்றித்தானே பாடியுள்ளான்?

கம்பன் மீதுள்ள காழ்ப்பால் அவனது மகன் அம்பிகாபதியைச் சோழன் எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளான்? இதற்கெல்லாம் தீர்வு கம்ப நாடென்னும் தனி நாடு தான்.

என்ன கேட்டோம்? கம்பனின் பாடலை அங்கீகரிக்கச் சொன்னோம். தேரழுந்தூர் என்றால் இளக்காரமா? எங்களைக் கண்டால் தஞ்சை சோழப் பேரரசுக்கு அவ்வளவு இளக்காரமா?

இன்னும் என்ன கேட்டோம்? திருமங்கையாழ்வார் பாடலுக்கு நம்மாழ்வார் பாடலுக்கு உள்ள ஏற்றத்தைத் தாருங்கள் என்றோம். கொடுத்தார்களா சோழ அரச வஞ்சகர்கள்? பாண்டிய நாட்டின் நம்மாழ்வாருக்கும், பெரியாழ்வாருக்கும் உள்ள அந்தஸ்தை திருமங்கை ஆழ்வாருக்குக் கொடுக்க மனம் இல்லையே உங்களுக்கு?

‘நாயக-நாயகி பாவ’த்தில் திருமங்கை ஆழ்வாரும் தான் பாடியிருக்கிறார். அதென்ன பாண்டிய நாட்டு ‘நாயக-நாயகி பாவ’ பாசுரங்களுக்கு மட்டும் ஏற்றம்? பராங்குச நாயகி என்றால் இங்கே பரகால நாயகி. வண்டு முதற்கொண்டு தூது விட்டுப் பாடியுள்ளார் திருமங்கை. ‘தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதை’ பாசுரத்துக்கு ஈடாகுமா உங்கள் பாண்டியப் பாசுரங்கள்?

என்னதான் காரணம்?

ஏனென்றால், திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்ப்பக்கம். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்குறையலூர். என்ன இருந்தாலும் உங்களுக்கு வேற்று நாட்டுக் காரரின் பாசுரங்கள் தான் உசத்தி. அதனால் தானே பாண்டிய நாட்டுப் பெரியாழ்வாரையும், நம்மாழ்வாரையும் கொண்டாடுகிறீர்கள் ?

இதற்கு ஒரே தீர்வு தனி நாடு தான். கம்ப நாடு. இது கம்பனுக்கும், திருமங்கை ஆழ்வாருக்கும் குரல் கொடுக்கும் ஒரே தேசம்.

வெற்றி வேல், வீர வேல். படை எழுக, திரை விலக, கம்பன் புகழ் ஓங்க. போர், போர், தனி நாட்டுக்கான போர்.

‘பரத் ராம். அப்பா தூக்கத்துல ஏதோ உளர்றார பார். ஏஸி போடணுமா கேளூ. தமிழ் நாட்டுல கண்ட அசடுகளும் பேசறதெல்லாம் படிக்காதீங்கோன்னா கேட்டாதானே’

கொழுக்கட்டை மஹாத்மியம்

நெய்வேலியில் ஸத் சங்கத்துக்கு எதிரில் ஸ்டோர் ரோடு ஜங்ஷனில் மேடையில் நாலு பேரும், கீழே மூன்று பேரும், மொத்தமாக எட்டு பேர் (வாக்கிங் ஸ்டிக்குடன் நிற்கும் சிலையையும் சேர்த்து) கன்னா பின்னாவென்று வசை பாடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டது என்று அர்த்தம். சைக்கிளை சற்று வேகமாக மிதித்து வீடு வந்து சேர்ந்தால் பாட்டியாத்து கொழுக்கட்டை காத்திருக்கும்.
‘பாட்டி’ என்பது இரண்டு வீடுகள் தள்ளி இருந்த பிரகாஷின் பாட்டி, சுப்பிரமணியம் மாமாவின் மகன். பாட்டி எங்களுக்கும் பாட்டி தான். அவ்வளவு அன்பு. ‘பாட்டி ஆமருவிக்கும் கண்ணனுக்கும் குடுக்கச் சொன்னா’ என்று பிரகாஷ் கொண்டுவந்து கொடுத்திருப்பான்.
எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்து கொண்டாடுவதில்லை என்பதால் பசங்களுக்கு என்று பாட்டி கொடுத்தனுப்புவாள். அதை வெளிப்பாத்திரம் என்று சொல்லி தனியாக வைத்திருப்பார்கள். வெளியோ, உள்ளோ – எனக்கு அதனுள்ளிருக்கும் கொழுக்கட்டை தேவாம்ருதமாக இருக்கும்.
imagesஅதெப்படித்தான் ஐயர்கள் வெல்லம் வைத்து கொழுக்கட்டை செய்கிறார்களோ என்று வியந்ததுண்டு. எல்லா ஐயர் வீடுகளிலும் ஒரே சுவையுடன் பிள்ளையார் கொழுக்கட்டை இருப்பது ஆராயும் சீர்மைத்தே.
ஒருமுறை எங்கள் பிடுங்கல் தாங்காமல் வீட்டில் அதே போல் கொழுக்கட்டை செய்கிறேன் பேர்விழி என்று வெல்லம் போட்ட உப்புமா கீண்டப்பட்டதை நெய்வேலி கெஜட்டில் போட்டது லோக பிரசித்தம்.
பிறகு புதிய முறையில் ‘காரடையான் நோன்பு கொழுக்கட்டை’ செய்கிறேன் என்று துவங்கி, அதில் வெல்லம், உப்பு என்று இரண்டு வகை செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரம் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட பந்துக்குப் பஞ்சமில்லாமல் ஆனது. Reduce, Reuse, Recycle என்று சிங்கப்பூரில் இப்போது சொல்கிறார்கள். நாங்கல்லாம் அப்பவே அப்புடி என்று சிங்கப்பூர் அரசுக்குச் சொல்லலாம்.
images-2ஐயங்கார்கள் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதை சாமர்த்தியமாகச் செய்வார்கள். மண் பிள்ளையாரை வாங்கி அவருக்குத் திருமண் இட்டு, ‘தும்பிக்கையாழ்வார்’ என்று நாமகரணம் பண்ணி, அவருக்குப் பக்கத்தில் பெருமாள் படத்தையும் ஏள்ளப்பண்ணிவிடுவது சில ஐயங்கார்களின் வழக்கம். யாராவது வைதீகர்கள் வந்துவிட்டால் ‘பசங்களுக்காக, கொஞ்சமா, நம்ம சம்பிரதாயப்படி..’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு மழுப்பாமல் ‘கொழுக்கட்டை சாப்பிட ஆசையாக இருந்தது’ என்று சொல்லியிருக்கலாம்.
எங்கள் வீட்டில் இந்த வழக்கம் இல்லை. பிரகாஷின் பாட்டி இருந்தாரோ பசங்கள் நாங்கள் பிழைத்தோம்.
இப்படியாக இருந்த எங்கள் கொழுக்கட்டைத் தொடர்பு ஒரு நாள் நின்றுபோகும் போல் ஆனது. பிரகாஷ் பாட்டி காலமானார். பாட்டி போனது துக்கம் தான் என்றாலும் ‘இனி கொழுக்கட்டை கிடைக்குமோ கிடைக்காதோ’ என்கிற தவிப்பு இருந்தது வாஸ்தவம்.
அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அன்று வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. பிரகாஷையோ, அவன் தம்பி ஶ்ரீதரையோ காணவில்லை. ‘சரி நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்’ என்று எண்ணி நொந்து போய் பாடம் படிக்க உட்கார்ந்தேன்.
பிரகாஷ் வேகமாக வந்தவன், ‘அம்மா குடுக்கச் சொன்னா’ என்றான்.
பிள்ளையார் கைவிடவில்லை.

தி ஹிந்து – ஒரு மினி பார்வை

வாஞ்சிநாதன் பற்றிய கீழ்த்தரமான கட்டுரை வெளியிட்டதற்கு தி ஹிந்து வருத்தம் தெரிவித்துள்ளது (அ) தெரிவிப்பது போல் எழுதியுள்ளது.

கட்டுரையை வாசித்தேன். தகவல் பிழைகள் இருப்பதை மூன்றாம் வகுப்புப் பிள்ளை கூட கண்டுகொள்ளும் அளவில் உள்ளது கட்டுரை. எழுத்தில் கிஞ்சித்தும் தரம் என்பது இல்லை. முரசொலியைப் படிக்கிறோமா என்று எண்ணத் தோன்றியது. தி ஹிந்துவில் தரம் இறங்கியுள்ளது பற்றிப் பலமுறை எழுதி இருந்தாலும், இம்மாதிரி அடிப்படைத் தகவல்களைக் கூட சரி பார்க்காமல் எழுதியிருப்பது, அதிர்ச்சியே. முன்னொரு முறை நாலாந்தர நக்கீரனில் ‘ஜெயலலிதா பசு மாமிசம் சாப்பிட்டார்’ என்பதாக வந்த கட்டுரையை ஆங்கில தி ஹிந்து மொழிபெயர்த்து வெளியிட்டது. அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது போல் தெரிகிறது. தமிழ் ஹிந்து ‘தி நக்கீரன்’ என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம்.

ஆங்கில தி ஹிந்து சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது போல் படுகிறது. எடிடோரியல், ஓப்பன் பேஜ், பேட்டி முதலியவற்றை விலக்கி வைத்துப் பார்த்தால், முன்னேற்றம் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் தென்படுகிறார்கள்.ஆனால் ஆங்கிலத்தின் தரம் குறைந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் , செய்தியாளர்கள் தங்கள் கட்டுரைகளில் ‘ஆராய்ச்சி’ என்பதே இல்லாமல் பார்த்துக் கொள்வது ‘சிறப்பாக’ உள்ளது. வெறும் தகவல்களைச் சொல்வதற்கு மேல் இவர்கள் வேறொன்றையும் செய்வதில்லை. மாத்ருபூதம் என்பார் எழுதும் நகைச்சுவைப் பகுதி அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறது. மற்றபடி பரத்வாஜ் ரங்கன் எழுதும் சினிமா விமர்சனம், வாராந்திர நூல் விமர்சனங்கள் மற்ற நாளிதழ்களை விட நன்றாக உள்ளன. நூல்கள் பெரும்பாலும் தேச துரோக இடது சாரி நூல்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதையெல்லாம் யாராவது ஹிந்துவில் பணிபுரிபவர்கள் மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லலாம். ஆனால் இடதுசாரிகளின் காதுகள் மார்க்ஸ்-ஈயத்தால் அடைக்கப்பட்டவை என்பதால் பலன் இருக்குமா என்று தெரியவில்லை. சங்கை ஊதிப் பார்க்கலாம். அவ்வளவுதான்.

ஹிந்துவில் ‘பிசினஸ் லைன்’ நல்ல கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. மீடியாக்ரிட்டி இன்னமும் அண்டவில்லை.

முக்கியமாக ஹிந்துவின் ஐ-பேட் செயலி சிறப்பாக உள்ளது. எடிட்டோரியல், ஓப்பன் பேஜ், பேட்டிகள் முதலியவை நம் கண்ணில் படாமல் இருக்க செயலியில் வழி உள்ளதா என்று தெரியவில்லை. தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், வலம் முதலியவை ஹிந்துவின் ஐபேட் செயலி போல் செய்துகொள்வது நல்லது.

ஒரு காலத்தில் ‘ஹிந்து’வில் பணியாற்றவேண்டும் என்று விரும்பியிருந்தேன். இன்னமும் விரும்புகிறேன். ஆனால் கொள்கை ரீதியில் முடியமா என்று தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் ஒரு கொலைப்படம்

சமீபத்தில் மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தேன். ஸ்டிறைட் டைம்ஸ், தமிழ் முரசு, கிண்டில் புத்தகங்கள், மலாய் மொழி தினசரியின் படங்கள் என்று அனைத்தையும் பார்த்து முடித்த பின் வேறு வழி இல்லாமல் டி.வி. பார்த்தேன். சேனல் ந்யூஸ் ஏஷ்யாவில் எப்படித்தான் ஒரே செய்தியை நாள் முழுவதும் போடுகிறார்களோ? செய்தியாளருக்கே போர் அடிக்கவில்லையா என்று நினைத்துக் கொண்டிருக்கையில் வசந்தம் ஒளிவழியில் ‘மதயானைக் கூட்டம்’ என்று ஒரு திரைப்படம் துவங்கியது.

தயக்கத்துடன் பார்க்கத் துவங்கினேன். ஒரு இழவுடன் துவங்கியது படம். ஆரம்பமே பிரமாதம் என்று மலாய் சேனல் சூர்யாவை நாடினேன். இரண்டு பேர் ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். திரும்பவும் சி.என்.ஏ. திரும்பவும் அதே செய்திகள். தூக்கமும் வரவில்லை. மீண்டும் வசந்தம். ஒரு இழவு முடிந்து இன்னொன்று துவங்கியிருந்தது போல் இருந்தது. இல்லையாம். அந்த ஒன்றே நீண்ண்ண்ண்டு கொண்டிருந்தது.

இறந்த ஒருவரின் ப்ளாஷ்பேக், மீண்டும் இழவு, மீண்டும் ப்ளாஷ்பாக், கத்திக் குத்து, இல்லை, அரிவாள் வெட்டு, ஒரு மலையாளப் பெண் முகம் காட்டுகிறாள், மீண்டும் சாவு, மீண்டும் ஒப்பாரி..

இப்படியாகப் பல ஒப்பாரிகளையும், இழவுகளையும் காட்டி, ஒவ்வொன்றின் நுண் காரியங்களையும் விளக்கி, மீண்டும் கொலை செய்து, மீண்டும் … முடியல சாமி.

யார் யாரை வெட்டுகிறார்கள் என்பது போய், அடுத்த முறை யாருடைய இழவு வரும் என்று எதிர்பார்க்கும்படி இருந்தது படம். கடைசியில் படத்தில் யாராவது மிஞ்சுவர்களா இல்லை எல்லாருவடைய காரியத்தையும் காட்டுவார்களா என்று யோசிக்கத் துவங்கினேன்.

ஒரு வழியாகப் படம் முடிந்தது. ஒரு பிளிரல் ஒப்பாரியுடன் தான்.

சாதியை ஒழிப்போம் என்கிறார்கள். கள்ளப்பய என்று பெருமிதம் தொனிக்கும் வசனங்கள். தேவர் பெருமை வேறு.

க்ளேனெகல்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து அனிமல் ப்ளானெட் சேனல் வையுங்கள். மிருகங்கள் அனாவசியமாகக் கொல்வதில்லை.

சொந்தம்

‘இதென்ன, ப்ராமினா? அப்பா பேர் ஏதோ ஐயங்கார்னு போட்டிருக்கு? இங்க வாங்க மிஸ்டர்,’ என்றார் டேவிட் ஞானாசீர்வாதம்.

கடலுர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசில் இருந்து ஸ்டேட் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல் எல்.டி.ஸி (Lower Division Clerk) வேலைக்குப் போகச் சொல்லி வந்த இண்டர்வியூ கார்டை பார்த்தபடியே வந்தான் 17 வயது தேவா. 1962ல் இப்படி இண்டர்வியூ கார்ட் வந்தால் வேலை உறுதி.

‘பெருமாள் கண்ணைத் தொறந்துட்டார். பத்தானியாத்து கடனை அடைச்சுடலாம். நன்னா பார்த்து வேலை செய்டா. நல்ல பேரோட நன்னா இரு,’ வாழ்த்தி அனுப்பியிருந்தாள் அம்மா.

‘நீயும் வாம்மா கடலூருக்கு. வந்து எனக்குத் தளிகை பண்ணிப்போடு,’ எப்படியும் வரப் போவதில்லை, கேட்டு வைப்போம், வந்தால் அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்ற நப்பாசையில் கேட்டான் தேவா. நார்மடிப் புடவையுடன் அவள் வீட்டை விட்டே வருவதில்லை என்றாலும் அம்மாவாயிற்றே, அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணம் தான்.

‘நன்னாருக்கு. நீ போய் வேலை செஞ்சுண்டு தனியா இருந்தா ரெண்டு காசு சேரும். அப்பாவோட காரியத்துக்கு வாங்கின கடன், பத்தானியாத்துக் கடன்னு ஏகப்பட்டது இருக்கு. என்னையும் அழைச்சுண்டு போனா, பொண்ணையும அழைச்சுண்டு வரணும். செலவு ஆகாதா? இதெல்லாம் எப்படி அடைக்கறது?’ என்ற எதிர்பார்த்த பதில் கிடைத்தது.

‘என்ன மிஸ்டர், இஸ் யுவர் பாதர்  அன் ஐயங்கார்? ஆர் யூ நாட் ப்ரம் பாக்வார்ட் கிறிஸ்டியன் கம்யூனிட்டி?’ என்ற டேவிட் ஞானாசீர்வாதம் அப்போது தான் நிமிர்ந்து, திருமண்ணுடன் நின்ற தேவாவை முதல் தடவையாகப் பார்த்து, கண்கள் விரிந்தார்.

‘ப்ளடி ஹெல். ஐம் சாரி மை பாய். இந்த எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல கொழப்பிட்டாங்க. இந்த எல்.டி.சி. போஸ்ட் ரிஸர்வ்ட் கம்யூனிட்டிக்கு. உங்க பேர் கொஞ்சம் அப்பிடியும் இப்பிடியுமா இருக்கு. ப்ராமின்லயும் தேவநாதன்னு பேர் வைப்பாங்களா?’ என்றார்.

‘ஆமாம் ஸார். இங்க பக்கத்துல திருவஹீந்திரபுரம்னு ஒரு ஊர். அந்த பெருமாள் பேர் தேவநாதன்,’ வாய் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, மனது பத்தானியாத்துக் கடன், கோபால் முதலியார் மாட்டுக் கடன் என்று கணக்குப் போட்டது.

‘ஓகே. ஐம் சாரி. நான் உங்கள முதல்லயே பார்த்திருக்கணும். யூ மே ஹாவ் டு லீவ்’ என்றவர் கீழே குனிந்து கொண்டார்.

‘அப்ப என் வேலை? நீங்க டைப் அடிக்க சொன்னதா ப்யூன் சொன்னாரே?’ வேலையை எப்படி விடுவது ?

‘அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் பையன் பார்த்துப்பான். நீ எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் போப்பா.’

திடீரென உலகம் இருண்டு, கால்களில் வலு இன்றி சேரில் அமர்ந்த தேவாவின் தோளைத் தொட்ட டேவிட் ஞானாசீர்வாதம், ‘ஆர் யூ ப்ரம் எ புவர் பேமிலி?’ என்றார், தேவாவின் வேஷ்டியையம் கால் செருப்பையும் பார்த்தபடி.

எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸில் சூப்பரிண்டெண்ட், ‘மிஸ்டர் தேவநாதன், உங்க கேஸ் பத்தி டேவிட் சொன்னார். அடுத்த மாசம் நெய்வேலில எல்.டி.சி. வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. உங்க பேர மொதல்ல போடச் சோல்லியிருக்கார். நீங்க அவருக்குச் சொந்தமா?’ என்றார்.

‘சொந்தம் தான். ஒரு வகையில், எல்லாரும்’  நினைத்துக் கொண்டான் தேவா.

%d bloggers like this: